துணைவேந்தர் நியமனம் தொடர்பாக தீர்மானம் கொண்டு வந்ததால் மிரட்டல் வருகிறது என புகார்

author img

By

Published : Aug 12, 2022, 10:53 PM IST

துணைவேந்தர் நியமனம் தொடர்பாக தீர்மானம் கொண்டு வந்ததால் மிரட்டல்  பல்கலைக்கழக ஆட்சிப் பேரவை கூட்டத்தில் புகார்

மதுரையில் துணைவேந்தர் நியமனம் தொடர்பாக தீர்மானம் கொண்டு வந்ததால் மிரட்டல் விடுக்கப்படுகிறது என பல்கலைக்கழக ஆட்சிப் பேரவை கூட்டத்தில் புகார் அளிக்கப்பட்டது

மதுரை: மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆட்சிப்பேரவைக் கூட்டம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மு.வ.அரங்கில் இன்று(ஆக 12) நடைபெற்றது. இதில் துணைவேந்தர் ஜெ.குமார் தலைமை வகித்தார். கடந்த ஆட்சிப்பேரவைக் கூட்டத்துக்குப் பின்னர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் தொடர்பாக துணைவேந்தர் ஜெ.குமார் அறிக்கை வாசித்தார்.

இதைத்தொடர்ந்து ஆட்சிக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது. இதில் பல்கலைக்கழகத்தில் உள்ள துறைகளில் முதுகலை படிப்புகளுக்கு குறிப்பிட்ட சில துறைகளில் மட்டும் நுழைவுத்தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கை நடத்துவது. இதர துறைகளில் இளங்கலை படிப்பில் மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடத்துவது.

பல்கலைக்கழகத்தில் 2022-23 கல்வி ஆண்டில் புதிய இளங்கலை படிப்புகளாக பிஏ கூட்டுறவு (தமிழ் மற்றும் ஆங்கில வழி), கணினி அறிவியலில் செயற்கை நுண்ணறிவு, கிளவுட் கம்யூட்டிங் சைபர் செக்யூரிட்டி, அனிமேசன் மற்றும் கேம் டிசைனிங் ஆகிய பிரிவுகளில் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் நடத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கேள்வி நேரத்தில் ஆட்சிப்பேரவை உறுப்பினர்கள் பலர் பேசினர். உறுப்பினர் வேளாங்கண்ணி ஜோசப் பேசும்போது,
”பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வில் கலை மற்றும் அறிவியல் துறையில் இருந்து துணைவேந்தர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று கல்விப்பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதை தவறாகப் புரிந்துகொண்டு துறைத்தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று மிரட்டல் விடுக்கப்படுகிறது. பல்கலைக்கழக துறைத்தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரையும் கண்ணியத்துடன் நடத்துவதை பல்கலைக்கழக நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்” என்றார்.

மேலும், ”பல்கலைக்கழக நிதி நிலைமை மிகவும் மோசமாக உள்ளதால் மாத ஊதியமும் தாமதமாக வழங்கப்படுகிறது. நிதி நிலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் பதிவாளர், தேர்வாணையர் உள்ளிட்ட பொறுப்புகளில் 6 மாதத்துக்கு ஒரு முறை சுழற்சி முறையில் மூத்த பேராசிரியர்களை நியமிக்க வேண்டும். ஆட்சிப்பேரவை மற்றும் கல்விப்பேரவையில் இருந்து ஆட்சிக்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் வகையில் தேர்தல் நடத்த வேண்டும்” என்றார்.

மற்றொரு உறுப்பினர் சந்திரபோஸ் பேசுகையில், ”2006-க்கு பின்னர் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு எவ்வித பதவி உயர்வும் அளிக்கப்படவில்லை. எனவே பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துணைவேந்தர் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதிலளித்தனர். இதில் சில உறுப்பினர்கள் பேசும்போது துணைவேந்தர் குறுக்கிட்டு முழுமையாக பேசவிடாமல் செய்ததால் உறுப்பினர்கள் அதிருப்தி அடைந்தனர். கூட்ட விதிமுறைகளை மீறியதாக துணைவேந்தர் மீது ஆட்சிப்பேரவை உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

பல்கலைக்கழகத்தின் ஆட்சிப்பேரவைக் கூட்டத்தில் வைக்கப்படும் அஜெண்டாக்கள் அனைத்தும் ஆட்சிக்குழு மற்றும் கல்விப்பேரவைக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்ட பின்னரே ஆட்சிப்பேரவைக்கூட்டத்தில் தெரிவிக்கப்படும். ஆனால் வெள்ளிக்கிழமை நடந்த ஆட்சிப்பேரவைக்கூட்டத்தில் டேபிள் அஜெண்டாக்கள் என்று 12-க்கும் மேற்பட்ட அஜெண்டாக்களை துணைவேந்தர் வாசித்தார்.

இதுதொடர்பான நகல் ஆட்சிப்பேரவை உறுப்பினர்கள், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் என யாருக்கும் வழங்கப்படவில்லை. இதனால் அதில் என்ன தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது உறுப்பினர்கள் யாருக்கும் தெரியவில்லை. பல்கலைக்கழக நடைமுறையில் இதுவரை இல்லாத ஒன்றை பல்கலைக்கழக துணைவேந்தரே விதிகளை மீறிக்கொண்டு வந்தது உறுப்பினர்களிடேயே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: பக்தர்கள் வெள்ளத்தில் ஆடி வந்த அழகர்கோயில் தேர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.