ETV Bharat / state

மீனாட்சி ஊரில் மீன் சின்னம் வேண்டாமா? - அங்கலாய்க்கும் மதுரக்காரய்ங்க..!

author img

By

Published : Jul 6, 2023, 11:06 PM IST

மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் அமையவிருக்கும் மீன் சிலையை, பாண்டியர்களின் அடையாளமாக உள்ள 'இரட்டை கயல்' சின்னத்தையே சிலையாக வைக்க வேண்டும் என்று சமூக மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அது குறித்த ஒரு சிறப்புத் தொகுப்பைக் காணலாம்.

Etv Bharat
Etv Bharat

மதுரையில் மீன் சின்னம் வேண்டும் எனக் கூறும் சமூக ஆர்வலர்கள்

மதுரை: மதுரை ரயில் நிலைய சந்திப்பு கிழக்கு நுழைவாயின் முன்பாக, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் முயற்சியால் நீரூற்றுடன் கூடிய வெண்கலத்தினால் ஆன மீன் சிலை கடந்த 1999 ஆம் ஆண்டு, மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகத்தின் ஒப்புதலோடு நிறுவப்பட்டது. இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு, ரயில்வே விரிவாக்கப் பணிகள் காரணமாக அந்த சிலை அகற்றப்பட்டு, ரயில்வே வளாகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே மீன் சிலையை அவ்விடத்தில் உடனே அமைக்கக்கோரி, வழக்கறிஞர் தீரன் திருமுருகன் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கில், மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட ஏதேனும் ஒரு முக்கியமான இடத்தில் அச்சிலையை நிறுவ வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இதற்கான குழு ஒன்றையும் அறிவித்திருந்தது. முன்னர் நிறுவப்பட்டிருந்த சிலை சற்றேறக்குறைய மூன்று டன் எடையுடன் மூன்று மீன்கள் ஒன்றின் மேல் ஒன்று துள்ளிக்குதிக்கும் வகையில் வடிவமைப்புச் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், மதுரையைப் பல நூறு ஆண்டுக்காலம் ஆண்ட பாண்டியப் பேரரசின் சின்னம் என்ற அடிப்படையில் இது நிறுவப்படவுள்ளதால், அலங்காரமாய்த் தோற்றமளிக்கும் இச்சிலைக்குப் பதிலாக, பாண்டியர்கள் தங்களது கொடியில் வரைந்திருந்த இரட்டைக் கயல் அல்லது செண்டுடன் கூடிய இரட்டைக் கயல் என்ற அடையாளத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அந்த மீன் சிலை அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மீனாட்சியம்மன் கோயிலுனுள் எட்டு இடங்களில் மீன் சின்னங்கள்: இது குறித்து கோயில் கட்டடங்கள் மற்றும் சிற்பங்கள் குறித்த ஆய்வாளர் தேவி அறிவு செல்வம் கூறுகையில், “மதுரை ரயில் நிலையத்தில், முன்பிருந்த மீன் சிலை அகற்றப்பட்டபோது கடந்த 2019 ஆம் ஆண்டு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனுக்குத் தகவல் தெரிவித்தவுடன், அவர் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார். ஆனால் மீண்டும் வைக்கப்படாத நிலையில், வழக்கறிஞர் தீரன் திருமுருகன் தொடர்ந்த வழக்கு காரணமாக தற்போது உயர் நீதிமன்றம் அச்சிலையை மதுரையின் முக்கிய இடம் ஏதேனும் ஓரிடத்தில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

மதுரையில் மீண்டும் நிறுவப்படவுள்ள மீன் சிலையை, பாண்டியர்களின் அரச சின்னமான இரட்டைக் கயல் மற்றும் அவற்றின் நடுவே செண்டுடன் கூடிய வடிவத்திலேயே அமைக்க வேண்டும். மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலேயே பாண்டிய அரச சின்னம் மேற்கு கோபுரம், கிழக்குக் கோபுரம், வடக்குக் கோபுரங்களிலும் திருக்கல்யாண மண்டபத்தின் விதானத்திலும், சுவாமி சன்னதியிலுள்ள கம்பத்தடி மண்டப விதானத்திலும் சேர்த்து எட்டு இடங்களில் இச்சின்னங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்தவை.

பாண்டியர்களின் அரச மரபு என்பதை நிரூபிக்க மீனாட்சியம்மன் கோயிலே சான்று: கிழக்குக் கோபுரம் கி.பி.11 ஆம் நூற்றாண்டில் குலசேகர பாண்டியனால் அமைக்கப்பட்டபோது, தனது இலச்சினையான செண்டுடன் கூடிய இரட்டைக் கயலை அக்கோபுரத்தில் பொறித்துள்ளார். பராக்கிரம பாண்டிய மன்னனால் கட்டப்பட்ட மேற்குக் கோபுரத்திலும் அதே சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த சின்னம் பாண்டியர்களின் அரச மரபு என்பதை நிரூபிக்க மதுரை மீனாட்சி அம்மன் கோயிலே சான்று. மேலும், அலங்காநல்லூர் அருகேவுள்ள கோவிலூர் கிராமத்தில் உள்ள மிகப் பழமை வாய்ந்த பெருமாள் கோயிலிலும் அதே போன்ற சின்னம் இடம் பெற்றுள்ளது.

மறவபட்டியிலுள்ள ஒரு கோயிலிலும், அழகர் கோயிலில் முதலாம் சடையவர்ம சுந்தரபாண்டியனால் கட்டப்பட்ட மண்டபத்திலும் எழுத்துக்களோடு இச்சின்னம் இடம் பெற்றுள்ளது. அதேபோன்று திருப்பரங்குன்றம், திருவரங்கம், திருவண்ணாமலை, குளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோயில்களிலும் இரட்டை கயல் சின்னங்கள் காணப்படுகின்றன. பெரும்பாலும் பாண்டிய மன்னர்களின் அரசாட்சிக்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் பரவலாகக் காணக்கிடைக்கிறது.

மீன் சின்னம் பாண்டியர்களின் அடையாளமாகக் கருதமுடியாது: நமது இந்தியத் தேசியக் கொடியைப் போன்றே சில நாடுகள் கொடிகளை வைத்துள்ளன. அதற்காக அதனை நமது கொடி எப்படி என்று உரிமை கொண்டாட முடியாதோ, அதைப் போன்றே மீன் என்பதாலேயே அதனைப் பாண்டியர்களின் அடையாளமாகக் கொள்ள முடியாது. பாண்டியர்கள் பயன்படுத்திய இந்த மீன் சின்னத்தைப் பாண்டியர்கள் மட்டுமன்றி சோழர்களும், நாயக்கர்களும் கூட பயன்படுத்தியுள்ளனர்.

ஒவ்வொரு பாண்டியன் மன்னனின் காலத்திலும் இலச்சினைகளில் மாறுபாடு இருந்தாலும், அனைவரும் இரட்டைக் கயல் என்பதைத் தொடர்ந்து பயன்படுத்தியுள்ளனர். செண்டுகளில் மட்டும்தான் அவ்வப்போது மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆகையால் பாண்டியர்கள் பயன்படுத்திய அரசு இலச்சினையான செண்டுடன் கூடிய இரட்டைக் கயலை மதுரையில் சிலையாக நிறுவினால் வருங்காலத் தலைமுறைக்கு அந்தத் தகவலைக் கொண்டு சேர்க்க முடியும்” எனத் தெரிவித்தார்.

கோவிலூர் கிராமத்தில் பாண்டிய அரச மரபு சின்னம்: அலங்காநல்லூர் அருகேயுள்ள அ.புதுப்பட்டியைச் சேர்ந்த விக்ரமன் கூறுகையில், “அ.புதுப்பட்டி அருகேயுள்ள கோவிலூர் கிராமத்தின் வயற்காட்டுப் பகுதியில் நடுவே இந்த பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இது பாண்டியர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகும். சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் மக்களுக்கே இந்தக் கோயிலின் பழமை குறித்துத் தெரியவில்லை. தற்போது சிதிலமடைந்து இடியும் நிலையில் உள்ளது.

இக்கோயிலின் விதானத்திலிருந்த ஒரு தூண் தற்போது கீழே விழுந்து கிடக்கிறது. அதில்தான் செண்டுடன் கூடிய இரட்டைக் கயல் பொறிக்கப்பட்ட பாண்டிய அரச மரபு சின்னம் புடைப்புச் சிற்பமாகக் காணப்படுகிறது. மதுரையில் வைக்கப்படவுள்ள மீன் சிலையை, இதுபோன்ற பாண்டிய அரசு மரபு இலச்சினையாக வைக்க வேண்டும். அப்போதுதான் நமது அடுத்த தலைமுறைக்கு மட்டுமன்றி, வெளிமாநில, வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கும் நமது பெருமையைக் கொண்டு செல்ல முடியும்” என்கிறார்.

பாண்டியர் கால சின்னங்களை பாதுகாக்க வேண்டியது கடமை: அதே ஊரைச் சேர்ந்த ராணுவ வீரர் ஸ்ரீதர் கூறுகையில், “இங்குள்ள பழமையான கோயில்களில்தான் நமது மரபும் பெருமைகள் உள்ளன. கடந்த நான்காண்டுகளாகக் காஷ்மீர் பகுதியில் பணியாற்றி வருகிறேன். அங்குள்ள கோயில்களைவிட மிகப் பழமையான கோயில்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளன. தற்போது எங்கள் ஊரிலுள்ள இந்த கோயில் மிகப் பாழடைந்து காணப்படுவது வேதனையாக உள்ளது.

பாண்டியர் கால மரபையும் சின்னங்களையும் பாதுகாக்க வேண்டியது நமது கடமை. மக்களும், அரசாங்கமும் இணைந்து இதுபோன்ற சின்னங்களைப் பாதுகாப்பதுடன் பாண்டியர்களின் சின்னமான மீன் சின்னத்தை சிலையாக வைத்து அனைவருக்கும் பாண்டிய அரச மரபின் பெருமையைத் தெரியப்படுத்த வேண்டும்” என்றார்.

முடிவாக, மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் அமையவிருக்கும் மீன் சிலையை, பாண்டியர்களின் அடையாளமாக உள்ள 'இரட்டை கயல்' சின்னத்தையே சிலையாக வைக்க வேண்டும் என சமூக மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மக்களின் கோரிக்கை பலனளிக்குமா என்று பொறுத்திருந்து தான் காண வேண்டும்.

இதையும் படிங்க: பாண்டியன் எக்ஸ்பிரஸ் வேண்டும்; மீன் சின்னம் வேண்டாமா? - கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.