ETV Bharat / state

குழந்தை மாயம் புகார்: டேட்டா வங்கியில் பெற்றோர், குழந்தையின் DNA சேகரிக்க - நீதிமன்றம் அதிரடி உத்தரவு...

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 9, 2023, 7:10 PM IST

hc-madurai-bench-order-to-take-dna-data-of-both-parents-and-child-in-child-missing-cases
குழந்தை மாயம் புகார்: டேட்டா வங்கியில் பெற்றோர், குழந்தையின் DNA சேகரிக்க - நீதிமன்றம் அதிரடி உத்தரவு...

Child Missing Case: குழந்தைகள் மாயம் தொடர்பான புகார்கள் வந்தவுடன் பெற்றோரின் மரபணு (DNA) விபரங்களை டேட்டா வங்கியில் சேகரிக்கவும், குழந்தைகள் மீட்கப்படும் போது, அதனை ஒப்பிட்டு நடவடிக்கை எடுக்கவும், இது தொடர்பாக உள்துறை செயலாளரும், பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏடிஜிபியும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை: குழந்தை மாயம் தொடர்பான புகார்கள் வரும்போது, உடனடியாக பெற்றோரின் மரபணு (DNA) விபரங்களை டேட்டா வங்கியில் சேகரித்துப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடவும், இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர்பாக உயர்நீதிமன்ற பதிவுத்துறையில், உள்துறை செயலாளரும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏடிஜிபியும் 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

நெல்லையைச் சேர்ந்த கணவன், மனைவி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு விசாரணையைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகத் தாக்கல் செய்த மனுவில், 'எங்களுக்குக் குழந்தை இல்லை. ஒரு குழந்தையைத் தத்தெடுக்க முடிவு செய்து அதற்காக 1.8.2022-ல் பதிவு செய்தோம். இந்நிலையில், திருமணமாகாத பெண் ஒருவருக்குப் பிறந்த ஆண் குழந்தை எங்களுக்குக் கிடைத்தது.

அந்த குழந்தைக்குப் பிறப்பு சான்றிதழ் பெற முயன்ற போது, சட்டப்படி தத்தெடுக்காமல் குழந்தையை வளர்த்து வருவதாக வி.கே.புரம் காவல்துறை எங்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், குழந்தையை மாவட்ட சமூகப்பணிகள் இயக்குநர் வசம் ஒப்படைத்தனர். அந்த குழந்தையை சட்டப்படி தத்தெடுக்க அனுமதி கோரி, 3.3.2023-ல் மனு அனுப்பினேன். அந்த மனு அடிப்படையில் குழந்தையை சட்டப்படி தத்தெடுக்க, அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்' என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை இன்று (டிச.9) விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில், 'குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டத்தின் படி, சிறார் நீதியாகக் குழந்தை தத்தெடுப்பு குறித்துக் கூறப்பட்டுள்ளது. மனுதாரர்கள் சட்டப்படியான குழந்தை தத்தெடுப்பு முறைகளைப் பின்பற்றவில்லை. இருப்பினும், அந்த குழந்தை 6 மாதமாக மனுதாரர்களின் பராமரிப்பிலிருந்துள்ளது. குழந்தை கடத்தப்பட்டிருந்தால் அந்த குழந்தையை மீட்டு உண்மையான பெற்றோரிடம் ஒப்படைப்பது தான் நியாயமானது.

இங்கு ஓன்றரை ஆண்டுகள் முடிந்துவிட்டது. ஆனால், காவல்துறை இன்னும் உண்மையைக் கண்டுபிடிக்கவில்லை. குழந்தைகள் மாயம் தொடர்பாக ஏராளமான புகார்கள் பதிவாகி வருகின்றன. குழந்தை மாயம் தொடர்பான புகார்கள் வரும் போது, உடனடியாக பெற்றோர்களின் மரபணு (DNA) விபரங்களைச் சேகரித்து டேட்டா வங்கியில் பாதுகாக்க வேண்டும். குழந்தை மீட்கப்படும் போது, குழந்தையின் டிஎன்ஏவுடன் டேட்டா வங்கியில் இருக்கும் பெற்றோரின் டிஎன்ஏ விபரங்களை ஒப்பிட்டுப் பார்த்து முடிவெடுக்க முடியும்.

இது தொடர்பாக உள்துறை செயலாளரும், பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏடிஜிபியும் அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும். இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர்பாக உயர்நீதிமன்ற பதிவுத்துறையில் 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கில் மேற்கண்ட நடைமுறைகளை அதிகாரிகள் பின்பற்ற வேண்டும். குழந்தை கடத்தப்படாவிட்டால் மனுதாரர்கள் குழந்தையை சட்டப்படி தத்தெடுக்க அனுமதிக்க வேண்டும்.

இந்த வழக்கில், வி.கே.புரம் காவல் ஆய்வாளர் எதிரிகளுக்குச் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும். விசாரணையை முடித்து 3 மாதத்தில், நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மனுதாரர் குழந்தையைத் தத்தெடுக்கும் வகையில், மத்திய தத்தெடுப்பு ஆணையத்தின் விதிகளில் தளர்த்த வேண்டும்' என நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சிறுமிக்கு போலீசார் கை விலங்கிட்டு அழைத்துச் சென்ற விவகாரம்; தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.