ETV Bharat / state

கிராம நிர்வாக அலுவலரை தாக்கிய திமுக பிரமுகர் கைது

author img

By

Published : Dec 31, 2022, 2:21 PM IST

திமுக பிரமுகர் கைது
திமுக பிரமுகர் கைது

ஓசூர் அருகே கிராம நிர்வாக அலுவலரை தாக்கிய திமுக பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே உள்ள சேவகானப்பள்ளி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக ராமசாமி என்பவர் பணியாற்றி வருகிறார். சேவகானப்பள்ளி அருகே உள்ள கொத்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்த திமுக பிரமுகர் சீனிவாசன் (46) என்பவர் கிராம நிர்வாக அலுவலர் ராமசாமிக்கு போன் செய்து அங்குள்ள கல்குவாரி மற்றும் அந்த வழியாக செல்லும் டிப்பர் லாரிகளில் மாமூல் வசூல் செய்து தர வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு கிராம நிர்வாக அலுவலர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சீனிவாசன் சிட்டா அடங்கள் சம்பந்தமாக, கிராம நிர்வாக அலுவலருக்கு போன் செய்துள்ளார், அப்போது கிராம நிர்வாக அலுவலர், தான் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியில் உள்ளதாகவும், நாளை அலுவலகத்திற்கு வாருங்கள் என்றும் கூறியுள்ளார்.

அதன் பின்னர் நேற்று (டிசம்பர் 30) கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்ற சீனிவாசன் கிராம நிர்வாக அலுவலர் ராமசாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்படவே சீனிவாசன் ராமசாமியை சட்டையை பிடித்து இழுத்து கையில் தாக்கியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் ராமசாமி ஓசூர் வட்டாட்சியர் கவாஸ்கருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதனைத்தொடர்ந்து அவர் பாகலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் கிராம நிர்வாக அலுவலர் தாக்கியதாக திமுக பிரமுகர் சீனிவாசனை கைது செய்தனர்.

இதையும் படிங்க: தனியாக வசிக்கும் பெண்களிடம் சில்மிஷம்.. 2 பேர் கைது..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.