ETV Bharat / state

அரக்கோணம் இரட்டைக் கொலை: மத்திய புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டும்-திருமாவளவன்!

author img

By

Published : Apr 21, 2021, 5:30 PM IST

செய்தியாளரைச் சந்தித்த திருமாவளவன்
செய்தியாளரைச் சந்தித்த திருமாவளவன்

அரக்கோணம் இரட்டைக் கொலை தொடர்பான வழக்கை மத்திய புலனாய்வு துறை விசாரிக்க வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலை தொடர்ந்து அரக்கோணத்தில் சாதிவெறியர்களால் இரட்டைப் படுகொலை நடத்தப்பட்டது. அந்தக் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினிரிடம் அனுமதி பெறாமல், இந்த சம்பவத்திற்கு தொடர்பு இல்லாத நபரான சவுந்தரராஜனிடம் வாக்குமூலம் பெறப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த இரட்டைக் கொலை தொடர்பாக உடனடியாக புலனாய்வு விசாரணை தொடங்க வேண்டும். இந்த வழக்கை தமிழ்நாடு காவல் துறை விசாரிப்பதால் நீதி நியாயம் கிடைக்காது. எனவே மத்திய அரசின் புலனாய்வு துறை விசாரிக்க வேண்டும். இது திட்டமிட்ட சாதிய படுகொலை. அதற்கு இந்த தேர்தல் குறிப்பாக விசிக பானை சின்னத்தில் வாக்கு சேகரித்த நடவடிக்கை காரணியாக அமைகிறது.

தமிழ்நாட்டில் தான் சாதிய படுகொலை அதிகம் :

படுகொலையான நபர்களின் குடும்பத்திற்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய நிவாரணம் வழங்குவதோடு, பொருளாதார ரீதியில் பாதிக்கப்படக்கூடாத வகையில் இரண்டு ஏக்கர் நிலம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். வன்கொடுமை சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், பிற மாநிலங்களில் கூட கண்காணிப்பு குழு செயல்படுகிறது, ஆனால் தமிழ்நாட்டில் தவிர்க்கப்படுகிறது

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் சாதிய படுகொலை அதிகம் நடக்கிறது. பாமக கட்சி சாதிய வன்கொடுமையை கூர்தீட்டுவதில் குறியாக இருக்கிறது. விசிக கட்சியை பற்றி தவறாக சித்தரிப்பதும், சமூக வலைதளங்களில் அவதூறு பேசுவதும் நீடிக்கிறது.

திருமாவளவன் வலியுறுத்தல்
தொடர்ந்து அவதூறு பேசுவதை சகித்துக் கொள்ள முடியாது. சட்டரீதியாக எதிர்கொள்வோம், அநாகரிகமாக நடந்துகொள்வதை விசிக வன்மையாக கண்டிக்கிறது. பாமக இதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.

தடுப்பூசி பற்றாக்குறைக்கு பிரதமர் தான் பொறுப்பு:

மேலும், “இந்தியா முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கரோனா நோய் எதிர்ப்பு மருந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. உலகிலேயே இந்தியாவில் தடுப்பூசி தயாரிக்கபட்டும்கூட பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது. இதற்குப் பிரதமர் பொறுப்பு ஏற்கவேண்டும்.

இந்திய பிரதமரின் நேற்றைய உரை பொதுமக்களுக்கு அலங்கார உரையாக தான் இருந்தது. போர்க்கால அடிப்படையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தேர்தல் ஆணையம் வேட்பாளர்களின் முகவர்களுக்கு முறையான தகவல்களை தரவேண்டும்” எனவும் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: அரக்கோணம் இரட்டைக் கொலை வழக்கில் இருவர் சரண்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.