ETV Bharat / state

“காவிரி விவகாரத்தில் காங்கிரஸை எதிர்ப்பது போன்று நடிக்க வேண்டும்” - திமுக நிர்வாகி பேச்சால் பரபரப்பு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 10, 2023, 1:36 PM IST

cauvery-issue-congress-should-pretend-to-oppose-dmk-executives-speech
காவிரி விவகாரம்: காங்கிரஸ் எதிர்ப்பது போன்று நடிக்க வேண்டும் திமுக நிர்வாகி பேச்சால் பரபரப்பு

Mayiladuthurai DMK: காங்கிரஸை எதிர்ப்பது போன்று மாயையை உருவாக்க வேண்டும் எனவும், அதற்கு காங்கிரஸ் எம்எல்ஏ உதவ வேண்டும் எனவும் திமுக மாவட்ட துணைச் செயலாளர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

காவிரி விவகாரம்: காங்கிரஸ் எதிர்ப்பது போன்று நடிக்க வேண்டும் திமுக நிர்வாகி பேச்சால் பரபரப்பு

மயிலாடுதுறை: காவிரி டெல்டா மாவட்டங்களில் எஞ்சியுள்ள குறுவைப் பயிரை பாதுகாக்கவும், சம்பா சாகுபடி தொடங்கவும் உடனடியாக காவிரியில் மாத வாரியாக கொடுக்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்க வலியுறுத்தி காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் வரும் 11ஆம் தேதி முழு அடைப்பு மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மயிலாடுதுறை மாவட்டத்தில் போராட்டம் குறித்து இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி நடைபெற்றது. இதில் வருகிற ஆகஸ்ட் 11ஆம் தேதி கடையடைப்பு செய்து தலைமை அஞ்சலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

திமுக மாவட்டச் செயலாளாரும், பூம்புகார் எம்.எல்ஏவுமான நிவேதா முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், காங்கிரஸ் எம்எல்ஏ ராஜகுமார் மற்றும் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் திமுக மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன் பேசும்போது எடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏ ராஜகுமார் முகநூல் பக்க நேரடி ஒளிபரப்பு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதில். “கர்நாடகவை எதிர்த்து போராடுவதுபோல் ஒரு மாயையை உருவாக்க வேண்டும். காங்கிரஸை வைத்துக் கொண்டு எப்படி நடிக்கிறார்களோ, அதேபோல் நம்மளும் காங்கிரஸை எதிர்ப்பது போலவு,ம் எடப்பாடியை மட்டம் தட்டுவது போலவும் காட்டி பிஜேபியை ஒழிக்கும் நம் கொள்கையை உறுதிபடுத்தினால்தான் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற முடியும்.

காங்கிரஸ் தண்ணீர் திறந்து விடுகிறது. அதை அங்கு தடுக்கிறார்கள் என்பது இரண்டாவது பட்சம். ஆனால், முழுமையாக எதிர்க்க வேண்டும் என்ற மாயையை காட்ட வேண்டும். மயிலாடுதுறை காங்கிரஸ் எம்எல்ஏ ராஜகுமார் கடுமையாக பேச வேண்டும். அப்படி பேசினால்தான் தமிழர்கள் ஒன்றாக இருக்கிறார்கள், காங்கிரஸ்காரர்களும் நம் தலைவரோடு ஒன்றாக இருக்கிறார்கள், காங்கிரஸ்காரர்கள் எதிர்த்து போராடுகிறார்கள் என்ற உணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்பதை 11ஆம் தேதி நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் வெளிப்படுத்த வேண்டும்” என்று பேசியது தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

இதையும் படிங்க: மீண்டும் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி மனுத் தாக்கல்.. நாளை விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.