ETV Bharat / state

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கமிட்டி விவகாரம்; மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 3, 2024, 10:51 PM IST

Madurai Avaniyapuram Jallikattu Case
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கமிட்டி விவகாரம்

Madurai Avaniyapuram Jallikattu Case: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அனைத்து சமூகத்தினர் ஒன்றிணைந்து கமிட்டி அமைத்து ஜல்லிக்கட்டு விழா நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில், மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை: மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த முனியசாமி என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், மதுரை அவனியாபுரத்தில் பல சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் ஜல்லிக்கட்டு நடத்துவதில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த வழக்கில் அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைத்து கமிட்டி அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஆகிய ஊர்களில் அரசு நடத்தும் ஜல்லிக்கட்டு விழாவில், அனைத்து சமூகத்தைச் சேர்த்தவர்களையும் இணைத்து கமிட்டி அமைத்து ஜல்லிக்கட்டு விழா நடத்தப்படுகிறது.

ஆனால், அவனியாபுரத்தில் மாவட்ட நிர்வாகம் மட்டுமே ஜல்லிக்கட்டு விழா நடத்துகிறது. எனவே, ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் விழாவை முன்னிட்டு நடக்க இருக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில், அனைத்து சமூகத்தினரையும் இணைத்து கமிட்டி அமைத்து ஜல்லிக்கட்டு விழா நடத்த உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு, இதன் மீதான வழக்கு விசாரணையை ஜனவரி 5ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க: முரசொலி நிலம் விவகாரம்; ஆவணங்கள் தாக்கல் செய்ய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.