ETV Bharat / state

மதுரையில் முதுமக்கள் தாழி கண்டெடுப்பு! கழிவு நீர் தொட்டி அமைக்க குழி தோண்டிய போது கிடைத்த பொக்கிஷம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 23, 2023, 1:07 PM IST

Updated : Sep 23, 2023, 5:37 PM IST

மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி அருகே நல்லமரம் கொட்டாணிபட்டி கிராமத்தில் பெருங்கற்காலத்தை சேர்ந்த முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டு உள்ளது. அந்த பகுதியில் அகழ்வாராய்ச்சி நடத்தக் கோரி பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

மதுரை: தே.கல்லுப்பட்டி அருகே நல்லமரம் கொட்டணிபட்டி கிராமத்தை சேர்ந்த பாண்டியன் என்பவர் தன் வீட்டிற்கு கழிவுநீர் தொட்டி கட்டுவதற்காக குழி தோண்டிய போது பெரிய பானை புதைந்திருந்தது கண்டறியப்பட்டது.

அந்த கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவர் கொடுத்த தகவலின்படி சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லூரியின் வரலாற்றுத்துறை பேராசிரியரும், மதுரை பாண்டிய நாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளருமான முனைவர் து.முனீஸ்வரன், ஆய்வாளர் அனந்தகுமரன் ஆகியோர் அந்த பானையை ஆய்வு செய்தனர்.

அந்த குறிப்பிட்ட பானை பெருங்கற்காலத்தைச் சேர்ந்த முதுமக்கள் தாழி என கண்டறியப்பட்டது. உடனடியாக கிராம நிர்வாக அதிகாரி அய்யனார் பாண்டியராஜூக்கு தகவல் கொடுக்கப்பட்டு, நேரடியாக களத்திற்கு வந்து முதுமக்கள் தாழியை பாதுகாப்புடன் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

முதுமக்கள் தாழி கண்டெடுப்பு
முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

இது குறித்து தொல்லியல் கள ஆய்வாளர் முனைவர் து. முனீஸ்வரன் கூறியாதாவது, "இன்றைய தமிழ்ச் சமூகத்தில் இறப்பு சடங்கு முறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. குறிப்பாக பெருங்கற்கால தொடக்கத்தில் இறந்தவர்களின் உடலை தங்கள் வாழ்விடங்களுக்கு வெளியே மலைப்பகுதிகளிலும் காட்டுப் பகுதிகளிலும் போட்டுவிடுவார்கள்.

அதை நாய், நரி, கழுகு, பறவைகள், மிருகங்கள் இரையாக உண்ட பின்பு அங்கு கிடக்கும் எலும்புகளைச் சேகரித்து அதோடு அவர்கள் பயன்படுத்திய மண்பானைகள், தானியங்களையும் உள்ளே வைத்து மூடி வீ (V) வடிவ குழியில் வைத்து அடக்கம் செய்துள்ளனர். பிற்காலத்தில் தான் மனிதன் இறந்த பிறகு உடலை முதுமக்கள் தாழியில் வைத்து அடக்கம் செய்து அவர்கள் நினைவாக புதைத்த முதுமக்கள் தாழியை சுற்றி கல் அடுக்குகள் வைத்துப் பாதுகாக்கும் வழக்கம் உருவானது.

முதுமக்கள் தாழி கண்டெடுப்பு
முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

முதுமக்கள் தாழி பொதுவாக தாய் தெய்வ வழிபாட்டுக்கான கூறுகளைக் கொண்டது. குறிப்பாக தாய் குறியீடு என்பது மனிதன் இறந்த பின் மீண்டும் தாயின் கருவறைக்குள் சென்று பிறக்கிறான் என ஆதிமனிதன் நம்பினான். ஆகவே தாழியின் நடுவில் அகன்று கருவுற்ற தாயின் வயிற்றைப் போன்று அவை அமைக்கப்பட்டுள்ளன.

நல்லமரம் முதுமக்கள் தாழி: நல்லமரம் கிராமத்தில் கண்டறியப்பட்ட முதுமக்கள் தாழி மேற்குப்பகுதியில் உடைந்த நிலையில் கிட்டத்தட்ட 7 அடி ஆழம் குழி தோண்டும் போது கண்டறியப்பட்டது. முதுமக்கள் தாழியின் கழுத்துப் பகுதியில் வளையம் போன்ற ஆபரணம் வரையப்பட்டுள்ளது. குறிப்பாக முதுமக்கள் தாழியின் உயரம் 2.5 அடி, அகலம் 1.5 அடி , சுற்றளவு 6.1 அடி, விட்டம் 1.5 அடி கொண்டதாகும்.

இதன் உள்ளே கருப்பு, சிவப்பு நிறத்தில் மெல்லிய தடித்த பானை ஓடுகள் உடைந்த நிலையில் உள்ளன. இவை பானையின் மேல்பகுதியை மூடிய மெல்லிய பானையின் உடைந்த பகுதிகளாக இருக்கலாம். முதுமக்கள் தாழியின் உட்பகுதியில் மனிதனின் மண்டை ஓடு மேல் பகுதி, கை கால் எலும்புகள் உடைந்த நிலையில் கிடைத்துள்ளன.

இப்பகுதியில் பெருங்கற்கால பண்பாடு முறை இருந்தற்கான சான்றாக கண்டறியப்பட்ட முதுமக்கள் தாழி உள்ளது. தற்போது கிராம நிர்வாக அலுவலகத்தில் பாதுகாப்பாக இருக்கின்ற பழமையான முதுமக்கள் தாழியை முறையாக ஆய்வுக்குட்படுத்தி பாதுகாக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: எஸ்பிஐ வங்கியில் திடீர் தீ விபத்து! பணம், முக்கிய ஆவணங்கள் சேதமா?

Last Updated :Sep 23, 2023, 5:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.