ETV Bharat / state

பட்டாசுகளை இருப்பு வைக்கவும் அனுமதி பெறவேண்டும்..! பார்சல் அலுவலகங்களுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 30, 2023, 10:56 PM IST

பட்டாசுகளை இருப்பு வைக்கவும் அனுமதி பெறவேண்டும் நீதிமன்ற உத்தரவு
பட்டாசுகளை இருப்பு வைக்கவும் அனுமதி பெறவேண்டும் நீதிமன்ற உத்தரவு

பார்சல் சர்வீஸ் நடத்தும் அலுவலகங்களில், வெடி பொருட்கள் மற்றும் பட்டாசுகள் போன்றவை இருப்பு வைத்து அனுப்பும்போது, அதற்கும் முறையான அனுமதி பெற வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தியுள்ளது.

மதுரை: விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 10 வருடகளாக சிவகாசியில் இருந்து தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளுக்கு பட்டாசு பொருட்கள், பேப்பர் பொருட்கள் போன்றவை லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

இதற்கான உரிய அனுமதி பெற்ற பின்பு தான் பொருட்கள் அனுப்பப்படுகிறது. இத்தகைய பொருட்களை இருப்பு வைத்து இருக்கும் அலுவலகத்தை அக்டோபர் 20ஆம் தேதி அன்று ஆய்வு செய்து, உரிய அனுமதி இல்லாமல் பட்டாசுகள் வைத்திருப்பதாக கூறி, விஸ்வநத்தம் கிராம நிர்வாக அலுவலரின் புகாரின் பெயரில், அலுவலகம் சீல் வைக்கப்பட்டது.

மேலும், சட்ட விரோதமாக பட்டாசு பொருட்களை வைத்திருப்பதாக கூறி, சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது முற்றிலும் சட்டத்திற்கு எதிரான செயலாகும். எனவே உரிய அனுமதி பெற்று லாரி சேவை மூலம் பொருட்களை அனுப்பப்படும் அலுவலகத்தில் வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பட்டாசுகளை லாரி சேவை அலுவலகத்தில் உரிய அனுமதி பெறாமல் வைத்திருந்ததால் தான் வழக்கு பதிந்து கடைக்கு சீல் வைத்ததாக தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "பட்டாசுகளை இதுவரை உரிய அனுமதி பெற்றாமல் கடைகளுக்கு பார்சல் அனுப்பப்படுகின்றன, இனி எதிர்வரும் காலங்களில் முறையான அனுமதி பெற்று பார்சல் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுரை கூறினார்.

மேலும், எதிர்காலங்களில் பார்சல் சர்வீஸ் நடத்தும் அலுவலகங்களில், பட்டாசுகளை இருப்பு வைத்து அனுப்பும்போது அதற்கும் முறையான அனுமதி பெற வேண்டும் என்று கூறிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், லாரி பார்சல் அலுவலகத்தில் வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: தேனியில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த விவசாயி உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.