ETV Bharat / state

மதுரை தமுக்கம் மைதானத்திற்கு மீண்டும் சங்கரதாஸ் சுவாமிகள் பெயர் வைக்க கோரிக்கை

author img

By

Published : Dec 1, 2022, 12:02 PM IST

மதுரை தமுக்கம் மைதானத்திற்கு சங்கரதாஸ் சுவாமிகள் பெயரையே மீண்டும் சூட்ட வேண்டும் - வலுக்கும் கோரிக்கை!
மதுரை தமுக்கம் மைதானத்திற்கு சங்கரதாஸ் சுவாமிகள் பெயரையே மீண்டும் சூட்ட வேண்டும் - வலுக்கும் கோரிக்கை!

மதுரை தமுக்கம் மைதானத்திற்கு மீண்டும் சங்கரதாஸ் சுவாமிகள் பெயரையே தமிழ்நாடு அரசு சூட்ட வேண்டும் என பல்வேறு தரப்பிலும் கோரிக்கை எழுந்துள்ளது.

மதுரையின் வரலாற்றுச் சிறப்புமிக்க அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் தமுக்கம் மைதானம், இயல், இசை, நாடகக் கலைகளை வளர்த்த மண்ணாகவும், பல்வேறு அரசியல் கட்சிகளின் மாநாடுகளுக்கு புகலிடமாகவும் திகழ்ந்த பேரரங்காகும். சென்னைக்கு எப்படி மெரினா கடற்கரையோ, அதுபோன்ற ஓரிடமே மதுரைக்கு தமுக்கம்.

இங்குள்ள கலையரங்கு, தமிழ் நாடகக்கலையின் தந்தை என போற்றப்படும் சுவாமி சங்கரதாஸின் பெயரால் அழைக்கப்பட்டு வந்தது. இன்றைக்கும் இந்த மைதானத்தின் வாசலில் சங்கரதாஸ் சுவாமிகளின் சிலை கம்பீரமாக உள்ளது. மதுரையில் கடந்த 1981ஆம் ஆண்டு நடைபெற்ற 5ஆம் உலகத் தமிழ் மாநாட்டின்போது, இங்கு மிகப்பெரிய கண்காட்சி நடைபெற்றது.

இதன் முன்பகுதியில் அமைந்துள்ள வளைவு மற்றும் கல்லாலான தேரில் அமர்ந்துள்ள தமிழன்னை சிலையும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். மதுரை புத்தகத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் இந்த மைதானத்தில்தான் நடைபெற்று வருகிறது. அதேபோல் சித்திரை மாதம் நடைபெறும் அரசு பொருட்காட்சி, ஆண்டுதோறும் தமுக்கம் மைதானத்தில்தான் நடைபெற்று வருகிறது.

தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் மதுரை மாநகரச் செயலாளரும் எழுத்தாளருமான கதிர்நிலவன் பேட்டி

மதுரை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த மைதானம், கடந்த 2020ஆம் ஆண்டு சீர்மிகு நகர திட்டத்தின்கீழ், புதிய கலையரங்கு கட்டப்படுவதற்காக சங்கரதாஸ் சுவாமிகள் கலையரங்கம் முற்றிலுமாக இடிக்கப்பட்டது.

தரைக்கீழ் தளத்தில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதிகளோடு, ரூ.47.72 கோடி செலவில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட வளாகமாக இந்த அரங்கு அமையும் வகையில் கட்டப்பட்டு, கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது.

ஆனால், இந்த அரங்கத்திற்கு மதுரை மாநாட்டு மையம் என முகப்பில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. முதல் நிகழ்வாக கடந்த செப்டம்பர் மாதம் புத்தகத் திருவிழா நடைபெற்றது. இந்த நிலையில் 'சங்கரதாஸ் சுவாமிகள் கலையரங்கம்' என்ற பெயர் மறைக்கப்பட்டு 'மதுரை மாநாட்டு மையம்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் ராணி மங்கம்மாள் பெயர் சூட்டப்பட வேண்டும் எனவும் சிலர் கோரிக்கை எழுப்பி வரும் நிலையில், தமிழ் மற்றும் நாடக ஆர்வலர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் மதுரை மாநகராட்சியும் தமிழ்நாடு அரசும் தொடர்ந்து அமைதி காத்து வரும் நிலையில், ஆங்காங்கே போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

யார் இந்த சங்கரதாஸ் சுவாமிகள்? தூத்துக்குடியில் கடந்த 1867ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7ஆம் நாள் பிறந்த சங்கரதாஸ் சுவாமிகள், தமிழ் நாடககக் கலையின் மீது தீராப்பற்றுக் கொண்டு விளங்கினார். பல்வேறு சபாக்களில் சேர்ந்து நடிகராக பணியாற்றினாலும், ஒரு கட்டத்திற்குப் பிறகு நாடக ஆசிரியராக தன்னை மாற்றிக் கொண்டு கலை வளர்ப்பதில் மிக தீவிரம் காட்டினார்.

கருத்துப்பட்டறை பதிப்பகத்தின் நிறுவனர் பரமன் பேட்டி

தமிழ்நாட்டின் புகழ் பெற்ற நாடக நடிகர்களை உருவாக்கியதில் அளப்பரிய பங்கு சங்கரதாஸ் சுவாமிகளுக்கே உண்டு. வள்ளி திருமணம், பவளக்கொடி, சுலோச்சனா சதி, பிரபுலிங்க லீலை, சிறுத்தொண்டர், பிரகலாதா, கோவலன், சதி அநுசூயா, அல்லி அர்ஜீனா, இலங்கா தகனம், மணிமேகலை, சீமந்தனி, மிருச்சகடி, லவகுசா, சத்தியவான் சாவித்திரி, அபிமன்யு சுந்தரி, பாதுகா பட்டாபிசேகம் ஆகியவற்றுடன் ரோமியோவும் ஜூலியத்தும் போன்ற நாடகங்களை எழுதி ஆயிரக்கணக்கான மேடைகளில் ஏற்றினார்.

அண்ணா திறக்காமல் போக காரணம்? இதுகுறித்து தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் மதுரை மாநகரச் செயலாளரும் எழுத்தாளருமான கதிர்நிலவன் கூறுகையில், 'இடிக்கப்படுவதற்கு முன்பாக சங்கரதாஸ் சுவாமிகளின் பெயர் மற்றும் பிரம்மாண்டமான படங்களோடுதான் அரங்கத்தின் உள்பக்கம் காட்சியளித்தன.

கடந்த 1962ஆம் ஆண்டு இக்கலையரங்கு கட்டப்பட்டது. இதனை அன்றைய தமிழ்நாடு ஆளுநர் விஷ்ணுராம் திறந்து வைத்தார். இதற்கான கல்வெட்டு ஆதாரங்களும் உள்ளன. அதற்கு பிறகு கடந்த 1967ஆம் ஆண்டு சங்கரதாஸ் சுவாமிகள் நூற்றாண்டு விழா டி.கே.எஸ்.பகவதி தலைமையில், தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து தமுக்கம் மைதானம் முன்பாக அவருக்கு சிலை எழுப்பப்பட்டது. இந்த சிலையைத் திறந்து வைக்க அப்போதைய முதமைச்சர் அண்ணா வருவதாக இருந்தது. அந்த நேரத்தில் அவர் உடல் நலிவுற்று இருந்த காரணத்தால் அவரால் வர இயலாது நிலை ஏற்பட்டது. எனவே அன்றைக்கு மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த நரசிம்மன் திறந்து வைத்தார்.

கடந்த 1918ஆம் ஆண்டு தத்துவ மீனலோசனி வித்துவ பாலசபா என்ற நாடக சபையை சங்கரதாஸ் சுவாமிகள் மதுரையில் உருவாக்கினர். அதன் நினைவாகவும் இந்த சிலை அமைக்கப்பட்டது. நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட சங்கரதாஸ் சுவாமிகளை சிறுமைப்படுத்தும் விதமாக தற்போது அவரது பெயரை இருட்டடிப்பு செய்வது கண்டிக்கத்தக்கது.

இதன் பெயர் மாற்றத்தில் ராணி மங்கம்மாள் பெயர் வைக்க வேண்டும் என்று போராட்டம் நடத்துவது தேவையற்றது. சீர்மிகு திட்டத்தின்கீழ் மதுரையிலுள்ள பெரியார் பேருந்து நிலையமும் இடிக்கப்பட்டது. ஆனால், தற்போது முழுமையாகக் கட்டி முடித்து பயன்பாட்டிற்கு வரும்போது மீண்டும் பெரியாரின் பெயரே சூட்டப்பட்டது.

அப்படியிருக்க சுவாமி சங்கரதாஸ் கலையரங்கத்திற்கு மட்டும் மதுரை மாநாட்டு மையம் என பெயர் சூட்டி இருட்டடிப்பு செய்வதுதான் திராவிட மாடல் அரசின் வேலையா?” என்றார்.

ஏன் சங்கரதாஸ் சுவாமிகள் பெயர்? மேலும் கருத்துப்பட்டறை பதிப்பகத்தின் நிறுவனர் பரமன் கூறுகையில், 'ஏற்கனவே இருந்த பெயருக்கு எதிராக இதுபோன்ற செயல்பாடுகள் ஏற்கத்தக்கதல்ல. பொதுமக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துகின்ற முயற்சியாகவே இதனை நான் பார்க்கிறேன்.

சங்கரதாஸ் சுவாமிகள் மிகப் பெரிய சிந்தனையாளர். சென்னையின் கோடம்பாக்கம் எவ்வாறு தமிழ் திரைப்படத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இடமோ, அது போன்றதே மதுரை தமுக்கம் மைதானம். கடந்த 1930ஆம் ஆண்டுகளில் அத்தனை சிறப்புப் பெற்று விளங்கிய மைதானமாகும்.

குறிப்பாக டி.கே.எஸ்.சகோதரர்கள், விஸ்வநாததாஸ், பாஸ்கரதாஸ் ஆகியோரின் பங்களிப்பு அதிகம். இதுபோக நிறைய நாடகக் குழுக்கள் மதுரையிலிருந்து செயல்பட்டு வந்தன. அதற்கு அடிப்படைக் காரணகர்த்தா சங்கரதாஸ் சுவாமிகள்தான். வெறுமனே கூத்துக்களாக இருந்த கலையை நாடகமாக வளர்த்தெடுத்த பெருமைக்கு சொந்தக்காரர்.

ஷேக்ஸ்பியரின் நாடகத்தையும்கூட தமிழாக்கம் செய்து நிகழ்த்தியவர். ஆகையால் தமுக்கம் மைதானத்திற்கு சங்கரதாஸ் சுவாமிகளின் பெயரையே மீண்டும் சூட்ட வேண்டும்' என்றார்.

இதையும் படிங்க: சென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.