கரூர் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டார். கரூர் மாவட்டத்தில் 2021-22ஆம் கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு பயின்ற 8,477 மாணவ மாணவிகளுக்கு ரூபாய் 4 கோடி 30 லட்சம் மதிப்பில் மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, "கரூர் மாவட்டத்தில் ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றும் 5,000 தொழிலாளர்களுக்கு முதல் கட்டமாக குடியிருப்பு வீடுகள் அரசு சார்பில் கட்டித் தர வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. கரூரில் உற்பத்தியான பல நூறு கோடி ரூபாய் மத்திப்பிலான ஜவுளிகள் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்ததால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படாமல் தேங்கியுள்ளது. இது தமிழ்நாடு சார்ந்த பிரச்சினை அல்ல. ஒன்றிய அரசு தீர்க்க வேண்டிய பிரச்சனை.
பாஜக மாநில தலைவர் வேலை இல்லாமல் உள்ளார். படித்தவர் என்று கூறும் அவர் படித்த முட்டாளை போல செயல்படுகிறார். அவரைப் போலவே கரூர் மாவட்ட தலைவரும் செயல்படுகிறார். உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் சாராம்சம் என்ன, அதில் கூறப்பட்ட கருத்துக்கள் என்ன என்று தெரியாமலேயே கருத்து கூறும் இவர்கள், ஒன்றிய அமைச்சரின் மகன் விவசாயிகள் போராட்டத்தின் போது காரை ஏற்றி கொன்றதற்காக அவரை இவர்கள் ஏன் பதவி விலக கூறவில்லை?.
என் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் ஏற்கனவே நடைபெற்ற விசாரணை சரிவர நடத்தப்படவில்லை. ஆரம்ப கட்டத்தில் இருந்து முறையாக விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதே தவிர, உயர் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று அதில் கூறப்படவில்லை.
நீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து தெரிவிப்பவர்கள் தீர்ப்பின் நகலை முழுமையாக படித்துவிட்டு கருத்து தெரிவிக்க வேண்டும். தமிழ்நாடு பாஜக தலைவர் போல படிக்க தெரியவில்லை என்றால் சட்டம் படித்த வழக்கறிஞரிடம் கேட்டு தீர்ப்பில் கூறப்பட்டுள்ள விவரங்களை தெரிந்து கொண்டு பேச வேண்டும் என்றார்.
இதையும் படிங்க: கூட்டணியில் கை வைத்த திமுக.. இ.கம்யூனிஸ்ட்டுக்கு பறிபோன பதவி...