ETV Bharat / state

மஞ்சுவிரட்டு போட்டியில் கணவர் பலி; இழப்பீடு கோரிய மனு மீது கலெக்டர் பதிலளிக்க ஆணை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 8, 2023, 5:12 PM IST

Etv Bharat
Etv Bharat

Sivaganga: மஞ்சுவிரட்டு காளை முட்டியதில் கணவர் உயிரிழந்த விவகாரத்தில் இழப்பீடு கோரி மனைவி தாக்கல் செய்த மனு தொடர்பாக, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை: முன்னேற்பாடு இல்லாத மஞ்சுவிரட்டு போட்டியில் காளை முட்டியதில் கணவர் உயிரிழந்த விவகாரத்தில் இழப்பீடு கோரி மனு குறித்து வட்டாட்சியர் உள்ளிட்டோரை எதிர்மனுதாரராக சேர்த்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த நதியா என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மஞ்சுவிரட்டு காளை முட்டியதில் தனது கணவர் உயிரிழந்த விவகாரத்தில் இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், 'சிவகங்கை மாவட்டம் கல்லல் அடுத்த பனங்குடியில் கடந்த ஜூலை மாதம் அருள்மிகு பெரியநாயகி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.

சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் நானும் எனது கணவர் உள்ளிட்ட குடும்பத்தினர் கோயில் திருவிழாவிற்காக பனங்குடி கிராமத்திற்கு வந்திருந்தோம். மஞ்சுவிரட்டு போட்டியை எனது கணவர் கார்த்தி பார்க்க சென்றபோது, அங்கு எதிர்பாராத விதமாக காளை முட்டியதில் எனது கணவருக்கு கழுத்துப் பகுதியில் படுகாயம் ஏற்பட்டது.

காயமடைந்த எனது கணவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கக்கூட மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்ற பகுதியில் ஆம்புலன்ஸ், மருத்துவக்குழு உள்ளிட்ட எந்த விதமான அடிப்படை வசதிகள் செய்யப்படாததால் எனது கணவருக்கு முதலுதவி சிகிச்சை காயமடைந்த இடத்தில் வழங்க முடியாமல், இருசக்கர வாகனம் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் உதவியுடன் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றோம். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் எனது கணவர் வரும் வழியில் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

மஞ்சுவிரட்டு போட்டி நடத்திய விழா குழுவினர், அரசு துறை அதிகாரிகள் உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு மருத்துவக்குழு, பாதுகாப்பு உள்ளிட்ட எந்தவிதமான அடிப்படை வசதிகள் செய்யப்படாததே எனது கணவர் உயிரிழப்புக்கு காரணம் எனவும், காளை முட்டியதில் உயிரிழந்த எனது கணவருக்கு அரசு உரிய இழப்பீடு தொகை வழங்க உத்தரவிட வேண்டும்' என அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று (நவ.8) விசாரணைக்கு வந்தது. அப்போது இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, கல்லல் காவல் நிலைய ஆய்வாளர், காரைக்குடி வட்டாட்சியர், மஞ்சுவிரட்டு போட்டி நடத்திய விழா கமிட்டி உறுப்பினர்களை எதிர்மனுதாரர்களாக சேர்த்து உத்தரவிட்டதுடன் வழக்கு குறித்து, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் இது குறித்து பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, இவ்வழக்கு விசாரணையை அடுத்த மாதம் டிசம்பர் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சேலம் மாவட்ட உழவர் சந்தைகளில் இடைத்தரகர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு - பாமக எம்எல்ஏ அறப்போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.