குறைந்தளவிலான காவல்துறையினர்...கஞ்சா விற்பனையை எவ்வாறு தடுக்க முடியும் என நீதிபதி கேள்வி?

author img

By

Published : Sep 17, 2021, 6:57 AM IST

கஞ்சா விற்பனையை எவ்வாறு தடுக்க முடியும்

தமிழ்நாடு முழுவதும் குறைந்த அளவிலான காவல்துறையினரை ஒதுக்கீடு செய்து கஞ்சா விற்பனையை எவ்வாறு தடுக்க முடியும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரை: பள்ளிக்கு அருகே கஞ்சா விற்றதாக தொடரப்பட்ட வழக்கில் பிணை வழங்க கோரி பல வழக்குகள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கின் முந்தைய விசாரணையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் எவ்வளவு கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு எங்கு வைக்கப்பட்டுள்ளது? எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது? போன்ற பல்வேறு கேள்விகளை நீதிபதி எழுப்பி இருந்தார்.

இந்த வழக்கு இன்று (செப்.16) நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், "பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா அனைத்தும் அந்தந்த காவல் நிலையத்தில் தனி அறைகளில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. உள்துறை செயலர், காவல்துறை தலைவர் பதில் மனு தாக்கல் செய்ய இருப்பதால் தனி அமைப்பு உருவாக்கி பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் உண்மைத் தன்மை சரி பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. அதில் 70 விழுக்காடு பணி முடிவடைந்துள்ளது. ஒரு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யப்படும்" என தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதி, குறைந்த அளவிலான காவல்துறையினர் ஒதுக்கீடு செய்து கஞ்சா விற்பனையை எவ்வாறு தடுக்க முடியும் என கேள்வி எழுப்பினர். மேலும் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் பலர் கஞ்சா உட்கொண்டு கொலை, கொள்ளை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவதை தொலைக்காட்சியில் பார்க்க முடிகிறது.

கள்ள சாராயத்தை ஒழிப்பதற்காக அதிக அளவில் காவல்துறையினர் ஒதுக்கியதன் காரணமாகவே தற்போது கள்ளச்சாராயம் தமிழ்நாட்டில் ஒழிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியராக பணிப்புரிபவர் அதிகாரம் மற்றும் பணம் அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கக்கூடாது. பொறுப்புடனும் வெளிப்படைத் தன்மையுடனும் செயல்படவேண்டும். புதிய அரசு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என நீதிமன்றம் நம்புகிறது என தெரிவித்து வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: ’டிஜிட்டல் ஊடக கண்காணிப்பு புதிய விதிக்கு இடைக்கால தடை’ - உயர் நீதிமன்றம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.