ETV Bharat / state

மனிதனின் மனக்கதவைத் திறக்கும் நூலகம்: நீதிமன்ற உத்தரவால் மகிழும் புத்தகப் பிரியர்கள்!

author img

By

Published : Feb 18, 2021, 1:43 PM IST

Updated : Feb 18, 2021, 2:32 PM IST

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நூலகங்களைத் திறக்க உயர்நீதிமன்ற உத்தரவு
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நூலகங்களைத் திறக்க உயர்நீதிமன்ற உத்தரவு

மதுரை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நூலகங்களையும் திறக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை தத்தனேரி பகுதியைச் சேர்ந்த சவுந்தர்யா உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல்செய்திருந்தார். அதில், "தமிழ்நாட்டில் கன்னிமாரா பொது நூலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம், 32 மாவட்ட மத்திய நூலகங்கள், 745 பகுதி நேர நூலகங்கள் செயல்பட்டுவருகின்றன.

இவை தவிர மருத்துவமனைகள், சிறைகள், கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) அலுவலகங்களிலும் நூலகங்கள் செயல்பட்டுவருகின்றன. ஊரடங்கில் பல தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன, திரையரங்குகள் 100% இருக்கை வசதிகளுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

நீச்சல் குளங்கள், பார்கள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால் நூலகங்கள் முன்புபோல இயங்க அனுமதிக்கப்படவில்லை. தற்போது போட்டித்தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நூலகங்கள் திறக்கப்பட்டால் மாணவர்களுக்கு மிகுந்த உதவியாக அமையும்.

ஆகவே நூலகங்களைத் திறக்க அனுமதிக்கக் கோரி மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து நூலகங்களையும் திறக்கவும், வழக்கம்போல இயங்கவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

மனிதனின் மன கண்கள் திறக்கும் நூலகம்
மனிதனின் மனக்கண்களைத் திறக்கும் நூலகம்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு நான்கு வாரங்களுக்குள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நூலகங்களையும் திறக்க உத்தரவிட்டனர். மேலும், மனுதாரர் தரப்பில் கிராமப்புற நூலகங்களையும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரப்பட்டது.

அதைத் தொடர்ந்து நீதிபதிகள் கிராமப்புற நூலகங்கள் திறப்பது தொடர்பாக எட்டு வாரங்களுக்குள் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.

தொடர்ந்து மதுரை வண்டியூர் பகுதியில் நூலகத்திற்கான புதிய கட்டடம் கட்டப்பட்டும், பழைய கட்டடத்திலேயே நூலகம் இயங்கிவருவதாகத் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நீதிபதிகள் வண்டியூரில் புதிதாக கட்டப்பட்ட நூலகத்தைத் திறப்பது குறித்து நான்கு வாரங்களுக்குள் முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

Last Updated :Feb 18, 2021, 2:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.