சாவிலும் இணைபிரியாத தம்பதியினர்...

author img

By

Published : Aug 25, 2022, 5:50 PM IST

சாவிலும் இணைபிரியா ஐம்பது வருடத் தம்பதியினர்...!

திருமணமாகி 50 ஆண்டுகள் காலம் இணைபிரியாமல் வாழ்ந்த தம்பதியர் மரணத்திலும் இணைந்தது சோகநிகழ்விலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர்: காதல் எனும் உணர்ச்சியின் புரிதலும், அணுகுமுறைகளும் பல இளைஞர்களால் சரியாகப் புரிந்துகொள்ளமுடியாத தற்காலச்சூழலில் 50 ஆண்டுகள் திருமண வாழ்க்கையில் வாழ்ந்தத் தம்பதியினர் சாவிலும் இணைபிரியாது ஒரே நேரத்தில் இயற்கை எய்திய சம்பவம் சோகத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கரூர் கடைவீதி அருகே உள்ள கச்சேரி பிள்ளையார் கோயில் தெரு பகுதியில் வசித்துவருபவர், ராமகிருஷ்ணன்(76). கரூர் வைஸ்சியா வங்கியில் அலுவலக உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஸ்ரீலட்சுமி(69) இவர்களுக்குத் திருமணமாகி 50 ஆண்டுகளுக்கும் மேலாகிறது.

இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இருவரும் திருமணமாகி மூத்த மகள் சுஜாதா ஈரோட்டிலும், இளைய மகள் சித்ரா பாண்டிச்சேரியில் உள்ள திருநள்ளாற்றிலும் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். ராமகிருஷ்ணனும்,லட்சுமியும் கரூர் கடைவீதி பகுதியில் அமைந்துள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.

லட்சுமி கடந்த 10 ஆண்டுகளாக உடல் நலக்குறைவு காரணமாக வீட்டில் படுத்த படுக்கையாக இருந்து வந்துள்ளார். கணவர் ராமகிருஷ்ணன், தன்னுடைய பணி நிறைவு காலத்திற்குப்பிறகு மனைவி லட்சுமிக்கு சமையல் உள்ளிட்ட பணிவிடைகள் செய்து வந்துள்ளார்.

ராமகிருஷ்ணன் கடந்த ஐந்து ஆண்டுகளாக உயர் ரத்த அழுத்தம், மற்றும் இதய நோயினால் அவதியுற்று வந்துள்ளார். இந்நிலையில் ஆகஸ்ட் 24ஆம் தேதி மதியம் வீட்டில் சமையல் அறைக்குச்சென்றபோது மயங்கி விழுந்துள்ளார் . சத்தம் கேட்ட அவரின் மனைவி ஸ்ரீலட்சுமி அருகில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்துவிட்டு, அவரும் அதிர்ச்சியில் மயங்கி விழுந்துள்ளார்.

அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் மயங்கி கிடந்த இருவரையும் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர், இருவரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். திருமணமாகி 50 ஆண்டு காலம் இணைபிரியாமல் வாழ்ந்த தம்பதியினர் இறப்பிலும் பிரியாமல் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இதுகுறித்து கரூர் நகர காவல் உதவியாளர் அப்துல்லா வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று(ஆக.25) உடற்கூராய்வு நிறைவு பெற்று இரண்டாவது மகள் சித்ராவிடம் இருவரின் உடல்களும் ஒப்படைக்கப்பட்டது.

இறுதிச்சடங்கு மேற்கொள்வதற்காக திருநள்ளாறு பகுதிக்கு இளையமகள் சித்ரா உடலைப்பெற்று சென்றார். இணை பிரியாமல் வாழ்ந்த தம்பதியர்கள் சாவிலும் பிரியாமல் மரணித்த நெகிழ்ச்சியான சம்பவம் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

இதையும் படிங்க: கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக லிப்டுக்குள் சிக்கிய பத்து பேர்...தீயணைப்பு துறையினர் துரித நடவடிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.