ETV Bharat / state

வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு..! கரையோர சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்! போக்குவரத்திற்கு தடை..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 24, 2023, 5:48 PM IST

due to overflowing water in madurai vaigai river traffic is prohibited on the river side roads
மதுரை வைகை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோர சாலைகளில் போக்குவரத்துக்கு தடை

Traffic is Prohibited on Vaigai River Side Roads: மதுரை வைகை ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி கரைகளை ஒட்டிய சாலைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மதுரை வைகை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோர சாலைகளில் போக்குவரத்துக்கு தடை

மதுரை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் வருசநாடு, சதுரகிரி உள்ளிட்ட மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதையடுத்து, வைகை நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்து, மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

இதனால் வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. கடந்த 10ஆம் தேதி நீர்மட்டம் 71 அடியை நெருங்கியதை அடுத்து திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

அணையின் நீர்மட்டம் 67.65 அடியாக இருந்த நிலையில், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக பாசன பகுதி விவசாயிகள், மேலூர் ஒருபோக பாசன பகுதி விவசாயிகள் உள்ளிட்டோர் தங்கள் பகுதிகளுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, சிவகங்கை, ராமநாதபுரம் வைகை பாசன 1, 2 மற்றும் 3ஆம் பகுதி விவசாயிகளுக்காக நேற்று (நவ. 23) தண்ணீர் திறக்கப்பட்டது.

மேலும், அடுத்த மாதம் 8ஆம் தேதி வரை தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே பாசனத்திற்காக வைகை அணையில் வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வந்தது. தற்போது கூடுதலாக 4 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு உள்ளது.

இதனால் 6 ஆயிரம் கன அடி தண்ணீர் தற்போது வைகை ஆற்றில் இருந்து வெளியேறிக் கொண்டு உள்ளது. இதைத் தொடர்ந்து, வருகின்ற 8ஆம் தேதி வரை சுமார் 2 ஆயிரத்து 466 கன அடி தண்ணீர் வைகை ஆற்றில் திறக்கப்பட உள்ளது. தற்போது இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் வைகை ஆற்றில் ஓடிக் கொண்டு இருக்கிறது.

மேலும், வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர், பெருகி வளர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளால் மேற்கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோரங்களில் மூழ்கிய சாலையில் ஆபத்தான முறையில் பயணிகள் சென்று வருகின்றனர். மேலும், ஆரப்பாளையம் வைகை ஆற்றை ஒட்டியுள்ள சாலை நீரில் மூழ்கியுள்ளது. அதேபோல், யானைக்கல் கீழ்ப்பாலமும் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: திருக்கார்த்திகை தீபத் திருவிழாவில் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய சந்திரசேகரர் சாமி! பக்தர்கள் சாமி தரிசனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.