மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் உள்ள புகழ்பெற்ற தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
தேவாரப்பாடல் பெற்றதும், மார்க்கண்டேயனுக்காக எமனை வதம் செய்த அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றான இத்தலத்தில் 60, 70, 80, 90, 100 ஆகிய வயது பூர்த்தி அடைந்தவர்கள் சிறப்பு ஹோமங்கள் நடத்தி சுவாமி அம்பாளை வழிபட்டால் ஆயுள் விருத்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயில் 25 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகத்திற்காக திருப்பணிகள் நடைபெற்று நிறைவுறும் தருவாயில் உள்ளன. அதனைத் தொடர்ந்து வரும் மார்ச் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தசமி திதி உத்திராடம் நட்சத்திரம் அமிர்த யோகம் ரிஷப லக்னத்தில் காலை 10 மணி முதல் 11:30 மணிக்குள் தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தபரமாச்சாரியசுவாமிகள் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
கும்பாபிஷேக முன்னேற்பாடுகள்
பல்வேறு ஆதீனங்கள் உள்ளிட்ட இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இதற்கான கோயிலுக்கு வர்ணம் தீட்டும் பணிகள் யாகசாலை அமைக்கும் பணிகள் மற்றும் சிறப்புபூஜைகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் இன்று (மார்ச்19) கும்பாபிஷேக முன்னேற்பாடுகள் குறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா கோயிலில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது கோயில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து தருமபுரம் ஆதீன தென்மண்டல கட்டளை விசாரணை ஸ்ரீமத் திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள் எடுத்துரைத்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், சுகாதாரத்துறை இணை இயக்குநர் டாக்டர். சிவகுமார் அறநிலையத் துறை, தீயணைப்புத் துறை காவல் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதனைத்தொடர்ந்து 2 மணிநேரம் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் லலிதா தொடர்ந்து அலுவலகத்திற்குச் சென்று முன்னேற்பாடுகள் குறித்து வருவாய், ஊராட்சி, சுகாதாரம், அறநிலையத்துறை, பொதுப்பணித் துறை, காவல்துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதையும் படிங்க: "என்னுள்ளே... என்னுள்ளே... ' பாடல் சிறப்பாக அமைய ரஜினியே காரணம் - இளையராஜா பேச்சு!