ETV Bharat / state

மதுரையில் விஜயகாந்த் சிலையை நிறுவ காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் கோரிக்கை..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 28, 2023, 10:53 PM IST

mp-manickam-tagore-request-to-install-vijayakanth-idol-in-madurai
மதுரையில் விஜயகாந்த் சிலையை நிறுவ எம்.பி மாணிக்கம் தாகூர் கோரிக்கை..!

Vijayakanth Idol in Madurai: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு மதுரையில் சிலை வைக்க விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மதுரை மேயருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மதுரை: நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் சமீபத்தில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையில் இருந்து மீண்ட அவர், டிசம்பர் 15ஆம் தேதி சென்னையில் நடந்த பொதுக்குழுவில் கலந்து கொண்டார்.

அந்த பொதுக்குழுவில் தேமுதிகவின் பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், மீண்டும் உடல்நலக் குறைவால் நேற்றைய முன்தினம் (டிச.26) இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், பின்னர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்ததாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று (டிச.28) காலை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி விஜயகாந்த் காலமானார். இதனை அடுத்து, தற்போது சென்னை தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் வைக்கப்பட்டு திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, விஜயகாந்த்தின் உடல் பொதுமக்கள், கட்சி தொண்டர்கள், அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் கலைத்துறையைச் சேர்ந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காகச் சென்னை, அண்ணாசாலையில் உள்ள தீவுத்திடலில் நாளை (டிச 29) காலை 6.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு உடல் வைக்கப்படுகிறது.

மேலும், அவரது இறுதி ஊர்வலம், தீவுத்திடலில் இருந்து மதியம் 1.00 மணியளவில் புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக தேமுதிக தலைமை கழக அலுவலகம் அடைந்து, 4.45 மணியளவில் இறுதிச் சடங்கானது நடைபெற்று தேமுதிக தலைமை கழக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது என தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், அவருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், "மறைந்த விஜயகாந்த் அருப்புக்கோட்டையில் பிறந்து அம்பாசமுத்திரத்தில் கல்வி கற்று மதுரையில் வாழ்ந்து வளர்த்து கலைத்துறை மற்றும் அரசியலிலும் தமிழகத்தில் சாதனை படைத்து பண்பாளராய், நெறியாளராய் மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற விஜயகாந்த்திற்கு மதுரையில் முழு உருவச் சிலை வைக்க வேண்டும்" மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்திற்கு கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆருயிர் நண்பனை இழந்து தவிக்கிறேன்..! நடிகர் விஜயகாந்த் உடன் படித்த பள்ளித் தோழர் உருக்கம்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.