ETV Bharat / state

மாநில அரசுடன் மத்திய அரசு முரண்படுகிறது - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

author img

By

Published : May 23, 2021, 4:05 PM IST

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

தடுப்பூசி விவகாரத்தில் மாநில அரசின் செயல்பாட்டில் மத்திய அரசு முரண்பட்டு செயல்படுகிறது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

மதுரை மாவட்டத்தில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், மக்களுக்கு வீடுகளுக்கே நேரில் சென்று காய்கறி, பழம், மளிகைப் பொருட்கள் விநியோகம் செய்வது குறித்தும், கரோனா தடுப்பிற்கு மாவட்ட அளவில் அமைக்கப்பட்டு உள்ள சிறப்பு பணிக்குழுவின் (Task Force) செயல்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

அதன் பின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ’மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை அவர்களின் வீடுகளுக்கே சென்று சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு வழங்கியதைப் போல விலையில் மாறுபாடு இல்லாமல் கொடுப்பது குறித்து ஆலோசித்து உள்ளோம்.

மதுரையில் கிராமப்புறங்களில் பரவல் அதிகரிக்கக்கூடாது என்பதற்காக, தீவிர கவனம் செலுத்தி வருகிறோம். மதுரை மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி வழங்குவதை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இணையதளம் தொடங்கப்படும். குஜராத் மாநிலத்திற்கு மட்டும் அதிகமான தடுப்பூசி வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு குறைவான தடுப்பூசிகள் மட்டுமே வழங்கியுள்ளது. தடுப்பூசி விவகாரத்தில் மாநிலங்களின் செயல்முறையோடு மத்திய அரசு முரண்பட்டு செயல்படுகிறது. முதலில் மாநிலங்கள் வாங்க கூடாது என்றது. இப்போது, மாநிலங்கள் வாங்கிக் கொள்ள வேண்டும் என்கிறது. எனவே, 18 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்குத் தேவையான தடுப்பூசியை மத்திய அரசு இன்னும் வழங்கவில்லை. அது வந்த பின்னரே பணிகள் தொடங்கப்படும்’ என்றார்.

பிறகு வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி கூறுகையில், ' மதுரையில் உள்ள எதிர்க்கட்சி சட்டபேரவை உறுப்பினர்கள் எங்களது ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதை புறக்கணிக்கிறார்கள். வெளிப்படைத் தன்மைக்காக, கூட்டு உழைப்பிற்காக நாங்கள் அழைப்பு விடுத்தும் அவர்கள் தவிர்க்கிறார்கள்.
இனி, அவர்களும் பங்கேற்று, தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும். மதுரையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு என்பதே கிடையாது’ என்றார்.

இதையும் படிங்க: முழு ஊரடங்கு: ஆட்சியர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.