ETV Bharat / state

வருமான வரித்துறையினரை திமுகவினர் தாக்கிய வழக்கு; ஜாமீனில் வெளியே உள்ள 4 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 4, 2023, 1:11 PM IST

attack on IT officials in Karur issue
கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கில் ஜாமீனில் பெற்ற 4 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு

Attack on IT officials in Karur issue: கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கில் ஜாமீனில் வெளியே உள்ள 4 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வருகிற 16ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உயர் நீதிமன்றக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை: கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மற்றும் உறவினர் வீடுகளில் கடந்த மே 25ஆம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது வருமான வரித்துறை அதிகாரிகளைத் தாக்கி வாரண்ட் நகல், அரசு முத்திரைகள், வழக்கு தொடர்பான அரசு ஆவணங்கள், பென்டிரைவ் ஆகியவற்றை பறித்துச் சென்று, பென்டிரைவில் இருந்த தகவல்கள் முழுவதும் அழிக்கப்பட்டதாக வருமான வரித்துறை தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து, ஆவணங்களைப் பறித்துச் சென்றதாக திமுகவினர் மீது வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, இந்த சம்பவத்தில் தொடர்புடைய திமுகவினர் பலரையும் கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, 15 திமுகவினர் கரூர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றனர். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி வருமான வரித்துறை சார்பில், வருமான வரித்துறையின் உதவி இயக்குநர் யோக பிரியங்கா, கிருஷ்ணகாந்த் மற்றும் ஆய்வாளர் ஸ்ரீனிவாசராவ் உள்ளிட்டோர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பால்ராஜ், லாரன்ஸ், விக்னேஷ், சதீஷ்குமார், கனகராஜ், கிருஷ்ணன், செல்வம் ரூபேஸ், அருண், ஜோதிபாசு, பூபதி குணசேகரன், தங்கவேல், பாலசுப்பிரமணியன் மற்றும் அய்யனார் ஆகியோரின் ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

இதற்கிடையில் ரீகன், ராஜா, சரவணன் மற்றும் ராமச்சந்திரன் உள்ளிட்ட நான்கு பேருக்கு கரூர் மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. இதை எதிர்த்து வருமான வரித்துறையினர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, ஜாமீனில் வெளியே உள்ள நான்கு பேர் தரப்பிலும் மற்றும் காவல்துறை தரப்பிலும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதி சிவஞானம் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி சிவஞானம், ஜாமீனில் வெளியே உள்ள 4 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வருகிற 16ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: சனாதன விவகாரம் குறித்த அமித் மாள்வியா மீதான வழக்கு; காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.