எருதுவிடும் விழாவுக்கு அனுமதி வேண்டும்.. அரசின் தலையீடு கூடாது - ஓசூர் போராட்டக்காரர்கள்!

author img

By

Published : Feb 2, 2023, 3:46 PM IST

Updated : Feb 2, 2023, 5:08 PM IST

அனுமதி வேண்டும்.. அரசின் தலையீடு கூடாது - ஓசூர் போராட்டக்காரர்கள் கோரிக்கை!

ஓசூர் அருகே எருதுவிடும் விழாவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே முறையான அனுமதி கொடுக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஓசூர் அருகே எருதுவிடும் விழாவுக்கு முறையான அனுமதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டவரின் பேட்டி

கிருஷ்ணகிரி: ஓசூர் அடுத்த கோப்பசந்திரம் என்னும் இடத்தில் இன்று (பிப்.2) எருதுவிடும் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனால் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான இளைஞர்களும், நூற்றுக்கணக்கான காளை மாடுகளும் அழைத்து வரப்பட்டன. ஆனால், இதற்காக முறையாக அனுமதி வழங்கப்படவில்லை எனக்கூறி, காவல் துறையினர் அனைவரையும் விரட்டினர்.

இதனால் சாலை மறியலில் ஈடுபட்ட இளைஞர்களை காவல் துறையினர் தடுத்ததால், காவல் துறையினர் மீது கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டனர். அதேநேரம் கல்வீச்சு தாக்குதலால் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சேதமடைந்தது. மேலும் தேசிய நெடுஞ்சாலையில் கற்களைக் குவித்த இளைஞர்கள், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் இளைஞர்கள் தாங்களாகவே எருதுவிடும் விழாவை நடத்த முயன்றனர். இதனிடையே எருதுவிடும் விழாவிற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. இருப்பினும், போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து செல்லாத இளைஞர்களால் 3 மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. தற்போது கிருஷ்ணகிரி சரக டிஐஜி சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளார்.

இதுகுறித்து மல்லேஸ் என்பவர் கூறுகையில், “எங்களுக்கு 11 மணியளவில் எருதுவிடும் விழாவுக்கு அனுமதி கொடுக்கப்பட்டதாக செய்தி வந்தது. எனவே, ஆயிரக்கணக்கான இளைஞர்கள், காளைகள் ஆகியவற்றை அழைத்துக் கொண்டு வந்தோம். இதனிடையே இரவு 2 மணியளவில் அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் வந்தது. எனவே, எங்களை விழா நடத்த அனுமதிக்கவில்லை.

இது அராஜகமானது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இங்கு கூடி சாலை மறியலில் ஈடுபட்டோம். துணை ஆட்சியர் மட்டும் வந்து பார்வையிட்டுச் சென்றுள்ளார். ஆனால் மாவட்ட ஆட்சியர் வரவில்லை. மாவட்ட ஆட்சியர் வந்து, கிருஷ்ணகிரியில் எருதுவிடும் விழா நடத்த முறையான அனுமதி வழங்க வேண்டும். அது மட்டுமல்லாமல், இதில் காவல் துறையினரின் தலையீடு இருக்கக்கூடாது” என்றார்.

இதையும் படிங்க: Hosur violence: எருதுவிடும் விழாவுக்கு அனுமதி கேட்டு போராட்டம்.. ஓசூர் நெடுஞ்சாலையில் வாகனங்கள் சூறையாடல்!

Last Updated :Feb 2, 2023, 5:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.