ETV Bharat / state

கோவையில் செந்தில் பாலாஜிக்கு நெருங்கியவர்களிடம் தொடங்கும் சோதனை: CISF-உடன் களமிறங்கிய வருமான வரித்துறை

author img

By

Published : Jul 12, 2023, 5:09 PM IST

கோவையில் செந்தில் பாலாஜிக்கு சம்பந்தமான நபர்களிடம் தொடங்கும் சோதனை
கோவையில் செந்தில் பாலாஜிக்கு சம்பந்தமான நபர்களிடம் தொடங்கும் சோதனை

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வீடு கட்டி வரும் கோவையைச் சேர்ந்த கட்டுமான நிறுவனத்தின் அலுவலகம் மற்றும் திமுக பிரமுகர் நடத்திவரும் கிஸ்கால் இரும்பு கம்பி நிறுவன அலுவலகம் ஆகியவற்றில் வருமான வரித்துறை அதிகாரிகள் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோயம்புத்தூர்: கடந்த மே மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 7 இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்நிலையில் கடந்த முறை சோதனை நடத்திய போது திமுக பிரமுகரும் ரியல் எஸ்டேட் அதிபருமான கோல்ட் வின்ஸ் பகுதியைச் சேர்ந்த செந்தில் கார்த்திகேயனின் அலுவலகத்தின் ஒரு பகுதி சீல் வைக்கப்பட்டது. இதேபோல, கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள அரவிந்த் என்பவரின் இல்லம், பீளமேடு ரங்கநாயகி நகரில் அமைந்துள்ள ஒரு வீடு ஆகியவை சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று முதல் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் மற்றும் அவர்கள் தொடர்புடைய இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று பிற்பகல் மீண்டும் இந்த இடங்களுக்கு வந்து சீலை அகற்றியுள்ளனர். பின்னர் சோதனையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் இந்த 3 இடங்களில் வைக்கப்பட்டிருந்த ஆவணங்களையும் சரிபார்த்தனர்.

சீலை அகற்றுவதற்காக மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரை பாதுகாப்பிற்காக வருமானவரித்துறை அதிகாரிகள் உடன் அழைத்து வந்திருந்தனர். சீல் அகற்றப்பட்ட பின்னரும், இந்த வீடுகளில் இருந்த சில ஆவணங்களை வருமானவரித்துறை அதிகாரிகள் சரி பார்த்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி புதிதாக கட்டி வரும் வீட்டை, கோவையைச் சேர்ந்த அருண் அசோசியேட் என்ற நிறுவனம் கட்டி வருகிறது. இந்நிலையில் கோவை திருச்சி சாலையில் நாடார் காலனியில் உள்ள அருண் அசோசியேட் அலுவலகத்தில் இன்று வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அருண் பிரசாத் என்பவரிடமும் கரூரில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகள் குறித்தும் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதேபோல, கோவை காந்திபுரத்தில் இருக்கும் கிஸ்கால் இரும்பு கம்பி அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். கிஸ்கால் இரும்பு கம்பி உரிமையாளர் கண்ணப்பன், திமுகவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. திமுக கட்சியில் தலைமை செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். இவரது மகன் திருமலைராஜ், திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்து வருகிறார்.

கட்டுமானப் பொருட்கள் வழங்கப்பட்டது தொடர்பாக, வருமான வரித்துறை அதிகாரிகளின் கேள்விகளுக்கு முறையான பதில் அளிக்காததால் கிஸ்கால் அலுவலகத்திலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனைக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினருடன் வந்த வருமானவரித்துறை அதிகாரிகள், முழு பாதுகாப்புடன் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் மீண்டும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருப்பது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: Senthil Balaji: செந்தில் பாலாஜிக்கு ஜூலை 26 வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.