ETV Bharat / state

அரசு பொறியாளர் மணல் கடத்தி விற்பனை செய்த விவகாரம்: உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கடும் காட்டம்

author img

By

Published : Aug 11, 2021, 8:04 AM IST

மதுரை
மதுரை

மதுரை: அரசு பொறியாளர் மணலை சட்டவிரோதமாகக் கடத்தி தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்தாக வந்த புகார் குறித்த விசாரணையில், ”இது போன்ற செயல்கள் கடுமையான குற்றமாக பார்க்கப்பட வேண்டும்” என நீதிபதி காட்டம் தெரிவித்தார்.

மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அரவிந்த் பாலாஜி தாக்கல் மனுவில், “மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை தேர்வு செய்யப்பட்டு மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தத் திட்டத்தை மதுரை மாநகராட்சியின் தலைமைப் பொறியாளர் அரசு என்பவர் தலைமையேற்று நடத்தி வந்தார். இந்தத் திட்டத்தில் பெரியார் பேருந்து நிலைய கட்டுமானத்திற்காக 30 அடிக்கு மேல் ஆழம் தோண்டப்பட்டது. இதில் வளமிகுந்த மணல் தோண்டப்பட்டது.

இந்த மணலை கனிமவளத் துறையினருக்கு தகவல் தெரிவித்து ஓரிடத்தில் சேர்க்க வேண்டும். ஆனால் தலைமைப் பொறியாளராக இருந்த அரசு, கனிமவளத்துறை மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்காமல் 15 கோடி ரூபாய் அளவிற்கு மணலை சட்டவிரோதமாகக் கடத்தி தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்துள்ளார்.

அரசின் இடத்தில் இருந்து மணலை சட்டவிரோதமாகக் கடத்தியது குறித்து துறைரீதியான நடவடிக்கை எடுக்க அலுவலர்களிடம் மனு அளித்திருந்தேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அரசு பொறியாளர் மீது ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிந்துள்ளது. இவரது அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின்போது கணக்கில் வராத பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. எனவே சட்டவிரோதமாக மணல் கடத்தி விற்பனை செய்த பொறியாளர் அரசு மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நேற்று (ஆக.10) நீதிபதி கிருபாகரன் துரைசாமி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் ”இது போன்ற செயல்கள் கடுமையான குற்றமாக பார்க்கப்பட வேண்டும்.

எனவே மனு குறித்து நகராட்சி நிர்வாகத் துறை முதன்மைச் செயலர், மாநகராட்சி ஆணையாளர், கனிமவளத் துறை இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: EXCLUSIVE INTERVIEW: நாடே எங்களை வரவேற்றது போல் இருந்தது - கேப்டன் மன்பிரீத்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.