ETV Bharat / state

தகவல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்குமா தமிழக அரசு..? - ஆர்டிஐ ஆர்வலர்கள் கேள்வி

author img

By

Published : Mar 8, 2023, 4:51 PM IST

தமிழக அரசிடம் ஆர்டிஐ ஆர்வலர்கள் கேள்வி
தமிழக அரசிடம் ஆர்டிஐ ஆர்வலர்கள் கேள்வி

தமிழக அரசு மாநில தகவல் ஆணைய உறுப்பினர்களையும் முதன்மை ஆணையரையும் நியமிக்க முயன்று வரும் நிலையில், எந்தவிதமான தலையீடுகளின்றி முழு சுதந்திரத்துடன் ஆணையம் இயங்குவதற்கான சூழலை உருவாக்குமா என்று ஆர்டிஐ ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இது குறித்து ஒரு சிறப்புத் தொகுப்பு.

தமிழக அரசிடம் ஆர்டிஐ ஆர்வலர்கள் கேள்வி

மதுரை: தகவல் அறியும் உரிமைச் சட்டம் கடந்த 2005-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி முதல் மத்திய அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அரசுத் தரப்பிலிருந்து தங்களுக்குத் தேவையான தகவல்களை மக்கள் அறிந்து கொள்வதற்கு உருவாக்கப்பட்டதாகும். இதன் மூலம் தங்களது அடிப்படை உரிமைகளைக் காப்பதற்கும் அதனைக் குறித்து அறிந்து கொள்வதற்கும் வாய்ப்பு உருவாகியது.

ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில முதன்மை தகவல் ஆணையர் மற்றும் துணை ஆணையர்கள் 10 பேரை அந்தந்த மாநில ஆளுநரே நியமனம் செய்கிறார். ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இவர்கள் தேர்வு செய்யப்படுவர். இந்நிலையில் தமிழக தகவல் முதன்மை ஆணையர் உள்ளிட்ட துணை ஆணையர்களின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், அவர்களைத் தேர்வு செய்யும் தேடுதல் குழு ஓய்வுபெற்ற நீதிபதி அக்பர் அலி தலைமையில் நியமனம் செய்யப்பட்டது. இந்நிலையில் மாநில தகவல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆர்டிஐ ஆர்வலர்கள் தங்களது எதிர்பார்ப்பை தெரிவித்துள்ளனர்.

சிறந்த ஆணையர்கள் தேவை: இந்தியன் குரல் என்ற அமைப்பின் தென் மண்டல ஒருங்கிணைப்பாளராகவும், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேல் ஆர்டிஐ ஆர்வலராகவும் இயங்கி வரும் ராமகிருஷ்ணன் கூறுகையில், “தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியைக் கொண்டு வர முதல்வர் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார். தலைமைத் தகவல் ஆணையர் உட்பட 5 தகவல் ஆணையர்களைத் தேர்ந்தெடுக்கும் முயற்சி தற்போது நடைபெற்று வருகிறது. அதன் விண்ணப்பதாரர்களில் நானும் ஒருவன். ஆனால், இதுவரை நேர்காணலுக்கு அழைக்கப்படவேயில்லை. என்னுடைய விண்ணப்பம் எந்தக் காரணத்திற்காக நிராகரிக்கப்பட்டது என்பதை தெரிந்து கொண்டால்தான் அடுத்த முறை அதனை நான் சரி செய்து கொள்ள முடியும்.

தமிழக முதல்வர் சிறப்புடன் இயங்குவதற்கு என்னைப் போன்ற ஆர்டிஐ ஆர்வலர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும். ஆகையால் தமிழ்நாடு தகவல் ஆணையம் சுதந்திரமாக இயங்க அதிகாரம் அளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஊழலை ஒழிக்க வேண்டுமானால் தகவல் ஆணையத்தை சீரமைப்பதுதான் ஒரே வழி. காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். தற்போது லட்சக்கணக்கில் குவிந்துள்ள மேல் முறையீட்டு மனுக்களை விசாரிக்க சிறந்த ஆணையர்களை தேர்வு செய்ய வேண்டும்” என்கிறார்.

வெளியே கசியும் தகவல்: இந்தியன் குரல் அமைப்பின் மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆர்டிஐ ஆர்வலராக இயங்கி வருபவருமான என்.ஜி.மோகன் கூறுகையில், “தகவல் ஆணையர் விசாரணையின் வழங்கும் தீர்ப்பு பெரும்பாலும் உத்தரவாக தட்டச்சு செய்யப்பட்டு வரும்போது இருப்பதில்லை. இதுபோன்ற மோசடி தகவல் ஆணையத்தில் நெடுநாட்களாகவே நடைபெற்று வருகிறது. இணையத்தில் உடனடியாக தரவேற்றம் செய்வதுமில்லை. ஒவ்வொரு முறையும் விசாரணையின்போது எங்களது சொந்தப் பணத்தை செலவு செய்து சென்னைக்கு வருகிறோம். ஆனால் எங்கள் முன்னர் வழங்கப்பட்ட உத்தரவு, வீட்டுக்கு வரும்போது இருக்காது. அபராதத்தொகை ரூ.25 ஆயிரம் எனக்கு வழங்க வேண்டும் என்ற ஒரு உத்தரவு, எழுத்தில் வரும்போது அவ்வாறு இல்லை. இது எனக்கு நடந்த உண்மை நிகழ்வுகளில் ஒன்று.

தமிழகத்தில் ஊழலை ஒழிக்க வேண்டுமானால் தகவல் ஆணையத்தையும், எங்களைப் போன்ற ஆர்டிஐ ஆர்வலர்களையும் சிறப்பாக செயல்பட அனுமதித்தாலே போதுமானது. இதன் மூலம் 90 விழுக்காடு ஊழலை உறுதியாக ஒழித்துவிடுவோம். தகவல் ஆணையத்தில் பத்து பொது தகவல் ஆணையர்களை நியமனம் செய்யலாம். ஆனால் இதுவரை 6 பேருக்கு மேல் நியமனம் செய்யப்படுவதில்லை. தமிழ்நாடு தகவல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்காதவரை அது கட்டப்பஞ்சாயத்து ஆணையமாகவே செயல்படும். அதேபோன்று தமிழ்நாட்டில் மட்டும்தான் தகவல் ஆணையத்திற்கு பிற மாவட்டங்களில் கிளைகள் இல்லை. பிற மாநிலங்களில் உண்டு. இதனால் எங்களுக்கு செலவு மிச்சமாகும். அதேபோன்று விசாரணைக்கு அழைக்கப்படும்போது நான்கு நாட்களுக்கு முன்னர்தான் அனுப்புகிறார்கள். இதனால் என்னைப் போன்ற மூத்த குடிமக்கள் சென்னை சென்று திரும்புவது மிகக் கடினமாக உள்ளது.

டாஸ்க் ஃபோர்ஸ்: விசாரணைக்கு வருகின்ற பொது தகவல் அலுவலர்கள் பணி நிமித்தமாகவே வருகின்றனர். ஆகையால் அவர்களுக்கு அலுவலகமே செலவுகளை ஏற்கிறது. ஆனால், தங்களது அடையாள அட்டைகளை கழுத்தில் மாட்டிக் கொள்வதே இல்லை. ஆனால் காவல்துறையினர் சீருடையோடு பங்கேற்கின்றனர். இதனை ஆணையம் கண்டிப்புடன் வலியுறுத்த வேண்டும். மேல்முறையீட்டாளராக நாம் செல்லும்போது ஆதார் உள்ளிட்ட அனைத்துவிதமான அடையாள அட்டைகளைக் காண்பிக்க வேண்டும். ஆனால், பொது தகவல் அலுவலர்கள் விதிவிலக்காக உள்ளனர் என்பது வருத்தத்திற்குரியது. தகவல் வழங்காமல் விசாரணைக்கு வருகின்ற அலுவலர்களின் வருகைப்பதிவேடு, செலவுகள் அனைத்தையும் அவர்களே ஏற்க வேண்டும்.

எங்களைப் போன்ற ஆர்டிஐ ஆர்வலர்களுக்கு பல வழிகளிலும் மிரட்டலோ அச்சுறுத்தலோ தொடர்ந்து வருகின்றன. நாங்கள் பொதுத் தகவல் அலுவலரிடம் கேட்கின்ற தகவல்கள் நாங்கள் யாரைப் பற்றிக் கேட்கிறோமோ அவர்களிடமே செல்கிறது. இது எப்படி நடக்கிறது..? என் முகவரிக்கே வந்து மிரட்டுகிறார்கள். ஆர்டிஐ ஆர்வலர்களின் பாதுகாப்புக்காக உச்சநீதிமன்றமே 'டாஸ்க் ஃபோர்ஸ்'ஐ செயல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, அதுகுறித்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசும் வழிகாட்டியுள்ளது. ஆனால் இதுவரை அந்த உத்தரவை தமிழக அரசு செயல்படுத்தவில்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாகியும்கூட இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்த சமூகம் நல்லபடியாக இயங்குவதற்கும் அரசாங்கம் தொடர்ந்து சிறப்புடன் செயல்படுவதற்கும் பாடுபடுகின்ற எங்களைப் போன்ற ஆர்டிஐ ஆர்வலர்களை பாதுகாப்பதில் அரசுக்கு என்ன சிக்கல் உள்ளது?” என்கிறார்.

ஜனநாயகம் உயிர்ப்புடன் திகழ்வதற்கு ஆர்டிஐ போன்ற சட்டங்கள் மிக முக்கியக் காரணியாய் அமைகின்றன. ஆகையால் தகவல் ஆணையத்தை வலுப்படுத்துவது என்பது மக்களாட்சி வலுப்படுத்துவற்கு ஒப்பானதாகும். ஆர்டிஐ ஆர்வலர்களின் நேர்மையான கோரிக்கைகளுக்கு தமிழக அரசு செவி சாய்ப்பதே நியாயமானது.

இதையும் படிங்க: "ஹோலி கொண்டாட்டம் இல்லை; நாள் முழுவதும் பூஜை மட்டுமே" கெஜ்ரிவால் முடிவின் காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.