ETV Bharat / state

வாழ்வாதாரம் தேடி ஆட்சியர் அலுவலகம் வந்த திருநங்கைகள்! கண்ணீர் மல்க புகார்.. காரணம் என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 8, 2023, 9:59 PM IST

கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகள் கண்ணீர் மல்க புகார்
கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகள் கண்ணீர் மல்க புகார்

Special Grievance Camp for Transgender: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர் முகாமில் கலந்து கொண்ட திருநங்கைகள் தங்கள் மனுக்கள் குப்பைகளுக்குத் தான் செல்கின்றன எனக் கூறி கண்ணீர் மல்க கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகள் கண்ணீர் மல்க புகார்

மதுரை: மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு அலுவலகம் சார்பில் இன்று (டிச. 8) திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற்றது‌. இதில் மதுரை மாநகர் மற்றும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான திருநங்கைகள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கினர்.

அவற்றில் இலவச வீடு, வாரிய அட்டை, ரேசன் கார்டு, ஆதார் அட்டை, மாதம் ஆயிரம் ரூபாய் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தனர். இந்த முகாமில் கலந்து கொண்டு பேசிய திருநங்கை வசந்தி, "மதுரை மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட திருநங்கைகள் ஆயிரம் ரூபாய் மகளிர் உதவி தொகைக்கு விண்ணப்பித்து இருந்த நிலையில் ஒரு சிலரை தவிர மற்றவர்களுக்கு வரவில்லை.

நாங்கள் மாதம் ஒரு வீட்டிற்கு வாடகைக்கு குடியேறும் நிலை உள்ளது. திருநங்கை என்றால் யாரும் வாடகைக்கு வீடு தரமறுக்கிறார்கள். அதனால் எங்களுக்கு தொகுப்பு வீடு தர வேண்டும். இதே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல முறை மனு கொடுத்தும் எந்த பலனும் இல்லை. நாங்கள் கொடுக்கும் மனுக்கள் குப்பைகளுக்கு தான் போகின்றன. இந்த முறையாவது எங்களது மனுக்களுக்கு தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம்.

அரசு திட்டம் கொடுக்கிறோம் என்று விளம்பரம் தான் செய்கிறார்கள். ஆனால் நாங்கள் கையேந்தியே நிற்கிறோம்" என்று கூறியவாறு கைகளை தட்டியபடி முழக்கங்களை எழுப்பினார். இதனை தொடர்ந்து, அதிகாரிகளிடம் மனுக்களை அளித்தபோது, மடி ஏந்தியபடி "எங்கள் மனுவுக்கு ஏதாவது நடவடிக்கை எடுங்கள்.

உங்களை சாமி, ஏசு, அல்லா காப்பாத்துவர்" என்று கெஞ்சி ஆசிர்வாதம் வழங்கினர். இந்த திருநங்கைகளுக்கான குறைதீர் முகாமில் சமூக நலத்துறை அதிகாரிகள், மாவட்ட திருநங்கைகளுக்கான துணைத் தலைவி ருத்ரா, சமூக இயக்கம் சார்பில் பக்கீர் வாவா, பானுமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: சென்னை வேளச்சேரியில் 50 அடி பள்ளத்தில் சிக்கிய இருவரின் உடல் மீட்பு.. மேலாளர், மேற்பார்வையாளர் இருவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.