ETV Bharat / state

GSTN-ஐ அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரக்கூடாது: தமிழ்நாடு வணிகர் நல வாரிய உறுப்பினர் அறிக்கை!

author img

By

Published : Jul 12, 2023, 9:25 PM IST

GSTN அமைப்பு அமலாக்கத்துறை கட்டுப்பாட்டிற்குள் சேர்க்கக்கூடாது என தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தின் உறுப்பினர் ரத்தினவேல் கோரிக்கை வைத்துள்ளார். மேலும், ஜி.எஸ்.டி கவுன்சிலின் 50ஆவது கூட்டத்தில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி கூறியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

மதுரை: ஜி.எஸ்.டி நெட்வொர்க் (GSTN) அமைப்பை அமலாக்கத்துறை நிர்வகிக்கும் பணப் பரிமாற்றம் தடைச் சட்டத்தின் கட்டுப்பாட்டிற்குள் சேர்த்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பது வணிகர்கள் நலனுக்கு எதிரானது என்றும் உடனடியாக இதை வாபஸ் பெற வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் நல வாரிய உறுப்பினர் ரத்தினவேல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் இன்று (ஜூலை 12) வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, 'அமலாக்கத்துறை நிர்வகிக்கும் பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கட்டுப்பாட்டிற்குள் ஜி.எஸ்.டி நெட்வொர்க்கை (GSTN) சேர்த்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதற்கு தமிழ்நாட்டிலுள்ள தொழில் வணிகத்துறை சார்பாக வேளாண் உணவு தொழில் வர்த்தக சங்கம் தனது கடுமையான ஆட்சேபனையைத் தெரிவித்துக் கொள்கிறது.

இது வணிகர்களிடையே, குறிப்பாக நேர்மையாக வரி செலுத்தும் வணிகர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் ஜி.எஸ்.டி வரிச் சட்டம் (GST Tax Act) அமலான 2017 ஜூலை 1 முதல் தற்போது வரை நூற்றுக்கணக்கான சுற்றறிக்கைகள், திருத்தங்கள், கேள்வி பதில் விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. பல சட்டத் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இவற்றை வரிச் சட்ட அமலாக்கத்துறை அதிகாரிகளாலேயே முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.

தவறு செய்யாத வணிகர்களுக்கும் மிரட்டல்?: இவற்றை எல்லாம் புரிந்துகொண்டு வணிகம் செய்ய நம்நாட்டில் உள்ள பெரும்பாலும் உயர்கல்வி பயிலாத வணிகர்களிடம் எப்படி எதிர்பார்க்க முடியும்? வரி ஏய்ப்பு செய்ய வேண்டும் என்ற நோக்கம் இல்லாமல் Technical Mistake என்று சொல்லக்கூடிய நுட்பமான தவறுகளுக்கும் கூட கடுமையான அபராதங்கள் விதிக்க சரக்கு வாகனங்களை சோதனையிடும் 'ரோவிங் ஸ்குவாட்' (Roving squad) அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தவறு செய்யாத வணிகர்களும் மிரட்டப்படுவதாகப் புகார்கள் வருகின்றன. லஞ்சத்தின் ஊற்றுக்கண்ணாக இந்த நடைமுறைகள் உள்ளன. வணிக நடைமுறை எதார்த்தங்களைப் புரிந்து கொள்ளாமல் ஜி.எஸ்.டி விதிகள் இயற்றப்படுகின்றன. விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன.

வருமான இல்லாதபோதும் வரி கட்டுவோருக்கும் வந்த சோதனை: இதற்குக் காரணம் மாதத்திற்கு சுமார் ரூ.1.6 லட்சம் கோடி வரிப்பணத்தை, எந்தவித ஊதியமும் இல்லாமல், வரித் தொகை வசூலானாலும், வசூலாகாவிட்டாலும் தங்கள் கையிலிருந்து செலுத்தி மத்திய மாநில அரசுகளை இயங்கச் செய்யும் தொழில் வணிகத்துறையினரை மத்திய அரசு கலந்து பேசுவதில்லை. தவறான, குழப்பமான அமலாக்கத்தினால் நல்ல ஒரு வரிமுறை சட்டம் மக்களின் எதிர்ப்பைப் பெற்றுள்ளது. ஜி.எஸ்.டி சட்ட விதிகளில் தெளிவு இல்லை; குழப்பம் தான் அதிகம் உள்ளன என்பதற்கு எடுத்துக்காட்டு தான் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் (GST Council Meeting) இதுவரை 50 முறை நடைபெற்றிருப்பது. இந்தியாவில் உள்ள எந்த வரிச் சட்டத்திற்காகவும் இது போன்று கூட்டங்கள் நடைபெற்றதில்லை.

பணப் பரிமாற்றம் தடைச் சட்டத்தின் கீழ் GSTN: இச்சூழ்நிலையில் அமலாக்கத்துறை நிர்வகிக்கும் பணப்பரிமாற்றத் தடை சட்டத்தின் கீழ் ஜி.எஸ்.டி நெட்வொர்க் அமைப்பைச் சேர்க்க மத்திய அரசு அனுமதி (GSTN Under Anti-Money Laundering Act) வழங்கியது, வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போலாகும். இந்த அனுமதியை மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும். தவறு செய்யும் வணிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அதிகாரிகளுக்கு இருப்பது போன்று, வேண்டுமென்றே சட்டவிரோதமாக வணிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கத் தொழில் வணிகத்துறைக்கு அதிகாரம் வழங்கினால் லஞ்ச லாவண்யம் பெருமளவில் குறையும் என்ற கருத்தும் வலுப்பெற்று வருகிறது.

பலரும் வணிகத்தை கைவிடும் நிலை: வரி ஏய்ப்பாளர்களுக்கு ஜி.எஸ்.டி சட்டத்திலேயே நடவடிக்கைகள் எடுத்துத் தண்டனை வழங்கத் தேவையான சட்ட விதிமுறைகள் உள்ளன. எனவே, அமலாக்கத்துறையின் தலையீடு தேவையற்றது. அச்சத்தினால் பலர் தொழில் வணிகத்தையே விட்டு ஒதுங்கி விடுவார்கள். ஏற்கனவே, பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் சில்லறை வணிகத்தில் ஈடுபடுவதால் சில்லறை வணிகர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி சோர்ந்து போயிருக்கிறார்கள். இது போன்ற காரணங்களால் கடைகள் குறைந்து, நாளடைவில் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் நியாயமான விலையில் கிடைக்காமல் போகும் சூழ்நிலை உருவாகும்.

இதென்ன வரி பயங்கரவாதமா?: ஏற்கனவே, இருந்த பல வரிச்சட்டங்களினால் ஏற்பட்டுள்ள 'வரி பயங்கரவாதத்தை' தவிர்க்கவே ஜி.எஸ்.டி வரிச் சட்டம் அமலாக்கப்பட்டது என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால் ஜி.எஸ்.டி வரிச்சட்ட அமலாக்கத்தில் ஏற்கனவே இருக்கும் குழப்பங்களோடு, அமலாக்கத்துறையும் தலையிட அனுமதி அளித்திருப்பதன் மூலம் ஜி.எஸ்.டி வரிச்சட்டம் தான் 'வரி பயங்கரவாதமாக' ஆகிவிட்டது.

ஆட்சபனை தெரிவித்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி: கடந்த 11.07.2023 ஆம் நாள் நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சிலின் 50ஆவது கூட்டத்தில் (50th meeting of GST Council) இதற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்புத் தெரிவிக்கிறது என்று உறுதியாக ஆட்சேபனையைத் தெரிவித்த தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்' என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கோவையில் செந்தில் பாலாஜிக்கு நெருங்கியவர்களிடம் தொடங்கும் சோதனை: CISF-உடன் களமிறங்கிய வருமான வரித்துறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.