ETV Bharat / state

கனல் கண்ணன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு; இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 19, 2023, 5:33 PM IST

Etv Bharat
Etv Bharat

திரைப்பட சண்டைப் பயிற்சியாளரும், பாஜக ஆதரவாளருமான கனல் கண்ணன் மீது பதியப்பட்ட வழக்கில் வழக்கறிஞர் ஆஜராக கால அவகாசம் கோரப்பட்டதை அடுத்து, இரண்டு வாரங்களுக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மதுரை: திரைப்பட சண்டைப் பயிற்சியாளரான கனல் கண்ணன், இந்து முன்னணி நிர்வாகியாகவும், பாஜக ஆதரவாளராகவும் செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய விடியோவை வெளியிட்ட புகாரில், அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நாகர்கோவில் குற்றப்பிரிவு காவல் துறையினர் அவரை கைது செய்தனர்.

சாதி, மத ரீதியான சொற்களைப் பயன்படுத்துவது, பிரிவினையை ஏற்படுத்துவது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சமீபத்தில், மதபோதகர் ஒருவர் பெண்ணுடன் சேர்ந்து நடனமாடும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, அந்த வீடியோவை தமிழ் பாடலுடன் எடிட் செய்யப்பட்டு இருந்தது.

அந்த வீடியோவுடன் கனல் கண்ணன் சமூக வலைத்தளத்தில், "வெளிநாட்டு மத கலாச்சாரத்தின் உண்மை நிலை இதுதான்? மதம் மாறிய ஹிந்து மக்களே சிந்தியுங்கள்" என தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார். அவரின் பதிவு கிறிஸ்தவ மதத்தை அவமதிக்கும் வகையில் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தததையடுத்து, திமுகவைச் சேர்ந்த ஆஸ்டின் என்பவர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், கனல் கண்ணன் மீது காவல் துறை நடவடிக்கை எடுத்தது.

இதனையடுத்து தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கனல் கண்ணன் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “என் மீது புகார் அளித்தவர் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர். புகார் அளித்திருப்பது பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயல்.

சமூகவலைத்தளத்தில் வந்த வீடியோவை மட்டுமே பகிர்ந்தேன். காவல் துறையின் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தவறானவை மற்றும் புனையப்பட்டு உள்ளது. ட்விட்டரில் நான் தெரிவித்த கருத்து யாரையும் பாதிக்கவில்லை. எனவே, தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்து, காவல் துறை நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி நாகர்ஜூன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கனல் கண்ணன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக கால அவகாசம் கோரப்பட்டதால், வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இதையும் படிங்க: கோடநாடு கொலை வழக்கில் இபிஎஸ்க்கு அடித்த ஜாக்பாட்! சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவால் மகிழ்ச்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.