ETV Bharat / state

கருணாஸ் கொலை மிரட்டல் விடுத்த விவகாரம்: நிலை அறிக்கை தாக்கல் செய்ய ராமநாதபுரம் எஸ்பிக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

author img

By

Published : Nov 11, 2020, 6:23 PM IST

கருணாஸ் கொலை மிரட்ட விடுத்த விவகாரம்
கருணாஸ் கொலை மிரட்ட விடுத்த விவகாரம்

நடிகரும், திருவாடானை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான கருணாஸ், அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுப்பதால் தனக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி முக்குலத்தோர் புலிப்படை பொதுச் செயலாளர் தாக்கல் செய்த மனுவுக்கு, ராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் நிலை அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த பாண்டித்துரை தாக்கல் செய்த மனுவில்," நான் தற்போது முக்குலத்தோர் புலிப்படையின் பொதுச் செயலாளராக இருந்து வருகிறேன். கடந்த 2013 ஆம் ஆண்டு முக்குலத்தோர் புலிப்படை என்னும் அமைப்பைத் தொடங்கி நடிகர் கருணாஸ் தலைவராகவும், நான் பொதுச் செயலாளராகவும் இருந்து கட்சியை நடத்தி வந்தோம்.

கருணாஸ் தற்போது திருவாடானை தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். இதற்கிடையில் எனக்கும், அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து நடிகர் கருணாஸின் தூண்டுதலின்பேரில், கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் எனது வீட்டில் சிலர் பெட்ரோல் குண்டு வீசியும், அரிவாளால் தாக்கியும் மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்து நான் ராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்து, தற்போது நிலுவையில் உள்ளது. இந்நிலையில் என்னை மிரட்டும் வகையில் பலமுறை அவரது ஆட்களையும் கூலிப்படையை வைத்து மிரட்டல் விடுத்து வருகின்றனர். கடந்த 2009 ஆகஸ்ட் மாதம் சென்னையில் இருந்து கூலிப்படையை வைத்து என்னை கொலை செய்ய திட்டமிட்டதாக, மணலூர் செந்தில் என்பவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாகத் தெரிகிறது.

இதுபோல் எனது வீட்டில் நான் இல்லாத நேரத்திலும் பலர் என் வீட்டு முன்பு இருந்த வாகனங்களை அடித்து நொறுக்கிவிட்டு மிரட்டி சென்றனர். அப்போது வீட்டின் அருகே இருந்தவர்களும், வீட்டு மாடியில் குடியிருப்பவர்களும் சத்தம் எழுப்பியதை அடுத்து, அங்கிருந்து அவர் தப்பியோடினர்.

எனக்கு இதுபோன்று அடிக்கடி மிரட்டல் விடுக்கப்படுகிறது. தற்போது கருணாஸ், சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பதால் அமைச்சர்களையும், உயர் அதிகாரிகளையும் சந்தித்து தனது பதவியை தவறாகப் பயன்படுத்தி, தனது ஆதரவாளர்களை குற்றச்செயல்களில் இருந்து காப்பாற்றி வருகிறார். எனவே கருணாஸ், அவரது ஆதரவாளர்களால் எனது உயிருக்கு ஆபத்து எழுந்துள்ளது. ஆகையால், எனக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிடுமாறு மனுவில் கோரியிருந்தார்.
இவ்வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று(நவ.11) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் கொடுத்த புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை ராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை வரும் டிசம்பர் முதல் வாரத்துக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.