ETV Bharat / state

மதுரையில் சிறைவாசிகள் நடத்தும் பெட்ரோல் பங்க் : அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்!

author img

By

Published : Aug 19, 2023, 2:30 PM IST

Madurai
மதுரை

Freedom petrol bunk: சிறைவாசிகளால் நடத்தப்படும் பெட்ரோல் பங்கை அமைச்சர் ரகுபதி மதுரையில் திறந்து வைத்தார்.

Minister Ragupathi Press Meet

மதுரை: சிறைவாசிகளால் நிர்வகிக்கப்படும் மதுரை மத்திய சிறை பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையம் திறப்பு விழா நேற்று (ஆகஸ்ட் 18) நடைபெற்றது. தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை, சிறைவாசிகளின் சீர்திருத்தம் மற்றும் மறுவாழ்விற்கென கல்வி திறன் மேம்பாடு, தொழிற்கல்வி, தொழிற்கூட பயிற்சி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.

அந்த வகையில் சிறை வளாகங்களில் சிறை அங்காடிகள் தொடங்கிட அரசால் அனுமதி வழங்கப்பட்டு அதில் சிறைவாசிகளால் தயார் செய்யப்படும் பாலி விஸ்கோஸ் துணி (காக்கி மற்றும் வெள்ளை) ஆயத்த ஆடைகள், கைவினைப் பொருட்கள், நோட்புக், பூச்செடிகள், மண்புழு உரம், காய்கறிகள், ஓவியங்கள், மழைக்கோட், செக்கு எண்ணைய் வகைகள், அடுமனைப் பொருட்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், போர்வைகள், துண்டுகள், தலையணை உறைகள் உள்ளிட்ட பல பொருட்கள் சிறைவாசிகள் மூலம் தயார் செய்யப்பட்டு சிறை சந்தை மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இச்செயல்பாடுகள் மூலம் சிறைவாசிகள் தினசரி ஊதியம் மற்றும் லாபத்தில் ஒரு பங்குத் தொகையும் பெற்று வருகின்றார்கள்.

சிறை அங்காடிகளின் நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்தும் விதமாக கோவை, புழல், வேலூர், பாளையங்கோட்டை, பார்ஸ்டல் பள்ளி புதுக்கோட்டை ஆகிய 5 மத்திய சிறை வளாகங்களில் பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையங்கள் தமிழ்நாடு சிறைத்துறையால் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்துடன் இணைந்து நடத்த அரசால் ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையங்கள் ப்ரிடம் பில்லிங் ஸ்டேசன் என்ற பெயரில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. கடந்த மார்ச் 31ம் தேதி வரை அனைத்து பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையங்களின் மூலமாக ரூ.847.31 கோடி மொத்த விற்பனை செய்யப்படுகிறது. இதில் இலாபம் ரூ.23.94 கோடி பெறப்பட்டு, சிறைவாசிகளின் ஊதியமாக ரூ.2.37 கோடி வழங்கப்பட்டுள்ளது.

கோவை, புழல், திருச்சி 1, திருச்சி 2, சேலம் மற்றும் மதுரை ஆகிய மத்திய சிறைகளில் 6 பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையங்கள் நிறுவிட தமிழக அரசால் ஆணை வழங்கப்பட்டது. இவற்றில் மதுரை புது ஜெயில் சாலையில் புதிதாக கட்டப்பட்ட ப்ரிடம் பெட்ரோல் நிலையத்தை நேற்று சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் அமைச்சர் ரகுபதி பேசும்போது; ”சிறைச்சாலை ஒரு கைதியை தண்டிக்கிற அல்லது கண்டிக்கிற இடமாக அன்றி திருத்தும் இடமாக அமைய வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தல் படி பல்வேறு திட்டங்கள் மூலம் செயலாற்றி வருகின்றோம். சிறைகளில் சிறைவாசிகள் தயாரிப்பு பொருட்களான சுங்கடிச் சேலை, போர்வை, மர சாமான்கள், கலப்படமற்ற எண்ணெய், உணவுப் பண்டங்கள் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு மக்களிடம் அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது. இதன்மூலம் சிறைவாசிகள் ஈட்டும் வருவாய் கொண்டு கைதிகள் தங்களது குடும்பத்தை நிர்வாகம் செய்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: எம்பிபிஎஸ், பிடிஎஸ் 2ஆம் சுற்று கலந்தாய்வு அறிவிப்பு!

இதுபோன்று மற்ற மாவட்டங்களில் சிறைவாசிகளால் நடத்தப்படும் எரிபொருள் விற்பனை நிலையம் சிறந்த விற்பனை நிலையமாக செயல்படுகிறது. பெண் சிறைவாசிகள் நடத்தும் பெட்ரோல் பங்க் சென்னையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. சிறைத்துறை மீது தமிழக அரசு தனி கவனம் எடுத்து கொண்டு இருப்பதால் பல்வேறு திட்டங்களை எங்களால் செயல்படுத்தப்படுகிறது. பெட்ரோல் / டீசல் விற்பனை நிலையத்தில் கிடைக்ககூடிய 80 சதவீத தொகை சிறைவாசிகளுக்கு கொடுக்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்” என்றார்.

இத்திறப்பு விழாவில் வணிகம் மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பா.மூர்த்தி, சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை தலைமை இயக்குநர் அமரேஷ்புஜாரி, மதுரை சரக சிறைத்துறை துணைத்தலைவர் த.பழனி, மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) அ.பரசுராமன் மற்றும் ஐ.ஒ.சி.எல். நிறுவன தலைமை நிர்வாக இயக்குநர் வி.சி.அசோகன் மற்றும் உயர் அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

இப்பெட்ரோல் விற்பனை நிலையத்தில் 36 சிறைவாசிகள் பணிபுரிய உள்ளனர். இவர்களுக்கு தினசரி ஊதியமாக ரூ.300 வழங்கப்படும். தமிழக சிறைத்துறை மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்துடன் இணைந்து புதிதாக திறக்கப்பட்டுள்ள இந்த பெட்ரோல் நிலையம், தமிழத்தில் 8 வது பெட்ரோல் நிலையமாகும். விரைவில் தமிழகத்தில் உள்ள மற்ற சிறை வளாகங்களிலும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.

தமிழ்நாடு சிறைத்துறையால் நிர்வகிக்கப்படும் பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையங்கள் பொதுமக்களிடையே மிக சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையத்தில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல் / டீசலின் தரம் மற்றும் கண்ணியமான சேவைகளால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சியடைவதாக சிறைத்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: பள்ளி வகுப்பறை பூட்டுகளில் மனித மலம் பூசப்பட்ட கொடூரம்.. மீண்டும் சாதிய மோதலை தூண்ட திட்டமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.