ETV Bharat / state

"கல்வி பண்பு மட்டுமல்ல சமூகம் சார்ந்த உணர்வு" தமிழக அரசின் உயர்கல்வி குழுவில் இருந்து விலகியது ஏன்? - பேராசிரியர் ஜவஹர் நேசன் சிறப்பு நேர்காணல்!

author img

By

Published : May 31, 2023, 10:02 AM IST

Updated : May 31, 2023, 10:31 AM IST

Etv Bharat
Etv Bharat

கல்வி சீர்திருத்தங்களில் இந்தியாவை வழிநடத்துவது தமிழ்நாடு என புகழாரம் சூட்டியுள்ள பேராசிரியர் ஜவஹர் நேசன், தமிழக அரசின் மாநில உயர்நிலைக் கல்வி குழுவில் இருந்து விலகியதற்கான காரணம் மற்றும் உயர்கல்வியில் செய்ய வேண்டிய சீர்த்திருத்தங்கள் குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு சேனலுக்கு அளித்த சிறப்பு நேர்காணலை பார்க்கலாம்..

பேராசிரியர் ஜவஹர் நேசன்

மதுரை: மதுரையில் தமிழக உயர்கல்வி பாதுகாப்பு இயக்கம் சார்பில் 'தமிழ்நாட்டு கல்விக் கொள்கை எதிர்கொள்ளும் சவால்கள்' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பேராசிரியர் ஜவஹர் நேசன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து ஈடிவி பாரத் தமிழ்நாட்டிற்கு சிறப்பு பேட்டியளித்தார். அதில், அவர் கூறிய பதில்கள் பின்வருமாறு:-

கேள்வி - மக்களுக்கான கல்வி என எதை குறிப்பிடுவீர்கள்? அதை எப்படி விளக்குவீர்கள்?

பேராசிரியர் ஜவஹர் நேசன்: ஒரு மாநிலத்திற்கென்று தனித்துவம் வாய்ந்த கல்விக் கொள்கை என்பது இந்தியாவில் எந்த மாநிலமும் இதுவரை உருவாக்கியது கிடையாது. அப்படியொரு வரலாற்றுப்பூர்வமான ஏற்பாட்டினை தமிழக அரசு செய்யும்போது அதற்கான முனைப்பில் மிகப்பெரிய உயர்மட்டக்குழுவை அமைத்து செயலாக்கம் செய்துள்ளது.

இந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டிற்கான பிரச்சனைகள், சவால்கள், சிக்கல்கள் ஆகியவற்றோடு உலகளாவிய பார்வையில் இந்த மக்களை அழைத்துச் செல்ல வேண்டும். ஆனால் தொழில்நுட்பரீதியாக மிகப் பெரிய அச்சுறுத்தல்களையும், மாற்றங்களையும் மனிதர்கள் சந்தித்து வரும் வேளையில், இந்த 21-ஆம் நூற்றாண்டில் மனிதர்களை, மாணவர்களை, இளைஞர்களை எப்படி தயார் செய்வது என்ற கேள்விகள் இருந்து வருகின்றன என்றார்.

அதுமட்டுமன்றி, கடந்த ஆயிரமாண்டுகளாக இந்தியாவில் நிலவும் ஒட்டு மொத்த நிலைமை மற்றும் சமூக, வர்க்கரீதியான ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு, கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால், இவை அனைத்தையும் புறக்கணித்துவிட்டு, கல்வி என்பதை தனித்த செயல்பாடாக எடுத்துக் கொண்டு, அந்தக் கல்வியின் அங்கங்களான பயிற்சிகள், சோதனைகள், கற்றல்முறை, பாடத்திட்டம் ஆகியவற்றை மட்டுமே பேசி, அதற்குண்டான தீர்வை மட்டுமே சொல்ல முயன்றால் அவை மக்களுக்கான கல்வியாக இருக்க வாய்ப்பில்லை என்பதுதான் உண்மை என்று கூறினார்.

கேள்வி - புதிய கல்விக்கொள்கையை தமிழக அரசு ஏன் எதிர்க்க வேண்டும்?

பேராசிரியர் ஜவஹர் நேசன் : சூழல்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள், சவால்கள், எதிர்காலம் கொடுக்கக்கூடிய பார்வைகள் இவற்றையெல்லாம் கணக்கில் கொள்ளாமலேயே ஒரு கல்விக்கொள்கையை உருவாக்கமுடியுமா என்றால், என்னுடைய சிறிய அறிவுக்கு எட்டியவரை அது முடியாது என்பதுதான் நிதர்சனம். அப்படிப்பட்ட கல்விக் கொள்கை வருமென்றால், அது தமிழக மக்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் எதிரானதாக இருக்கும்.

தனித்துவம் வாய்ந்ததாக இருக்கப்போவது கிடையாது. அதுகூட இல்லாமல், அதையும் தாண்டி இந்தியாவில் தேசிய கல்விக் கொள்கை 2020, என்ற முறையும் இருந்து வருகிறது. இந்திய அளவில் இந்திய அரசு அக்கொள்கையைப் பல முனையிலும் 90 விழுக்காட்டிற்கும் மேல் செயல்படுத்தி வருகிறது. அது அனைத்து மாநிலங்களிலும் முழுமையாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்திலும் ஓரளவுக்கு அது செயல்பட ஆரம்பித்துள்ளது. இந்திய மாநிலங்களில் தமிழகம் மட்டுமே புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து வருகிறது.

இந்திய ஒன்றிய அரசு(Union Govt) செயல்படுத்தி வரும் அனைத்து திட்டங்களும் தமிழ்நாட்டிற்கு, தமிழர்களுக்கு எதிரானதாகவும், தமிழ்நாட்டை நோக்கியதாகவும் இருந்து வருகிறது. உதாரணத்திற்கு, அண்மைக் காலத்தில் தங்களது தேசிய கல்விக் கொள்கையைப் பரவலாக மக்களிடத்தில் கொண்டு செல்ல தூதுவர்களை உருவாக்கியுள்ளார்கள். இந்த தூதுவர்கள் மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் செயல்படத் தொடங்கியுள்ளனர்.

மேலும், சனாதனக் கொள்கையை உயர்த்திப் பிடிக்கும் தொண்டு நிறுவனங்களும் இதற்காக களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளன. இதற்கும் மேல் இந்திய அரசின் அனைத்துக் கேந்திரங்கள், மாநில அரசு சார்ந்த துறைகள் மூலமாகவும் தங்களது கல்விக் கொள்கைக்கான ஆதரவுத்தளத்தை உருவாக்க செயல்படுத்தி வருகிறார்கள். இவை எல்லாவற்றிலும் தமிழக அரசு பாராமுகமாக இருப்பதோடு, எந்தவித பதிலையோ மாற்றுத்திட்டத்தையோ முன்வைக்காமல், தமிழக அரசு என்ன செய்யப்போகிறது என்ற கேள்விதான் தமிழக மக்களின் முன் தற்போது உள்ளது என்றார்

கேள்வி: தமிழக அரசின் உயர்மட்டக் குழுவில் இருந்து வெளியேறியதற்கான காரணம் என்ன?

பேராசிரியர் ஜவஹர் நேசன்: தமிழக அரசு உயர்மட்டக்குழு அமைத்தபோது, காலம் காலமாக இங்குள்ள பல்வேறு வகையான ஏற்றத்தாழ்வுகளுக்கு விடிவு பிறக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருந்தது. என்னைப் போன்றே நிறைய கல்வியாளர்கள், செயல்பாட்டாளர்கள் பெரும் ஏக்கத்துடனும், எதிர்பார்ப்புடனும் நல்ல கல்விக்கொள்கை வரும் என எண்ணி இருந்தார்கள்.

ஆனால் அதற்கு நேர்மாறான அல்லது நோக்கத்தை அற்றுப்போக செய்யும் வேலையை இந்த உயர்மட்டக் கல்விக்குழுவே செய்கிறது என்பதை நான் உணர்ந்தேன். அதனால், அதற்கான எதிர்வினையை மக்கள் மூலமாக இந்த அரசுக்கும், தமிழ்நாட்டிற்கும் அல்லது இந்தக் கல்விக் கொள்கையை வகுப்பவர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே குழுவில் இருந்து விலகினேன். ஒரு நிர்ப்பந்தம் இல்லாவிடில், நம்முடைய இலக்கினை அடைய முடியாது என்பதைக் கணக்கிற்கொண்டுதான் அங்கிருந்து வெளியேறினேன்.

கேள்வி: மதுரையில் 'தமிழ்நாடு கல்விக் கொள்கை எதிர்கொள்ளும் சவால்கள் கருத்தரங்கு இது பற்றி விளக்க முடியுமா?

பேராசிரியர் ஜவஹர் நேசன்: தமிழகத்திலுள்ள கல்வி செயற்பாட்டாளர்கள் அனைவரும் ஒன்று கூடி, மதுரையில் 'தமிழ்நாடு கல்விக் கொள்கை எதிர்கொள்ளும் சவால்கள்' என்ற தலைப்பில் கருத்தரங்கு ஒன்று நடத்தப்பட்டது. மாநில கல்விக் கொள்கை என்பது மக்களுடைய கனவு மற்றும் எதிர்பார்ப்புடன் சம்பந்தபட்டவையாகும்.

ஜனநாயகம், சமத்துவம், சார்பற்ற, அறிவியல்பூர்வம் என அனைத்து மக்களையும் உள்ளடக்கியது. மேலும், நம்மை 21-ஆம் நூற்றாண்டிற்குள் அழைத்துச் செல்லக்கூடிய, கரை சேர்க்கக்கூடிய உன்னதமான, உண்மையான கல்விக் கொள்கையாக இருக்க வேண்டும் என்பதை எதிர்பார்க்கிறார்கள் என்பதை என்னால் உணர முடிந்தது. கல்வி என்பதை கல்வியின் பண்பாக மட்டுமே பார்க்காமல், அது நமது சமூகம் சார்ந்தது என நாம் உணர வேண்டும்.

மேலும், நம்மை பொருளாதாரத்திலே உயர்த்தக்கூடியது மட்டுமன்றி, நமக்கு வேலை, வாழ்வாதாரம் அனைத்திலும் கல்வி பொதிந்திருக்கிறது. கல்வியின் பண்பு சார்ந்திருக்கிறது. அதனால்தான், கல்வியின் மூலமாக எதிர்சிந்தனையை உருவாக்கக்கூடிய கல்விக் கொள்கையை வகுக்க எத்தனிக்கும் இந்த சூழலில், அதனை எதிர்த்து நமக்கான கல்விக் கொள்கையை மக்களுக்கானதாக உருவாக்கி இந்த நூற்றாண்டிற்கு நம்மை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் தமிழக மக்களுக்கு நான் விடுக்கும் செய்தி.

வணிகத்தன்மையற்ற, தனியார் மயமாக்கலை ஒழிக்கக்கூடிய கல்விக் கொள்கையாக இருக்க வேண்டும். மக்களால், மக்களுக்கே ஏற்படுத்தக்கூடிய, அரசே கல்விப் பொறுப்பை முழுமையாக ஏற்று செயல்படுத்தக்கூடியதாக இந்தக் கல்விக் கொள்கை இருக்க வேண்டும். கல்வி என்பது பொதுத்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பார்கள்.

அப்படியொரு தன்மையோடு நமது கல்வி முறை செயல்பட வேண்டும். இதுதான் கல்விக்கான இலக்கணம். அதை அளிப்பதுதான் அரசின் கடமை. இதனை மீறி அரசு தனியார் மயமாக்கல், வணிகமாயக்கலில் ஈடுபடுவதும், தேசிய கல்விக் கொள்கையை வேறு வடிவத்தில் செயல்படுத்த முனைவதும், உருவாக்கப்பட்ட உயர்மட்டக் குழுவே அதனை ஆதரிக்கும் விதத்தில் செயல்படுவதும் மிக பிற்போக்கான செயல்பாடாகும். இதனை எதிர்த்து கல்வியாளர்கள், செயற்பாட்டாளர்கள், தமிழக மக்கள் என அனைவரும் அழுத்தம் தரக்கூடிய வகையில் செயல்பட வேண்டும்.

கேள்வி: இதுவரை வடிவமைக்கப்பட்ட கல்விக் கொள்கைகள் மற்றும் அதனுடனான முரன்பாடு குறித்து விளக்க முடியுமா?

பேராசிரியர் ஜவஹர் நேசன்: இதுவரை நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து கடந்த 1949-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு வரை சுமார் ஐந்து கல்விக் கொள்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவாக்கிய உயர்கல்விக் கொள்கையிலிருந்து தற்போதைய 2020 தேசியக் கல்விக் கொள்கை வரை பல கல்விக் கொள்கைகளும், கல்வித் திட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

அவற்றிலெல்லாம் நல்ல அம்சங்களும் நிறைந்துள்ளன. ஆனால், எந்தக் கல்விக் கொள்கையும் மக்கள் சார்ந்த பிரச்சனைகளை, இந்தியா மற்றும் தமிழகத்திற்கான அல்லது இங்கே உள்ள ஒருங்கிணைந்த விசயங்களை, பிரச்சனைகளை எடுத்துக் கொண்டு வகுத்ததாக தெரியவில்லை.

ஒரு கல்வித் திட்டமானது அங்கு நிலவும் சமூகச் சிக்கல்களை எடுத்துக் கொண்டு, என்னவிதமான சமூகக் கட்டமைப்பை உருவாக்கப்போகிறோம் என்ற உறுதிப்பாட்டுடன் கல்விக் கொள்கை வகுக்கப்பட்டு கல்வித் திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும் என மிகக் சிறந்த கல்வியாளர்கள், அறிஞர்கள் அனைவரும் கோட்பாடு வகுத்துள்ளனர்.

ஆனால், அதை சுத்தமாகவே இதுவரை எந்தக் கல்விக் கொள்கையும் கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை என்பதுதான் என்னுடைய குற்றச்சாட்டு. அப்படிப்பட்ட சமூக நிலைமைகளையும், ஏற்றத்தாழ்வுகளையும், அந்த ஏற்றத்தாழ்வுகள் அறிவைக் கொடுக்க மறுப்பதும், அதற்கு ஏற்றாற்போல் கல்வியும் மீண்டும், மீண்டும் அவற்றை உருவாக்குவதும்தான் இந்தியாவின் கல்வித் திட்டமாக உள்ளது என்பதை ஆய்வுகள் பல கூறுகின்றன. என்னால் இதை நிரூபிக்கவும் முடியும்.

கேள்வி : நமக்கான கல்விக்கொள்கை என்ன? புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக ஏன் இவ்வளவு விமர்சனம்?

பேராசிரியர் ஜவஹர் நேசன்:பெண்ணடிமைத்தனத்தை ஒரு குடும்பம் மட்டுமன்றி அந்த சமூகமும் சேர்ந்தே உருவாக்குகிறது. இதற்கு இங்குள்ள கல்வி முறையும் துணை புரிகிறது. பெண்ணடிமைத்தனத்தை போற்றுவதும் இந்தியக் கல்வி முறைதான். இதுபோன்ற சமூக ஏற்றத்தாழ்வுகளை மேலும் மேலும் அதுவே உருவாக்குகிறது. எனும்போது அக்கல்வியின் பண்புகளான பயிற்றுவித்தல், பாடத்திட்டம், உள்ளடக்கம் இவை அனைத்தும் இந்த ஏற்றத்தாழ்வுகளை அகற்றுவதாக இல்லாவிடில், இந்தியாவில் அறிவுப்புரட்சி ஏற்படப்போவது கிடையாது.

காரணம் ஏற்றத்தாழ்வுகள் இருக்குமிடத்தில் அறிவுக்கான வேலை இருக்காது. சமத்துவமான நிலை கல்வி போதிக்கப்படும் இடத்திலாவது இருக்க வேண்டும். ஆகையால் உறுதியாகக் கூறுகிறேன். இந்தியாவில் எந்த கல்விக் கொள்கையும் இதைப் பேசியது கிடையாது. இனியும் பேசப்போவது கிடையாது. இப்போது நாம் பேசவில்லையென்றால், அது போன்ற கல்விக் கொள்கையும் உருவாக முடியாது. இந்த நிலையைத்தான் நான் உயர்மட்டக்குழுவில் சந்தித்திருக்கிறேன்.

ஆகையால் மக்கள் மூலமாக நமக்கான கல்விக் கொள்கையை நாமே வார்த்தெடுக்க வேண்டும். இதில் தமிழக மக்கள் அனைவரின் பொறுப்பும் உள்ளது என நான் கருதுகிறேன்.ஆகையால் நான் மேலே குறிப்பிட்ட மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டால் இங்கு அறிவுப் புரட்சி பெருகும். மக்களுக்கு மெய்யுணர்வுடன் கூடிய அனுபவம் இதுபோன்ற கற்றலில்தான் நிகழும். மாணவனும் சிந்திப்பவனாக உருவாவான்.

இந்தக் கல்வி கடமை தான் இன்றைய தேவை. 21-ஆம் நூற்றாண்டிற்கான நவீன அறிவியல், செயற்கை நுண்ணறிவு, இயந்திர அறிவு, ஆழ் அறிவு, வளர்ச்சியின் எதார்த்தம், குவாண்டம் கம்ப்யூட்டிங் இதுபோன்ற உயரிய தொழில்நுட்பங்கள் மனிதனை, மனிதனுடைய உறவுகளை மாறுதலுக்குட்படுத்த இருக்கின்றது என்பதால், அதை நோக்கிய பாதையிலே இந்தக் கல்விக் கொள்கை அமைய வேண்டும். அதற்கு மாறான கல்விக் கொள்கையில் பயணிக்கத் தொடங்கினால் நாம் மிக மிக பின்தங்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.

கேள்வி: தமிழக மக்கள் உங்களுடைய இந்த கருத்துக்களை ஏற்பார்கள் என நினைக்கிறீர்களா? அதை எவ்வாறு நம்புகிறீர்கள்

பேராசிரியர் ஜவஹர் நேசன்: இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களுக்கு நான் சென்றிருக்கிறேன், அங்கு பணியாற்றியுள்ளேன். ஆனால் அங்குள்ள கல்வியாளர்கள் கூறுவதெல்லாம், உங்கள் தமிழ்நாடுதான் இந்தியாவிற்கே வழிகாட்டுகிறது என்பதுதான். அப்படியென்றால், அது தமிழ்நாட்டு அரசைக் குறிப்பதல்ல. தமிழ்நாட்டு மக்களைக் குறிப்பது.

ஏனென்றால் அந்த அரசை வழிநடத்துபவர்கள் தமிழக மக்கள்தான். தமிழக மக்களின் எண்ணங்களை எதிரொலிக்கும் அரசுகள்தான் இங்கே அமைகின்றன. தமிழக மக்கள் எது சரி, எது தவறு என்பதனை உணர்ந்திருக்கிறார்கள்.அவர்களுடைய எதிர்பார்ப்பும், தீர்வும் சரியாகவே இருக்கிறது. ஆகையால் வெளியிலிருந்து நான் செய்யப்போகும் இந்தப் பணிக்கு தமிழக மக்கள் மிகப் பெரிய ஆதரவைக் கொடுப்பார்கள். கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மதுரையில் நடைபெற்ற கூட்டம் கூட அதற்கான முன்னுதாரணம்தான். தமிழக உயர்கல்வி பாதுகாப்பு இயக்கம் இந்தக் கூட்டத்தை மிக சிறப்பாக கல்வியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் பங்கேற்கச் செய்து நடத்திக் காட்டியுள்ளது. இதுவெல்லாம் தமிழக மக்கள் சிறப்பான பாதையில் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு உதாரணம். அனைவரும் சேர்ந்து போராடும்போது இந்த அழுத்தம் ஆட்சியில் இருப்பவர்களை, அதிகார வர்க்கத்தினரை, கல்விக் கொள்கை வகுப்பாளர்களை எக்கணமும் இந்த மக்களுக்கு எதிராக செயல்படத் தள்ளாது. இதை நான் உறுதியாக நம்புகிறேன்.

கேள்வி : தமிழக மக்களுக்கு இறுதியாக நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

பேராசிரியர் ஜவஹர் நேசன்: தமிழக மக்களைப் பொறுத்தவரை நான் சொல்ல விரும்புகின்ற செய்தி என்னவென்றால், அரசியல், பொருளாதாரம் இவையெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், 21-ஆம் நூற்றாண்டை கல்விதான் முன்னெடுத்துச் செல்லும். இதனை உணர்ந்த நாடுகள் அனைத்தும் கல்விக்கான முக்கியத்துவத்தை அதிகரித்து வருகின்றன.

ஸ்காண்டிநேவியன், நார்டிக், அமெரிக்கா என எந்த நாடாக இருந்தாலும் அவர்கள் கல்விக்கு ஒதுக்கும் நிதியும், முக்கியத்துவமும் மேலும் மேலும் அதிகரித்து வருகிறது. அதுதான் அரசியலையும், பொருளாதாரத்தையும், வாழ்வாதாரத்தையும், வேலைவாய்ப்பையும் தீர்மானிப்பதோடு, அனைத்து மனிதர்களின் செயல்பாட்டையும் தீர்மானிக்கவிருக்கிறது.

இது தொழில்நுட்பங்கள் சார்ந்த நூற்றாண்டு. பழங்கால வாழ்வியலையும் தாண்டி தற்போதைய நவீன அறிவியல்தான் மக்களின் அனைத்துவிதமான செயல்பாடுகளிலும் ஊடுருவி நிற்கிறது. 21-ஆம் நூற்றாண்டு குறித்து வலியுறுத்திக் குறிப்பிடுகிறேன். அதை நோக்கி நம்மை தயார்ப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பினை வழங்க இருப்பது கல்வி ஒன்றுதான்.

அதைவிட்டுக் கொடுத்துவிட்டு நாம் எந்த அதிகாரத்தைப் பெற்றாலும் நம்மை அது கரை சேர்க்காது. கல்வி என்பதை நமது வாழ்வியல், வாழ்வாதாரம், தலைவிதி, தலையெழுத்து என அனைத்தையும் குறிப்பிடுவதாகவே வைத்துக் கொள்ளலாம். அதற்காக அனைவரும் ஒன்று திரண்டு நம்முடைய கல்வித் திட்டத்தை, கல்விக் கொள்கையை நாமே வகுத்துக் கொள்வோம். அதனடிப்படையில் சரியான பாதையில் அரசும் அதைச் செயல்படுத்த நாம் நிர்ப்பந்திப்போம் என நான் இந்த சமயத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்' . நன்றி என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Last Updated :May 31, 2023, 10:31 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.