ETV Bharat / state

மீண்டும் விசாரிக்கப்படும் கச்சத்தீவு வழக்கு - மீனவர்கள் கைதை அடுத்து நடவடிக்கை

author img

By

Published : Jul 10, 2023, 8:28 PM IST

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கறிஞர் முறையீடு செய்ததை அடுத்து, நாளை மறுநாள் இவ்வழக்கு விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையினரிடம் இருந்து இந்திய மீனவர்களை மீட்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அவசர வழக்கு
இலங்கை கடற்படையினரிடம் இருந்து இந்திய மீனவர்களை மீட்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அவசர வழக்கு

மதுரை: சென்னையை சேர்ந்த பீட்டர் ராயன் என்பவர் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்களை விடுவிக்கக்கோரி இலங்கை அரசிடம் மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் அவர், “இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு கச்சத்தீவு, ராமேஸ்வரத்தின் ஒருபகுதியாகவே இருந்து வந்தது.

பின்னர் இந்தியா மற்றும் இலங்கை செய்து கொண்ட உடன்படிக்கையின் படி (Treaty of Katchatheevu Island) கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த உடன்படிக்கையில் பாரம்பரியமாக மீன் பிடிப்பு தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு எந்த இடையூறும் செய்யக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், 1983 முதல் 2005 வரை 378 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர் என RTI தகவல் உள்ளது. இதுவரை தமிழக மீனவர்கள் பல கோடி ரூபாய் மதிப்புள்ள படகுகளை இழந்துள்ளனர். அதன் பின்பு, 2013 ஆம் ஆண்டு 111 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த 19.06.2023-ல் 9 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு மீண்டும் விடுவிக்கப்பட்டனர். ஆனால், தற்போது கடந்த 21.06.2023 ஆம் தேதி 22 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
1974 ஆம் ஆண்டு இந்தியா - இலங்கை செய்து கொண்ட உடன்படிக்கையை மீறி இலங்கை கடற்படையினர் செயல்பட்டு வருகின்றனர்.

எனவே, இடைக்கால உத்தரவாக 22 மீனவர்களையும் இந்தியா மீட்டு கொண்டுவர, உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். 1974 ஆம் ஆண்டு இந்தியா - இலங்கை என இரு நாடுகளுக்கு இடையேயான உடன்படிக்கையை ரத்து செய்து, கச்சத்தீவை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க உத்தரவிட வேண்டும்” எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து இந்த மனு, தலைமை நீதிபதி அமர்வு முன்பாக இன்று (ஜூலை 10) விசாரணைக்கு வந்தது. அதில், கச்சத்தீவை மீட்பது குறித்து நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனவும் மீனவர்கள் கைது தொடர்பாக
மத்திய, மாநில அரசு எடுத்த நடவடிக்கை குறித்து பதில் அளிக்க உத்தரவிட்டும் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கும் பொழுது, தற்போது மீண்டும் சில இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். எனவே இந்த வழக்கை மீண்டும் அவசர வழக்காக எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பாக மனுதாரர் முறையீடு செய்தார். இதனைத்தொடர்ந்து வழக்கை நாளை மறுநாள் (ஜூலை 12) விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நெக்ஸ்ட் தேர்விற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்:டாக்டர் சங்கம் வலியுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.