ETV Bharat / state

அறுவடை செய்த நெல்மணிகளை விற்கமுடியாமல் விவசாயிகள் தவிப்பு.. அரசு நடவடிக்கை எடுக்குமா?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 30, 2023, 12:33 PM IST

இயந்திரம் கொண்டு அறுவடை செய்து வரும் நிலையில் நெல்மணிகளை விற்கமுடியாமல் விவசாயிகள் தவிப்பு
இயந்திரம் கொண்டு அறுவடை செய்து வரும் நிலையில் நெல்மணிகளை விற்கமுடியாமல் விவசாயிகள் தவிப்பு

Crop cultivation in Mayiladuthurai district: காவிரி டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் இன்றி குறுவை பயிர்கள் காய்வதால் மயிலாடுதுறை மாவட்டத்தில் பம்புசெட் மூலம் குறுவை சாகுபடி மேற்கொண்டு தற்போது அறுவடை செய்து வருகின்றனர். மேலும் அறுவடை செய்த நெல்லை மிகக்குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இயந்திரம் கொண்டு அறுவடை செய்து வரும் நிலையில் நெல்மணிகளை விற்கமுடியாமல் விவசாயிகள் தவிப்பு

மயிலாடுதுறை: காவிரி டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் இன்றி குறுவை பயிர்கள் காயும் நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பம்புசெட் மூலம் குறுவை சாகுபடி மேற்கொண்டு தற்போது அறுவடை செய்து வருகின்றனர். மேலும் அறுவடை செய்த நெல்லை மிகக்குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது பற்றி விரிவாக விளக்குகிறது இச்செய்தி தொகுப்பு.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டு 90 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய நான்கு தாலுக்கா பகுதிகளில் பம்புசெட் நீரை கொண்டு முன்பட்ட குறுவை சாகுபடி செய்வது வழக்கம். அதன்படி ஏப்ரல் மாதத்தில் விதைவிட்டு நடவுசெய்த பயிர்கள் வளர்ந்து தற்போது விவசாயிகள் அறுவடையை தொடங்கியுள்ளனர்.

ஆனால் மாவட்டத்தில் தேவையான அளவு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாமல் இருப்பதால் அறுவடை செய்த நெல்லை பாதுகாக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் தனியார் வியாபாரிகளிடம் அடிமாட்டு விலைக்கு நெல்லை விற்பனை செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து அடிமாட்டு விலைக்கு நெல்லை விற்பதால் விவசாயிகள் நஷ்டம் அடைந்து உள்ளனர்.

கூலி ஆட்கள் பற்றாக்குறையால் நாற்றுவிட்டு நடவு செய்யும் முறைகளை குறைத்து, நேரடி நெல் விதைப்பு முறை, இயந்திர நடவு என்று நவீன முறைகளை விவசாயிகள் கையாண்டு வருகின்றனர். அதேபோல் அறுவடைக்கும் ஆட்கள் கிடைக்காததால் அறுவடை இயந்திரம் மூலம் அறுவடை செய்யப்பட்டு வருகிறது.

ஒரு நாளைக்கு இயந்திரம் மூலம் பல ஏக்கர் நிலம் அறுவடை செய்யப்படுவதால் ஒவ்வொரு ஊரிலும் ஒரு சில வாரங்களிலேயே ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் அறுவடை செய்து முடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய, மாநில அரசுகள் ‘காரீப் பருவம்’ அக்டோர் மாதம் என்று கணக்கிட்டு கொண்டு ஒரு மாதம் முன்னதாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

ஆனால் மயிலாடுதுறை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் போதுமான அளவு திறக்கப்படாமல் உள்ளது. மாவட்டத்தில் 119 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்தார். ஆனால் மயிலாடுதுறை, செம்பனார் கோயில், குத்தாலம், சீர்காழி, கொள்ளிடம் வட்டாரங்களில் இயந்திரம் மூலம் 30 சதவிகிதத்திற்கு மேல் முன்பட்ட குறுவை அறுவடை பணிகள் முடிந்துவிட்டது.

ஆனால் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை. குறுவை நெல்லை அறுவடை செய்து காயவைத்து பல நாட்கள் மூட்டைகளில் அடுக்கி வைத்திருந்தால் எடைகள் குறைந்து விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும். மேலும் நெல்லை பாதுகாப்பதற்கான வசதிகள் அனைத்து விவசாயிகளுக்கும் இல்லாததால் கால்நடைகள் மற்றும் எலி ஆகியவற்றால் நெல் சேதமடையும்.

மேலும் நெல்லை கொட்டி தார்பாய் போட்டு மூடி வைத்தாலும் தினந்தோறும் வெயிலில் காற்றோட்டத்தில் திறந்து வைத்தால் தான் நெல்லின் நிறம் மாறாமல் இருக்கும் இல்லை என்றால் நெல் சூடாகி கருப்பாக மாறிவிடும். அதனை வியாபாரிகள், கொள்முதல் நிலையங்களில் நெல் சரியில்லை என்று கொள்முதல் செய்ய மாட்டார்கள்.

இத்தகைய காரணங்களால் மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது அறுவடை செய்யப்படும் நெல் 60 கிலோ எடையுடைய ஒரு மூட்டை 1,100 ரூபாய் முதல் 1,160 ரூபாய் வரைக்கும் மிகக் குறைந்த விலைக்கு தனியார் வியாபாரிடம் விற்பனை செய்ய வேண்டிய கட்டாய சூழலுக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்தால் 60 கிலோ எடையுடைய மூட்டைக்கு 1,270 ரூபாய் அளவிற்கு கிடைக்கும்.

தனியார் வியாபாரிகள் எடை கூடுதலாக வேறு எடுப்பார்கள் இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் தான் ஏற்பட்டு வருகிறது. விவசாயிகளிடம் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாதது குறித்து விசாரித்த போது, “கடந்த பருவத்தில் ஒவ்வொரு கொள்முதல் நிலையங்களில் வேலை பார்த்த பட்டியல் எழுத்தர்கள் போடப்பட்ட ரெக்கவரி பணத்தை இன்னும் பலர் செலுத்தவில்லை.

நடப்பு பருவத்தில் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து சிப்பத்திற்கு 40 ரூபாய் பணம் வசூல் செய்யக்கூடாது என்று அதிகாரிகள் நெருக்கடி கொடுப்பதால் பட்டியல் எழுத்தர்கள் எப்படி ரெக்கவரி பணத்தை கட்டுவது என்று குழப்பத்தில் இருப்பதால் கொள்முதல் நிலையங்கள் திறப்பதில் குழப்பம் நீடித்து வருகிறது” என்று கூறியுள்ளனர்.

இதையும் படிங்க: velankanni church:வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்ற பவனி தொடங்கியது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.