மயிலாடுதுறை: சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை (International Day Against Drug Abuse) முன்னிட்டு தமிழக காவல்துறையினர் பல்வேறு விதமான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக போதை ஒழிப்பு விழிப்புணர்வு பதாகைகள், சுவரொட்டிகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
கஞ்சா, மெத்தம்பெட்டமைன் (Methamphetamine), ஆம்பெட்டமைன் (Amphetamine), LSD ஸ்டாம்புகள், Hash Drug எனப்படும் கஞ்சா ஆயில் போன்ற நவீன காலத்து போதை பொருட்கள் மற்றும் டைடல் (Tidal Tablet), நைட்ரவெட் (Nitravet Tablet) உள்ளிட்ட உடல் வலி நிவாரண மாத்திரைகள் (Body Pain Relief Pills) உள்ளிட்ட போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல் தடுப்பதற்காக காவல்துறை மூலம் பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். தீவிரமாக கண்காணித்து சட்டவிரோதமாக போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள், பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர்.
மேலும், இளைய சமுதாயம் போதை பொருட்களுக்கு அடிமையாகி எதிர்காலத்தை தொலைக்காமல் தடுப்பதற்காக காவல் அதிகாரிகள் தலைமையில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு, அறிவுரைகளை வழங்கி வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக, மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பாக பள்ளி மாணவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து, ஓவிய போட்டி, கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசளிப்பு விழா மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போதைப் பொருளுக்கு எதிரான குறும்படம் திரையிடப்பட்டது.
வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா சான்றிதழ்கள் மற்றும் மெடல்களை வழங்கி கௌரவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ் நிஷா கூறுகையில், "சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட காவல்துறை சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவியபோட்டி, பேச்சுபோட்டி, கட்டுரைபோட்டி உள்ளிட்ட ஏராளமான போட்டிகள் நடத்தப்பட்டன. 120 பள்ளிகளை சேர்ந்த 2000 ற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இன்று நடத்தப்பட்டது.
கடந்த இரண்டு வருடத்தில் 60 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 1 லட்சத்து 83 ஆயிரத்து 386 லிட்டர் அளவுடைய, சட்டத்திற்கு புறம்பாக கடத்திவரப்பட்ட மதுபானங்கள், சாரயங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 50 கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. 46 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளி மாநிலங்களில் இருந்து சட்டத்திற்கு புறம்பாக சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதை தடுக்கும் வகையில் நண்டலாறு, நல்லாடை, ஆயப்பாடி ஆகிய இடங்களில் காவல் சோதனை சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், சட்டத்திற்கு புறம்பாக போதைப் பொருட்கள் விற்பனை செய்தால் அதனை காவல்துறையினருக்கு தகவல் அளிக்கும் வகையில் புதிதாக வழங்கப்பட்ட வாட்ஸ்அப் எண் (9626169492) என்ற எண்ணிற்கு பொதுமக்கள் தகவல் அளிக்குமாரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேட்டுகொண்டார். தகவல் அளிப்பவரின் விபரம் பாதுகாக்கப்படும்" என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் நடப்பாண்டியில் 14 ஆயிரம் கிலோ கஞ்சா பறிமுதல்: ஏடிஜிபி மகேஷ்குமார் தகவல்