10.5% வன்னியர் உள் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு

author img

By

Published : Sep 15, 2021, 5:12 PM IST

வன்னியர் உள் இட ஒதுக்கீடு

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தில் உள்ள 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு மட்டும் 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கின் மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

மதுரை: பரமக்குடியைச் சேர்ந்த பாலமுரளி, மேலூர் வழக்கறிஞர் ஸ்டாலின், உள்பட பலர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

அதில், "தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த மக்கள் உள்ளனர். மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்துக்கு மொத்தமாக 20 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

20 விழுக்காட்டில் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு ஒதுக்கீடு

தமிழ்நாடு அரசு சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு பிப்ரவரி 28ஆம் தேதி சட்ட மசோதா ஒன்றை நிறைவேற்றியது. அதன்படி பிற்படுத்தப்பட்டோருக்கான 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் வன்னியர் சமூகத்தினருக்கு 10.5 விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதற்கு தமிழ்நாடு முன்னாள் ஆளுநரும் ஒப்புதல் அளித்துள்ளார்.

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தில் மொத்தமாக உள்ள 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. 68 சமூகங்களைக் கொண்ட சீர்மரபினர்களுக்கு ஏழு விழுக்காடு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 40 சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு 2.5 விழுக்காடு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

40 சமூகங்கள் பாதிப்புக்குள்ளாகும் அச்சம்

இதனால், 40 சமூகங்களைச் சேர்ந்த மக்களின் கல்வி, வேலை அனைத்தும் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கதல்ல. முறையாக சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்திய பின்னரே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

ஆகவே, வன்னிய சமூகத்தினருக்கு 10.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ரத்து செய்யவும், அதன் அடிப்படையில் கல்வி நிறுவனங்கள், வேலைவாய்ப்புகளில் ஒதுக்கீடு வழங்க இடைக்காலத் தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

விசாரணை ஒத்திவைப்பு

இதே கோரிக்கையுடன் 20க்கும் மேற்பட்டோர் முன்னதாக மனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில், இந்த மனுவை தலைமை நீதிபதி அமர்வு விசாரணை செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் நீதிபதி துரைசாமி அமர்வு விசாரணைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தனர்.

இந்த அனைத்து வழக்குகளும் இன்று (செப்.15) நீதிபதி துரைசாமி, முரளி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் வழக்கு முதன்முறையாக தங்களுக்கு பட்டியலிடப்பட்டுள்ளதால் வழக்கின் விவரங்களை முழுமையாக படிக்கவேண்டும் எனக் கூறி வழக்கு விசாரணையை திங்கட்கிழமைக்கு (செப்டம்பர்20) ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க: வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு வழக்கு - நீதிபதி விலகல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.