ETV Bharat / state

மீண்டும் க்ரைம் சீனுக்கு வந்த வரிச்சியூர் செல்வம்.. தட்டித்தூக்கிய தென் மண்டல ஐஜி.. நடந்தது என்ன?

author img

By

Published : Jun 22, 2023, 11:02 PM IST

Etv Bharat
Etv Bharat

தமிழ்த் திரைப்படங்களில் வரும் கொலைக் காட்சிகளையே மிஞ்சும் அளவுக்கு 'சம்பவம்' நடத்திய பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் கைது, விருதுநகர் காவல் துறைக்கு பொதுமக்கள் பாராட்டையும், தென் மண்டல காவல் துறைத் தலைவர் அஸ்ரா கர்க்குக்கு உயர் நீதிமன்ற நீதிபதியின் பாராட்டையும் பெற்றுக் தந்துள்ளது. அந்த வழக்கின் பின்னணி குறித்த சிறப்பு அலசல்.

மதுரை: மதுரைமாவட்டம் கருப்பாயூரணிக்கு அருகே உள்ளது வரிச்சியூர் கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த செல்வம், கடந்த 1990களில் சிறு சிறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு, கட்டப் பஞ்சாயத்துகளின் வாயிலாக கொஞ்சம் கொஞ்சமாக வெளியே தெரிய ஆரம்பித்தார். ஒரு சில கொலைச் சம்பவங்களை அடுத்து, ரவுடி வரிச்சியூர் செல்வம் பிரபலமானார். காவல் துறையினரின் என்கவுண்ட்டர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், தனது செயல்பாடுகளை எல்லாம் சிறிது காலம் நிறுத்தி வைத்திருந்தார்.

இந்நிலையில் திடீரென மதுரை வெங்கலக்கடைத் தெரு நகைக்கடைகளிலிருந்து நகைக்கடையே தெருவில் நடந்து வருவதுபோன்று, கழுத்து, காது, கைகளில் கிலோ கணக்கில் ஆபரணத் தங்க நகைகளை அணிந்து கொண்டு விலை உயர்ந்த கார்களில் ஆடம்பரமாக பவனி வர ஆரம்பித்தார். இவரது தோற்றம் காரணமாக பொதுமக்களின் கவனமும் இவர் மேல் விழத் தொடங்கியது.

இதன் காரணமாகவே பல வைரல் பேட்டிகளுக்கு சொந்தக்காரராக ஆனார். இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு அத்திவரதரை விஜபி வரிசையில் தரிசிக்கச் சென்று, பெரும் சர்ச்சைக்கு ஆளானார். இடையில் தமிழ்த் திரைப்படங்களில் வேறு நடிப்பதாக பேச்சு எழுந்தது. 'மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே நான் இதுபோன்று வெளியிடங்களுக்கு வருகிறேன். அதுமட்டுமல்ல... தற்போது நான் தாதா இல்லை.. தாத்தா. எனக்கு பேரன் பேத்திகள் உள்ளனர்' என்றெல்லாம் பேட்டி கொடுத்தார்.

இதில் வேடிக்கை என்னவென்றால் சர்வதேச மனித உரிமை அமைப்பு ஒன்றில் நிர்வாகியாக மட்டுமன்றி, தன்னை ஒரு பத்திரிகையாளராகவும் கூறிக்கொண்டவர். தன்னுடைய ரோல் மாடலாக விஜய் மல்லையாவைக் குறிப்பிடும் வரிச்சியூர் செல்வம், 'பொறக்கும் போது ஏழையா பொறந்தாலும், சாகும்போது கண்டிப்பா பணக்காரனாதான் சாகணும்' என்பது இவரது தத்துவ விளக்கம் ஆகும். அண்மையில் பாஜகவிலிருந்த திருச்சி சூர்யா மற்றும் அதே கட்சியில் இருந்த காயத்ரி ரகுராமோடு தொடர்பு படுத்தி மிகப் பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டவர்.

வரிச்சியூர் செல்வம்
வரிச்சியூர் செல்வம்

நேரடியாக குற்றச் சம்பவங்களில் ஈடுபடவில்லையென்றாலும், மறைமுகமாக அவரது செயல்பாடுகள் இருந்து வருகின்றன என காவல் துறையினர் தரப்பில் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது வரிச்சியூர் செல்வம் தனது நண்பரின் கொலை வழக்கில் சிக்கியிருப்பது, மிகப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனை மிகச் சரியாக புலனாய்வு செய்து, குற்றவாளியைத் தூக்கிய விருதுநகர் காவல் துறைக்கு பொதுமக்கள் மத்தியில் பாராட்டு குவிந்து வருகிறது.

இந்நிலையில் குற்றச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நபர்கள் குறித்த நவீன ஆடியோ-வீடியோ தகவல்கள் காரணமாக வரிச்சியூர் செல்வம் சிக்கியதால், இந்த வழக்கு குறித்து விசாரணை செய்து வரும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி கே.கே. ராமகிருஷ்ணன் தென் மண்டல காவல் துறைத் தலைவர் அஸ்ரா கர்க்கையும் பாராட்டியுள்ளார்.

சரி இப்போது வரிச்சியூர் செல்வம் கைது பின்னணிக்கு வருவோம். வரிச்சியூர் அருகே உள்ளது குன்னத்தூர் கிராமம். இந்தக் கிராமத்தின் ஊராட்சித் தலைவர் பதவி சுழற்சி அடிப்படையில் இரண்டு சமூகங்களுக்கிடையே தேர்தல் இன்றி தேர்தெடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த ஊராட்சித் தேர்தலில் கிருஷ்ணன் என்பவர் கடந்த 2020-ஆம் ஆண்டு போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்.

அந்தத் தேர்தலில் வர்ச்சியூர் செல்வத்தின் தம்பி வரிச்சியூர் செந்திலின் மனைவி மலர்விழி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட நிலையில், இதற்காக கிருஷ்ணன் மலர்விழியின் வெற்றிக்கு ஒத்துழைக்க வேண்டும் என்பதாக ஒப்பந்தம். வாக்கு எண்ணிக்கையின் போது பிற ஊர்களில் முன்னணியில் இருந்த மலர்விழி, குன்னத்தூர் கிராமத்தில் குறைந்த வாக்குகளைப் பெற்றதால் தோற்றுப் போகிறார்.

வரிச்சியூர் செல்வம்
வரிச்சியூர் செல்வம்

இந்த துரோகத்திற்காக கிருஷ்ணனைப் பழி வாங்க வேண்டும் என்ற கடுங்கோபத்தில் இருந்த வரிச்சியூர் செந்தில், அதற்கான தருணத்திற்காகக் காத்திருந்தார். குன்னத்தூர் ஊருக்கு அருகேவுள்ள மலை ஒன்றில் கிருஷ்ணனும் ஊராட்சி செயலர் முனியசாமியும் தனியாக இருந்தபோது வரிச்சியூர் செந்தில், குன்னத்தூரைச் சேர்ந்த பாலகுருவுடன் இணைந்து கிருஷ்ணனைப் படுகொலை செய்தார்.

அதனைத் தடுக்க முயன்ற முனியசாமியையும் கொலை செய்து விட்டு இருவரும் தப்பியோடினர். பிறகு காவல் துறையினர் சம்பவம் நடந்த 15 நாட்களில் குற்றவாளிகளாகக் கருதப்படும் மேற்கண்ட இருவரைக் கைது செய்தனர். மேலும் இக்கொலையில் தொடர்புடைய வரிச்சியூரைச் சேர்ந்த கார்த்திக் என்பவரும் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இதில் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி, இவ்வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், பாஸ்கரன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில் இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகளை தப்பிக்கவிடும் நோக்கத்துடன் காவல் துறையினர் செயல்பட்டு வருவதாகவும் அதில் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில் குன்னத்தூர் இரட்டைக் கொலை வழக்கில் தொடர்புடைய 4-ஆவது குற்றவாளியான செந்தில்குமார் என்பவரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. இந்நிலையில் தனது கணவர் செந்தில்குமார் காணாமல் போனதாகவும், அவரைக் கண்டுபிடித்துத் தரக்கோரி அவரது மனைவி முருகலெட்சுமி நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். காணாமல் போன செந்தில்குமார் குறித்து தென்மண்டல காவல் துறை தலைவர் அஸ்ராகர்க் விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்தது.

அதற்கான விசாரணை அறிக்கையையும் அவர் தாக்கல் செய்தார். அதில், கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த செந்தில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரியில் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் வரிச்சியூர் செல்வம் சம்பந்தப்பட்டுள்ளதால் தனிப்படை காவல் துறையினர், அவரைக் கைது செய்துள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இப்போது சம்பவத்திற்கு வருவோம். ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் மிகுந்த நம்பிக்கைக்குரிய நபர்களில் ஒருவர்தான் இந்த செந்தில். செல்வத்தின் அனைத்துவிதமான நடவடிக்கைகளிலும் செந்திலுக்கு முக்கியமான பங்கு உண்டு. இந்நிலையில் வரிச்சியூர் செல்வத்தின் 3 ஆவது மனைவியோடு செந்தில் தவறான தொடர்பில் இருந்ததாகவும், அதனைக் கண்டித்து பலமுறை செந்திலை, செல்வம் எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனாலும் இந்தத் தொடர்பு நீடித்து வந்துள்ளது. ஒரு கட்டத்திற்குப் பிறகு வரிச்சியூர் செல்வம், செந்திலை தன்னுடனான நட்பு வட்டத்திலிருந்து விரட்டி விட்டதாகவும், அப்போது செந்தில், குன்னத்தூர் இரட்டைக் கொலை உள்பட பல்வேறு சம்பவங்களில் வரிச்சியூர் செல்வத்துக்கு உள்ள தொடர்பை அம்பலப்படுத்துவதாகவும் கூறிவிட்டுச் சென்றுள்ளார். காணாமல் போன தனது கணவர் செந்தில்குமாரைக் கண்டுபிடிக்க ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டதன் அடிப்படையில், தென் மண்டல காவல் துறைத் தலைவர் உத்தரவின்பேரில் விருதுநகர் ஏஎஸ்பி கருண்காரத் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்தார்.

இந்நிலையில் செந்தில்குமாரை அவரது நண்பர் வரிச்சியூர் செல்வம் கடைசியாக அழைத்துச் சென்றதை, செந்தில்குமாரின் செல்பேசியில் வந்த அழைப்புகளைக் கொண்டு கண்டறிந்தனர். உடனடியாக வரிச்சியூர் செல்வத்தை தனிப்படை காவல் துறையினர் அழைத்துக் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின்போது வரிச்சியூர் செல்வம், வேறு சில நண்பர்களோடு இணைந்து கடந்த 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் செந்தில்குமாரைக் கடத்தி, சென்னை நீலாங்கரைக்குக் கொண்டு போய், அங்கே செந்திலை சுட்டுக் கொன்று, திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் வீசியதாக வரிச்சியூர் செல்வம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனையடுத்து பல்வேறு குற்றப்பிரிவுகளின்கீழ் வரிச்சியூர் செல்வம் கைது செய்யப்பட்டு, மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நீலாங்கரையில் வரிச்சியூர் செல்வத்தின் நண்பர்கள் இருவர் செந்தில்குமாரை சுட்டுக் கொன்றபோது, அதனை தனது செல்பேசியின் வழியாக நேரலையாகப் பார்த்து மகிழ்ந்ததுடன், மதுரையிலிருந்தவாறே செந்திலைக் கொலை செய்யத் தேவையான ஆலோசனைகளை வழங்கியதாக காவல் துறையினரிடம் வாக்குமூலத்தில் வரிச்சியூர் செல்வம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2020ஆம் ஆண்டு மதுரையை உலுக்கிய குன்னத்தூர் இரட்டைப் படுகொலை சம்பவத்தின் விறுவிறுப்பான காட்சி தற்போது நிறைவுப் பகுதியை எட்டியுள்ளதாகவும், அதன் உண்மையான குற்றவாளிகள் யார் என்பதும் இனி தெரிய வரும் என காவல் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: Varichiyur Selvam: கொலை வழக்கில் ரவுடி வரிச்சூர் செல்வம் அதிரடி கைது.. தென் மண்டல ஐஜிக்கு நீதிமன்றம் பாராட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.