ETV Bharat / state

ஹெச்.ராஜா மீதான வழக்கு முடித்து வைப்பு!

author img

By

Published : Jun 29, 2021, 11:18 PM IST

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை

நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பேசிய ஹெச்.ராஜா மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கோரிய மனுவை முடித்து வைத்த நீதிமன்றம், அவர் மீதான வழக்கை தொடர்ந்து நடந்துமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டது.

மதுரை: சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், தந்தைப் பெரியார் திராவிடர் கழக வழக்குரைஞர் துரைசாமி என்பவர் தாக்கல் செய்த மனுவில்,' கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது.

இதை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே நடைபெற்ற ஊர்வலத்தின் போது மேடை அமைத்து பேச காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது.

இருப்பினும், ஊர்வல நிகழ்வில் கலந்து கொண்ட அப்போதைய பிஜேபி தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, காவல்துறையை கண்டித்ததுடன், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் இழிவான சொல்லை பயன்படுத்தி விமர்சித்தார்.

இதுதொடர்பாக திருமயம் காவல் நிலையத்தில் பதிவான வழக்கு, திருமயம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், திருமயம் காவல் நிலைய காவலர்கள் விசாரணையை முடித்து, ஹெச்.ராஜா மீது விரைவில் குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், இரண்டு மாதத்தில் குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

ஆனால், மூன்று வருடங்களுக்கு மேலாக, காவல்துறை தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமலும், நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமலும்

மேலும் கால அவகாசம் கேட்ட அலுவலர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று(ஜூன்.29) விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் அன்புநிதி, ஹெச் ராஜா மீதான வழக்கின் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

திருமயம் நீதிமன்றத்தில் அடுத்த மாதம் 23ஆம் தேதி, இதுதொடர்பான வழக்கின் விசாரணை தொடங்கவுள்ளதாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கண்ணன், குற்றப்பத்திரிகையில் ஹெச்.ராஜா தலைமறைவு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அவர் காரைக்குடியில் தான் உள்ளார் என்றார்.

இதை பதிவு செய்த நீதிமன்றம், இம்மனுவை முடித்து வைத்ததோடு, ஹெச்.ராஜா மீதான விசாரணையை தொடர்ந்து நடத்துமாறு உத்தரவிட்டது.

இதையும் படிங்க: உள்நோக்கத்துடன் போடப்படும் பொது நல மனுக்கள் விசாரணைக்கு உகந்தது அல்ல - நீதிபதிகள் கருத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.