ETV Bharat / state

தூத்துக்குடி மாணவி சோபியா வழக்கில் விரைவில் தீர்ப்பு!

author img

By

Published : Feb 17, 2023, 8:20 AM IST

தூத்துக்குடி மாணவி சோபியா வழக்கில் விரைவில் தீர்ப்பு!
தூத்துக்குடி மாணவி சோபியா வழக்கில் விரைவில் தீர்ப்பு!

தூத்துக்குடி விமான நிலையத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டதாக தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி மாணவி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மதுரை: தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்த்த லூயிஸ் சோபியா என்ற மாணவி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். அதில், "கடந்த 2019ஆம் ஆண்டில் தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்தேன். அதே விமானத்தில் அப்போதைய தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜனும் வந்தார்.

விமான நிலையத்தில் இறங்கும்போது மத்திய அரசை விமர்சித்து கோஷமிட்டேன். அப்போது தமிழிசை செளந்திரராஜன் என்னை மிரட்டும் நோக்கில், தகாத வார்த்தைகளால் திட்டினார். அதேநேரம் அவரது ஆதரவாளர்களும் என்னிடம் கடுமையாக நடந்து கொண்டனர். பின்னர் அவரது புகாரின்பேரில் காவல் துறையினர் என் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

எனவே, இந்த வழக்கின் கீழ் என் மீது நடவடிக்கை எடுக்க தடை விதித்து, வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த மனுவின் முந்தைய விசாரணையில், புகார்தாரரான தமிழிசை செளந்திரராஜன் தற்போது ஆளுநராக இருப்பதால் அவர் விடுவிக்கப்பட்டு, தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டிருந்தார்.

மேலும் தற்போதைய தமிழ்நாடு பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தரப்பில், எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும் என மனு செய்யப்பட்டது. இந்த மனுவும் நீதிமன்றத்தால் ஏற்கப்பட்டது. இந்த நிலையில், இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், “வழக்குப்பதிவு செய்தது தனிமனித சுதந்திரத்தை பறிக்கும் செயலாகும்’ என தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து பாஜக தலைவர் அண்ணாமலை தரப்பில், ‘விமான நிலையத்தில் கோஷமிட்டது குற்றச் செயலாகும்’ என வாதிடப்பட்டது. இதனையடுத்து நீதிபதி, வழக்கினை உத்தரவிற்காக ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: மாணவி சோபியா வழக்கில் தமிழிசை சௌந்தரராஜன் விடுவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.