ETV Bharat / state

தலைமை ஆசிரியரின் பணி கல்வி கற்பிப்பதா? மடிக்கணினியைப் பாதுகாப்பதா? - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 28, 2023, 7:10 PM IST

Madurai High Court: தஞ்சாவூர் மற்றும் மதுரையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்கள் தங்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்கள் மற்றும் ஓய்வூதியம் நிறுத்தி வைத்தது தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசின் எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தஞ்சை, மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Madurai High Court
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

மதுரை: தஞ்சாவூரைச் சேர்ந்த சசிகலா ராணி மற்றும் மதுரையைச் சேர்ந்த கலைச்செல்வி ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் இரு வேறு மனுவைத்தாக்கல் செய்தனர். அந்த மனுக்களில், “தஞ்சாவூர் மற்றும் மதுரை அரசுப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளதாகவும், தங்களுக்கு அரசு தரப்பில் வழங்க வேண்டிய பணப்பலன்கள் மற்றும் ஓய்வூதியத்தை நிறுத்தி வைத்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது குறித்த விசாரணையில், தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்ககுவதற்காக கொடுக்கப்பட்ட மடிக்கணினிகள் திருடப்பட்ட வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளதால், எங்களது பணி ஓய்வூதியத்தை நிறுத்தி வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.எனவே, இதனை ரத்து செய்து தங்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதியம் மற்றும் பணப்பலன்களை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி பட்டு தேவானந்த் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி, “அரசு பள்ளிகளில் வைக்கப்பட்டிருந்த மடிக்கணினிகள் காணாமல் போனதாக கூறப்பட்ட நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு 28 மடிக்கணினிகள் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, பறிமுதல் செய்யப்பட்டுள்ள மடிக்கணினிகள் எங்கு மற்றும் எப்போது, யாரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து முழு தகவல் அளிக்க வேண்டும் என அப்போதைய நீதிபதி உத்தரவிட்டார்” என்று வாதிடப்பட்டது.

இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதி பட்டு தேவானந்த்,“மடிக்கணினிகள் வைக்கப்பட்ட அறைக்கு ஏன் பாதுகாவலரை நியமிக்கவில்லை? தலைமை ஆசிரியரின் பணியானது கல்வி கற்பிப்பதா அல்லது மடிக்கணினியை பாதுகாப்பதா? எதன் அடிப்படையில் தலைமை ஆசிரியர்களின் பணப்பலன்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது? இதற்கு தலைமை ஆசிரியர்கள் தான் பொறுப்பு என்பது எந்த விதியில் உள்ளது என பல்வேறு கேள்விகளை நீதிபதி எழுப்பினார்.

இந்த வழக்கின் விரிவான விசாரணைக்காக தமிழ்நாடு அரசின் எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தஞ்சை, மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஆகியோர்களை எதிர் மனுதாரர்களாக சேர்த்து பதிலளிக்கவும், வழக்கின் விசாரணையை டிசம்பர் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: குடும்பத்துடன் கிரிவலம் வந்த அண்ணாமலையார்.. அரோகரா கோஷமிட்ட பக்தர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.