மதுரை: கன்னியாகுமரியைச் சேர்ந்த கென்சி என்ற மாற்றுத்திறனாளி பெண்மணி, திசையன்விளை கிராமத்தில் ரேடியோகிராஃபராக பணியாற்றி வந்ததார். அங்கு எக்ஸ்-ரே இயந்திரம் இல்லாததால், குண்டலம் அரசு மருத்துவமனைக்கு இடம் மாறுதல் செய்யப்பட்டுள்ளார். குண்டலம் பகுதி, குமரி மாவட்டத்தில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
இந்த நிலையில், தான் 8 மாத கர்ப்பிணியாக இருப்பதால், குண்டலம் பகுதிக்கு செல்வது மிகவும் கடினம், அதனால் தனது இட மாறுதல் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கென்சி மனுதாக்கல் செய்திருந்தார். தனது கணவரும் மாற்றுத்திறனாளியாக இருப்பதாக கென்சி குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, மனுதாரரும் அவரது கணவரும் மாற்றுத்திறனாளியாக உள்ளதோடு, மனுதாரர் தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருப்பதால், அதனைக் கருத்தில் கொண்டு மனுதாரரின் கணவர் பணியாற்றும் இடத்திற்கு அருகில், நெல்லை அல்லது குமரி மாவட்டத்தில் மனுதாரருக்கு பொருந்தும் வகையில் இடத்தை தேர்வு செய்து நீதிமன்றத்தில் தெரிவிக்க, தமிழ்நாடு ஊரக சுகாதாரத்துறை இயக்குநருக்கு உத்தரவிட்டு, வழக்கை வரும் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இதையும் படிங்க:கோயில்களில் மூத்த குடிமக்கள், கர்ப்பிணிகளுக்கு தனி வரிசைக்கோரிய மனு தள்ளுபடி