காலை உணவுத் திட்டம்: சலுகை, தர்மம், இலவசம் என யாரும் எண்ணக்கூடாது - முதலமைச்சர் ஸ்டாலின்

author img

By

Published : Sep 15, 2022, 12:03 PM IST

Updated : Sep 15, 2022, 12:22 PM IST

காலை உணவுத் திட்டம்: சலுகை, தர்மம், இலவசம் என யாரும் எண்ணக்கூடாது - முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் மதுரையில் இன்று தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தை சலுகை, தர்மம், இலவசம் என்று யாரும் எண்ணக்கூடாது என அவர் கூறினார்.

மதுரை: பள்ளிக் குழந்தைகளுக்கான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரையில் தொடங்கி வைத்தார். இது தொடர்பான நிகழ்ச்சி மதுரை கீழ அண்ணாதோப்பு பகுதியில் அமைந்துள்ள ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.

அப்போது கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு ரூபாய்க்கு உணவு வழங்கி வரும் கமலாத்தாள் பாட்டிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செய்தார். 'நூற்றாண்டு கண்ட கல்விப் புரட்சி' என்னும் நூலை முதலமைச்சர் வெளியிட, அதன் முதல் பிரதியை கமலாத்தாள் பாட்டி பெற்றுக் கொண்டார்.

பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், 'அண்ணாவின் பிறந்தநாளில் இந்தத் திட்டத்தை தொடங்கி வைப்பதில் பெரிதும் மகிழ்ச்சியாக உள்ளது. காலை உணவு உண்ண முடியாத காரணத்தால் குழந்தைகளின் கற்றல் திறன் மற்றும் வருகைப்பதிவு மிகவும் குறைந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

முதலமைச்சர் ஸ்டாலின் உரை

அதன் அடிப்படையில், பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவை உறுதி செய்யவே இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளோம். நூறாண்டுகளுக்கு முன்பு இதே நாளில் சென்னை மாகாணத்தில் ஆட்சியிலிருந்த நீதிக்கட்சியின் சர் பி.டி.தியாகராயர், சென்னையிலுள்ள பள்ளிகளில் உணவு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

பிறகு ஆங்கிலேய ஆட்சியாளர்களால் அத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் கடந்த 1957 ஆம் ஆண்டு காமராஜரால் மதிய உணவுத் திட்டம் கொண்டு வரப்பட்டது. 1971 ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் கருணாநிதியால் கர்ப்பிணி மற்றும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

பிறகு ஆட்சிக்கு வந்த எம்ஜிஆர், அதனை சத்துணவுத் திட்டமாக விரிவுபடுத்தினார். மேலும் கூடுதல் மையங்களைத் திறக்கவும் உத்தரவிட்டார். கடந்த 1989 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கருணாநிதி, பல்வேறு பொய் பரப்புரைகளை முறியடித்து சத்துணவுத் திட்டத்தை தொடர்ந்ததுடன், கூடுதலாக முட்டை வழங்கும் திட்டத்தையும் அறிவித்தார்.

பள்ளிக் குழந்தைகளுக்கான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரையில் தொடங்கி வைத்தார்
பள்ளிக் குழந்தைகளுக்கான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரையில் தொடங்கி வைத்தார்

பிறகு ஜெயலலிதாக முதலமைச்சராக இருந்தபோது கலவை சாதம் வழங்கினார். இவ்வாறு ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்தத் திட்டம் அப்போதைய ஆட்சியாளர்களால் விரிவுபடுத்தப்பட்டது. சென்னையில் பள்ளி ஒன்றில் ஆய்வு மேற்கொண்டபோது, பெரும்பாலான மாணவர்கள் காலை உணவு உண்ணாமல் வருவதை அறிந்தேன்.

அந்த நிலையைப் போக்கவே காலை உணவு திட்டத்தைக் கொண்டு வர முடிவு செய்தேன். இந்தத் திட்டத்தின் வாயிலாக 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் உள்ள 1,14,095 குழந்தைகள் பயன் பெறுவர். இதற்காக தமிழ்நாடு அரசு 33 கோடியே 56 லட்சம் ரூபாயை செலவிடுகிறது.

இந்தத் திட்டத்தை சலுகை, தர்மம், இலவசம் என யாரும் எண்ணக்கூடாது. இது அரசின் தார்மீகக் கடமை. பசிப்பிணி நீங்கினால் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வருவர். இதனால் கல்வியில் தமிழ்ச்சமூகம் மேம்படும். கல்வி என்பது நாம் போராடிப் பெற்ற உரிமை.

பள்ளி குழந்தைகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின்
பள்ளி குழந்தைகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின்

இதனை யாரும் மாணவர்களிடம் இருந்து பறிக்க முடியாது. உணவு, பசி என்ற கவலையின்றி அனைத்து மாணவர்களும் நன்கு படிக்க வேண்டும். அதற்கு இந்த அரசு உதவி செய்யும். பசிப்பிணியைப் போக்குவதற்காக எந்த தியாகத்தையும் செய்வதற்கு தயாராக உள்ளேன் "என்றார்.

இந்த நிகழ்வில், அமைச்சர்கள் எ.வ.வேலு, பெரியகருப்பன், கீதா ஜீவன், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ், மதுரை மேயர் இந்திராணி, நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: பழங்குடியின தகுதி...நரிக்குறவர் சமுதாய இளைஞர்களின் கல்வி,வேலைவாய்ப்பில் சமூகநீதியை பெற்றுத் தரும் - ஸ்டாலின்

Last Updated :Sep 15, 2022, 12:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.