ETV Bharat / state

நடுக்கடலில் பைபர் படகு இன்ஜின் வெடித்து விபத்து.. 6 மீனவர்கள் படுகாயம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 19, 2024, 12:25 PM IST

நடுக்கடலில் மீன்பிடி படகில் ஏற்பட்ட விபத்தில் 6 மீனவர்கள் படுகாயம்
நடுக்கடலில் மீன்பிடி படகில் ஏற்பட்ட விபத்தில் 6 மீனவர்கள் படுகாயம்

Fishermen Boat accident: சீர்காழி அருகே நடுக்கடலில் மீன் பிடிக்கச் சென்றபோது ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், படகில் இருந்த 6 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர். மேலும், அவர்கள் சென்ற படகு மற்றும் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாக மீண்வர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

நடுக்கடலில் மீன்பிடி படகில் ஏற்பட்ட விபத்தில் 6 மீனவர்கள் படுகாயம்

மயிலாடுதுறை: சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவர் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தபாபு. இவருக்குச் சொந்தமாக பைபர் படகு வைத்துள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த அகோரமூர்த்தி (48), தர்மராஜ் (25), ஜீவானந்தம் (25), மணியரசன் (35), சித்திரைவில் (43) மற்றும் தரங்கம்பாடி தாலுகாவுக்கு உட்பட்ட வெள்ளகோவில் மீனவ கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன் (34) ஆகிய 6 மீனவர்கள், நேற்று (ஜன.19) மாலை திருமுல்லைவாசல் மீன்பிடித் தளத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.

அப்போது கடலில், சுமார் 20 கடல் மைல் தூரத்தில் தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, நள்ளிரவு நேரத்தில் அவர்கள் சென்றிருந்த படகின் என்ஜினில் திடீரென தீப்பிடித்து எரிந்ததாகவும், அதனால் அவர்கள் படகின் பெட்ரோல் டேங்க் வெடித்து சிதறியதாகவும் மீனவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

அதனை அடுத்து, தீ பைபர் படகில் வேகமாகப் பரவி எரியத் தொடங்கியுள்ளது. இதில், படகில் இருந்த மீனவர்கள் ஜீவானந்தம், மணியரசன், சித்திரைவேல் ஆகியோர் கால்களில் தீக்காயம் அடைந்துள்ளனர். பின்னர், படகில் சிக்கி, தீக்காயத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் 6 பேரும், தங்களின் உயிரை பாதுகாத்துக் கொள்ள கடலில் குதித்துள்ளனர்.

இதையும் படிங்க: குஜராத் படகு விபத்து : 18 பேர் மீது வழக்குப்பதிவு! விபத்துக்கான காரணம் என்ன?

இதனை அடுத்து, அனந்தபாபு மற்றும் குழுவினர் சென்ற பைபர் படகு தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததை, 2 கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மணிகண்டன் மற்றும் சக மீனவர்கள் பார்த்துள்ளனர். அதனை அடுத்து, உடனடியாக விரைந்து வந்து, தீக்காயத்தால் பாதிக்கப்பட்டு, உயிரை பாதுகாத்துக் கொள்ள கடலில் குதித்து தத்தளித்துக் கொண்டிருந்த 6 மீனவர்களையும் காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.

பின்னர், அவர்களை சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தீ விபத்தில் ஜி.பி.எஸ் கருவி, வாக்கி டாக்கி, ஐஸ்பெட்டி மற்றும் பைபர் படகு ஆகியவை முற்றிலுமாக கருகி சேதமடைந்தது. இதனால், தங்களுக்கு சுமார் 10 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர் தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில், இது குறித்து தகவல் அறிந்து வந்த கடலோரக் காவல் குழுமம் மற்றும் சீர்காழி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மீன் பிடிக்கச் சென்றபோது படகு தீப்பிடித்து மீனவர்கள் காயம் அடைந்த சம்பவம் திருமுல்லைவாசல் மீனவ கிராம மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: "தமிழக - இலங்கை மீன்வள அமைச்சர்கள் சந்தித்துப் பேச ஏற்பாடு" - கிழக்கு மாநில ஆளுநர் செந்தில் தொண்டைமான்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.