ETV Bharat / state

மயிலாடுதுறையில் வீடு புகுந்து கடத்தப்பட்ட இளம்பெண் மீட்பு - மூன்று பேர் கைது!

author img

By

Published : Aug 3, 2022, 9:58 AM IST

மயிலாடுதுறையில் வீடு புகுந்து கடத்தப்பட்ட இளம்பெண் மீட்பு - மூன்று பேர் கைது!
மயிலாடுதுறையில் வீடு புகுந்து கடத்தப்பட்ட இளம்பெண் மீட்பு - மூன்று பேர் கைது!

மயிலாடுதுறையில் வீடு புகுந்து வலுக்கட்டாயமாக கடத்திச் செல்லப்பட்ட இளம்பெண் மீட்கப்பட்டுள்ள விவகாரத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை கஞ்சமேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன் மகன் விக்னேஸ்வரன்(34). இவர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள மயிலம்மன் நகரில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த 23 வயது பட்டதாரி இளம்பெண் ஒருவரை காதலித்துள்ளார்.

பின்னர் விக்னேஸ்வரனின் நடவடிக்கை பிடிக்காமல் அவருடன் பழகுவதை அப்பெண் நிறுத்தியுள்ளார். இதன் பின்னரும் அந்த பெண்ணை விக்னேஸ்வரன் பின்தொடர்ந்ததோடு, அப்பெண்ணைக் காதலிப்பதாகக் கூறி பெண் வீட்டுக்குச் சென்று தகராறிலும் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து, அப்பெண் வீட்டார் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் இரண்டு முறை புகார் அளித்துள்ளனர்.

மயிலாடுதுறை காவல்துறையினர், இருதரப்பினரையும் அழைத்து பேசி, ‘இனி அப்பெண்ணை தொந்தரவு செய்யக்கூடாது’ என விக்னேஸ்வரனிடம் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் கடந்த ஜூலை 12 ஆம் தேதி விக்னேஸ்வரன், அப்பெண்ணை கடத்த முயற்சி செய்துள்ளார்.

மயிலாடுதுறையில் வீடு புகுந்து கடத்தப்பட்ட இளம்பெண் மீட்பு - மூன்று பேர் கைது!

அப்போது அவரிடமிருந்து தப்பித்த இளம்பெண், மீண்டும் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக, வீடுபுகுந்து பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்து, கொலை மிரட்டல் விடுத்ததாக மயிலாடுதுறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விக்னேஸ்வரனை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட்2) இரவு, ஒரு ஸ்கார்பியோ கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த விக்னேஸ்வரன் மற்றும் அவரது கூட்டாளிகள் சுமார் 15 க்கும் மேற்பட்டோர், அப்பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்து, இரும்பு கதவை அடித்து உடைத்துள்ளனர்.

தொடர்ந்து அப்பெண்ணை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையிலான காவல்துறையினர், உடனடியாக சம்பவ இடத்திற்க்குச் சென்று விசாரணை நடத்தியதோடு, வீட்டில் இருந்த சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி பெண்ணைக் கடத்திய நபர்களை தேடிச் சென்றனர்.

இளம்பெண்ணை காதலித்து வந்த விக்னேஸ்வரன்
இளம்பெண்ணை காதலித்து வந்த விக்னேஸ்வரன்

இந்நிலையில் இளம்பெண்ணை கடத்திச் சென்ற வாகனத்தை விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டி டோல்கேட் அருகே போலீசார் மடக்கி பிடித்து, இளம் பெண்ணை பாதுகாப்பாக மீட்டனர்.

மேலும் விக்னேஸ்வரன் மற்றும் அவரது கூட்டாளிகளான மயிலாடுதுறையைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ், விழுப்புரத்தைச் சேர்ந்த செல்வகுமார் ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க: காதல் மனைவியை கத்தியால் குத்திய கணவன் - ஒரு மாதத்திற்கு பின் ஆந்திராவில் சடலம் மீட்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.