மதுரை: இந்திய பிரதமரின் 'ஒன் ஸ்டேஷன்; ஒன் ப்ராடக்ட்’ திட்டத்தின்கீழ் மதுரை ரயில் நிலையத்தில் உலர் மீன் விற்பனைக் கூடம் அமைக்க தெற்கு ரயில்வே ஏற்பாடுகள் செய்துவருகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ற பாரம்பரிய உணவு வகைகள், உற்பத்தி பொருட்களை ரயில் நிலையங்களில் விற்பனை செய்வதற்கு, இந்திய பிரதமரின் ஒன் ஸ்டேஷன் ஒன் ப்ராடக்ட் திட்டத்தின் கீழ் (One Station One Product initiative Project) இந்திய ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
சுற்றுலா பயணிகளாக பல்வேறு மாநிலங்களுக்குச் செல்லும் இந்திய மக்களுக்கு அந்தந்த பகுதிகளின் முக்கியத்துவம் குறித்து அறிந்துகொள்வதற்கும், அப்பகுதி சார்ந்த பொருட்களை ரயில் நிலையத்திலேயே வாங்கிக்கொள்ளவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் ரயில் பயணிகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்த அடிப்படையில் மதுரை ரயில் நிலையத்தில் மதுரைக்கே உரித்தான 'சுங்குடி சேலை விற்பனைக் கூடம்’ ஏற்கனவே இயங்கி வருகிறது.
இந்நிலையில் தற்போது முதல்முறையாக இந்திய ரயில்வேயில் முதல்முறையாக, மதுரை ரயில் நிலையத்தில் 'லூமிரியன்ஸ் டிரை பிஷ் ஹட்' (Lemurian Dry Fish Hut) என்னும் கருவாட்டு விற்பனைக்கூடம்’ இன்று (பிப்.12) தொடங்கப்பட்டது. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவர்கள் எளிதில் வாங்கி செல்லும் வண்ணம் ரூ.100-லிருந்து இந்த கருவாடுகள் விற்பனை செய்யப்பட உள்ளன.
அந்த வகையில், இங்கு ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மண்டபம் பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் கருவாடுகள் தயார் செய்யப்பட்டு, இந்த விற்பனைக் கூடத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "கட்சிகள் சமூக நீதி பேசும் சூழலில்தான், குடிநீரில் மலம் கலக்கும் சம்பவம் நடக்கிறது" - ஆளுநர் ரவி!