ETV Bharat / state

நெல்லை பூசாரி கொலை வழக்கு: எஸ்.பி பதிலளிக்க உத்தரவு!

author img

By

Published : Apr 26, 2021, 7:54 PM IST

Hc
Hc

திருநெல்வேலி சீவலப்பேரி கிராமத்தில் கொலையான பூசாரியின் வழக்கு மற்றும் கோயில் நில ஆக்கிரமிப்பு குறித்து எஸ்பி விசாரிக்க கோரிய வழக்கில், அம்மாவட்ட எஸ்பி பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தாலுகா சீவலப்பேரி கிராமத்தில் சுடலை மாடசாமி கோயில் அமைந்துள்ளது.

இந்தக் கோயிலில், எங்களது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பூசாரியாகப் பணியாற்றி வருகின்றனர். அப்பகுதியில் எங்களது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குறைந்த அளவே உள்ளனர். மாற்று சமூகத்தினர் அதிகளவு இருந்து வருகின்றனர்.

மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கோயில் நிலத்தை சமீபகாலமாக ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். மேலும் கோயில் இடங்களில் கடைகள் அமைத்து வருகின்றனர். இதனால் ஏற்பட்ட பிரச்னையில் எங்கள் சமூகத்தைச் சேர்ந்த எனது உறவினர், ஏப்ரல் 18ஆம் தேதி சிதம்பரம் (எ) துரை கொலை செய்யப்பட்டுள்ளார்.

சீவலப்பேரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. கொலை செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கோயில் நிலையத்தில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனக்கூறி, சிதம்பரம் (எ) துரை உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டோம்.

ஆனால் அலுவலர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சிதம்பரம் (எ) துரை கொலை வழக்கு குறித்து திருநெல்வேலி எஸ்பி விசாரிக்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும், கொலை செய்தவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவும் கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கவும் உத்தரவிட வேண்டும்" என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இவ்வழக்கு குறித்து திருநெல்வேலி மாவட்ட எஸ்பி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் மாதத்திற்கு ஒத்தி வைத்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.