இந்தியாவில் காவல்துறை சித்திரவதை தடுக்கப்பட வேண்டும்: வழக்கறிஞர் ஹென்றி டிபேன்!

author img

By

Published : Aug 9, 2023, 12:20 PM IST

செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் ஹென்றி டிபேன்

மதுரையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் ஹென்றி டிபேன் காவல் துறையினரின் சித்திரவதையால் பாதிக்கப்பட்டவருக்கு ரூபாய் 20 லட்சம் நிவாரணம் வழங்கி நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது என கூறியுள்ளார்.

மதுரை: கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் சந்தேகத்தின் பெயரால் அழைத்துச் செல்லப்பட்டு காவல் துறையினரால் கடும் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு, அதற்காக நடைபெற்ற வழக்கில் ரூபாய் 20 லட்சம் நிவாரணமாக உயர்நீதிமன்றத் தீர்ப்பைப் பெற்றுள்ள வழக்குதாரர் சுப்பிரமணியமும், மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் ஹென்றி டிபேனும் மதுரையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய ஹென்றி டிபேன், காவல் சித்திரவதை தொடர்பான சட்டங்கள் இந்தியாவில் இல்லை. ஐ.நாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் காவல்துறை சித்திரவதை தொடர்பாக இந்தியா கையொப்பமிட்டுள்ளது. ஆனால் இதுவரை அதனை நடைமுறைப்படுத்தவில்லை. இந்நிலையில் கடந்த 2002 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் தேதி, சென்னையில் நடைபெற்ற ஒரு கொடூரமான சித்திரவதை சம்பவத்தில் சுப்பிரமணியம் என்பவர் பாதிக்கப்பட்டிருந்தார்.

இது தற்போது ஓய்வு பெற்ற சில மூத்த அதிகாரிகளின் தலைமையில் நடைபெற்ற சம்பவமாகும். அச்சம்பவம் குறித்து தேசிய மற்றும் மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்குக் கொண்டு சென்று எந்த தீர்வும் கிடைக்கவில்லை என்ற அடிப்படையில், கடந்த 2005 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தோம். அந்த வழக்கு கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி இறுதி விசாரணை நடைபெற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சுப்பிரமணியத்திற்கு ரூபாய் 20 லட்சம் நஷ்டஈடு வழங்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இது நிச்சயம் சரியான தீர்ப்பு. இந்த வழக்கைப் பொறுத்தவரை பாதிக்கப்பட்ட சுப்பிரமணியத்தைச் சந்திப்பது எங்களுக்கு பெரும் சவாலாக இருந்தது. காவல்துறை அதிகாரிகளே பாதிக்கப்பட்ட நபரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்து, செலவு செய்து பாதுகாப்பாக அவருடைய வீட்டில் கொண்டு போய் விட்டுள்ளார்கள்.

மேலும் அவர்கள் அளித்த மனுவிலே இதனை ஒத்துக் கொண்டுள்ளார்கள். பாதிக்கப்பட்ட சுப்பிரமணியத்தை மருத்துவமனையில் இரவு 2 மணி முதல் 4 மணிக்குள் சந்தித்துதான் எங்களது கண்காணிப்பாளர் இவரிடமிருந்து தகவல்களைப் பெற முடிந்தது. அதற்குப் பிறகு வீட்டிலிருந்து இவரை அழைத்து வந்து மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மேல்சிகிச்சைக்கு உட்படுத்திதான் இந்த வழக்கை முன்னெடுத்தோம்” என்றார்.

பாதிக்கப்பட்ட சுப்பிரமணியம் கூறுகையில், “கடந்த 2002ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் நாள் நள்ளிரவில் வீட்டிற்கு வந்த கே.கே நகர் காவல் நிலைய காவலர்கள், விசாரணைக்கு அழைத்துச் சென்றார்கள். வேனில் அழைத்துச் செல்லும் போதே எனது கைவிரல்களை மடக்கி சித்திரவதை செய்யத் தொடங்கினர். காவல் நிலையத்திற்கு வந்த பிறகு எனது உடைகளைக் களையச் சொல்லி உள்ளாடையோடு ஒரு தூணில் கட்டி வைத்து அனைத்துக் காவலர்களும் என்னை பிரம்பால் அடித்தனர்.

காவலர்கள் சோர்வடைகின்ற வரை சித்திரவதை செய்தனர். டிசம்பர் 2 ஆம் தேதி வரை என்னை காவல்நிலையத்திலேயே வைத்திருந்தார்கள். அதற்குப் பிறகுதான் என்னை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இடுப்பு எலும்பு உடைந்திருந்ததால் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்த பின்னர், இரண்டு மாதங்கள் அங்கே இருந்தேன். வீட்டிற்கு வந்த பிறகும் கூட என்னால் நடக்க இயலாமல் கடும் அவதிப்பட்டேன்.

அதற்குப் பிறகுதான் மக்கள் கண்காணிப்பகத்தின் முயற்சியால், எனது வீட்டிற்குத் தெரியப்படுத்தாமலேயே மதுரைக்கு வந்தேன். இங்கு வந்து மேற்கொண்ட அறுவைச் சிகிச்சைக்குப் பிறகுதான் முழுவதும் குணமடைந்தேன்” என்றார்.

இதையும் படிங்க: மதம் தொடர்பான ஆடியோவால் ஆய்வாளர் சஸ்பெண்ட் - பாரத் இந்து முன்னணி எதிர்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.