ETV Bharat / state

பங்காரு அடிகளார் மறைவுக்கு தருமபுரம் ஆதீனம் இரங்கல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 20, 2023, 5:23 PM IST

Etv Bharat
Etv Bharat

Bangaru Adigalar death: பங்காரு அடிகளாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த தருமபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், நாத்திகத்தில் இருந்து தமிழகத்தை மடைமாற்றி ஆன்மீகம் நோக்கி கொண்டு சென்ற பங்காரு அடிகளாரின் மறைவு ஆன்மீக வளர்ச்சிப்பாதையில் பெரும் வீழ்ச்சி என புகழாரம் சூட்டியுள்ளார்.

பங்காரு அடிகளார் இறப்பிற்கு தருமபுரம் ஆதீனம் மடாதிபதி இரங்கல்

மயிலாடுதுறை: மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மாரடைப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்‌. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தொன்மையான தருமபுரம் ஆதீனம் திருமடத்தின் மடாதிபதி தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்காரு அடிகளார் இறப்பிற்கு இன்று (அக்.20) இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'மேல்மருவத்தூர் திருத்தலம் பங்காரு அடிகளார் ஆட்சிக்காலத்தில் உலகளவில் பெரிய சாதனைகளைச் செய்துள்ளது. பட்டிதொட்டியெங்கும், கிராமங்கள் தோறும் பக்தியை உருவாக்கி, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர் ஸ்தாபித்த திருக்கோயிலில் அனைவரும் சென்று வழிபாடு செய்யும் முறையை ஏற்படுத்தியுள்ளார். இது சமயம் பரப்புவதற்கு மிகப்பெரிய சாதனமாக இருந்தது.

நாத்திகத்தை மடைமாற்றியவர்: நமது பக்தியின் மூலமாகவும், பிரச்சாரங்களின் மூலமாகவும் நாம் சாதிக்க முடியாததை அவர் 20 ஆண்டுக் காலத்தில் அவர் தமிழகத்தில் நாத்திகத்தை மடை மாற்றி ஆன்மீக வழியில் இட்டுச் சென்றவர். பல தலைவர்களை அவரது கோயில்களுக்கு அழைத்துச் சென்றவர். கீழ்நிலையில் உள்ள தனது தொண்டர்களை ஒவ்வொரு நிலையில் பணிகளைக் கொடுத்து அவர்களை ஆற்றுப்படுத்தியுள்ளார். கல்விப்பணியிலும் மருத்துவக்கல்லூரி, பொறியியல் கல்லூரி, கலைக்கல்லூரி, பள்ளிகளை நிறுவியுள்ளார்.

மேல்மருவத்தூரில் ரயில் நின்று செல்லும் வகையில், ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நாளில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் தொண்டர்கள் அங்குச் சென்று தொண்டாற்றி வருகின்றனர். ஆன்மீகத் துறையில், சமுதாயத்துறையில், கல்வித்துறையில் மிகப்பெரிய சாதனை படைத்தவர் பங்காரு அடிகளார். அவர் தனது 60 மற்றும் 70ஆவது வயதுகளில் 26வது குருமகா சந்நிதானம் அருளாட்சி காலத்தில் தருமபுரம் ஆதீனக் கோயிலான திருக்கடையூர் கோயிலுக்கு வந்து 60ஆம் திருமணம், 70ஆம் திருமணம் ஆகியவற்றைச் செய்துள்ளார்.

மேலும், 26வது குருமகா சந்நிதானத்தை மேல்மருவத்தூரில் நடைபெற்ற பௌர்ணமி பூஜைக்கு அழைத்து 108 குண்டங்கள் அமைத்து பூஜை நடத்தியுள்ளார். அவரது மகன் அன்பழகன் அண்மையில் தருமபுரம் ஆதீனத்துக்கு வந்து சென்றார். மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்படுத்திய அவரது மறைவு ஆன்மீக வளர்ச்சிப்பாதையில் பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது' என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பங்காரு அடிகளார் மறைவு; முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.