ETV Bharat / state

மதுரை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸை திறக்க எப்படி அனுமதித்தீர்கள்? - ஐகோர்ட் கிளை

author img

By

Published : Dec 21, 2022, 4:40 PM IST

Updated : Dec 21, 2022, 6:45 PM IST

போதிய பாதுகாப்பு வசதி இல்லாமலும், கட்டுமானப்பணி முழுமையாக முடியாமலும் உள்ள மதுரை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸை திறக்க எப்படி அனுமதி வழங்கப்பட்டது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

மதுரை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ்
மதுரை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ்

மதுரை: சமூக ஆர்வலரும், மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குநருமான ஹென்றி திபேன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே லேக் ஏரியா பகுதியில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் சூப்பர் சரவணா ஸ்டோர் வணிக கட்டடம் டிசம்பர் 5ஆம் தேதி புதிதாக திறக்கப்பட்டுள்ளது.

கட்டுமானப் பணிகள் முழுமையாக முடிவடையாத நிலையில் கட்டடம் திறக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து காரைக்குடி, திருச்சி உள்ளிட்டப் பல்வேறு பேருந்து இயக்கப்படுவதோடு தனியார் ஆம்னி பேருந்து நிலையமும் அங்கு உள்ளது. வெளிமாநிலங்களுக்கும் இங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இங்கு பத்து மாடிகளுடன் கூடிய இந்த சூப்பர் சரவணா ஸ்டோர் வணிக வளாகத்தில் சுமார் ஆயிரம் வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதி உள்ளது. ஆனால், பணிகள் எதுவும் முழுமை பெறாத நிலையில் ஏராளமான வாகனங்கள் சாலைகளின் இரு புறங்களிலும் நிறுத்தப்படுகின்றன.

மேலும் இந்த வணிக வளாகத்திற்கு ஆட்டோக்களில் வருபவர்களுக்கு முறையான வசதிகள் எதுவும் செய்யப்படாததால் அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இச்சாலையைப் பயன்படுத்துவோரும் மற்றும் அருகில் உள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

சாத்தையார் அணையின் உபரி நீர் வரும் வரத்து கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் மழை நீர் லேக் ஏரியா பகுதியில் உள்ள குடியிருப்புக்குள் புகுவதற்கு வாய்ப்புள்ளது. கட்டடப் பணிகள் முழுமை பெறுவதற்கு முன்பாகவே எவ்விதமான அவசரகால வெளியேறும் வழிகள் இன்றி கட்டடம் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய வணிக வளாகத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் முறையாக அகற்றப்படுவதை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை.

இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலான அனைத்து பிரச்னைகளுக்கும் உரிய தீர்வு காணப்படும் வரை சூப்பர் சரவணா ஸ்டோர் செயல்பட செயல்பட தற்காலிக தடை விதிக்க வேண்டும் அல்லது சில தலங்களையாவது மூட உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முரளி சங்கர், கட்டுமானப் பணிகள் முழுமையாக முடிவடையாத நிலையிலும் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாத நிலையிலும் வணிக வளாகத்தை திறந்து பயன்பாட்டுக்குக் கொணர எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து வழக்குத் தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர், வருவாய் துறை அலுவலர், காவல் துறை ஆணையர், போக்குவரத்து காவல்துறை ஆணையர் மற்றும் பொதுப்பணித்துறையின் கண்காணிப்பு பொறியாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: குட்கா வழக்கில் கைதானவர்கள் நலத்திட்ட உதவிகளுக்கு ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் - நீதிமன்றம்

Last Updated : Dec 21, 2022, 6:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.