கால்நடை மருந்தகத்திற்குள் போதிய வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் தேக்கம்

author img

By

Published : Aug 24, 2021, 9:17 AM IST

Rainwater stagnation

க. பரமத்தியில் செயல்படும் கால்நடை மருந்தகத்திற்குள் போதிய வடிகால் வசதி இல்லாததால் மழை நீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் நோயைத் தீர்க்க கொண்டுசெல்லும் கால்நடைகளுக்கு வேறு ஏதாவது தொற்று நோய்ப் பரவும் இடர் உள்ளதாக கால்நடை வளர்ப்போர் அச்சமடைந்துள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் எட்டு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதில் க. பரமத்தி ஒன்றியத்தில் மட்டும் சுமார் 30 ஊராட்சிகள் உள்ளன. இவற்றின் க. பரமத்தி, பவித்திரம், குப்பம், புன்னம்சத்திரம், கார்வழி, தென்னிலை, சின்னதாராபுரம், துலுக்கம்பாளையம், எலவனூர், முடிகணம், கோடந்தூர் ஆகிய 11 கால்நடை மருந்தகங்கள் செயல்பட்டுவருகின்றன.

ஒன்றிய ஊராட்சிகளில் உள்ள குக்கிராமங்களில் விவசாயத்தில் மிகவும் பின்தங்கிய வறட்சிப் பகுதியாக க. பரமத்தி சுற்றுப்பகுதி உள்ளது. இங்கு கிணற்று நீரைக் கொண்டு விவசாயம் செய்தும் கால்நடைகள் ஆடு, மாடு, எருமை, கோழி போன்ற கால்நடைகளை விவசாயிகள் வளர்த்துவருகின்றனர். எனவே கால்நடை வளர்ப்போருக்காக மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் அவ்வப்போது மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுவருகின்றன.

இருப்பினும் க. பரமத்தி பகுதியில் கால்நடைகள் அதிகம் வளர்க்கப்படுவதால் கால்நடைகளுக்கு நோய்கள் வரும் காலங்களில் இரவு நேரங்களில் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் கால்நடைகளை மருத்துவமனைக்கு அனுப்பப்படும் சூழ்நிலை உள்ளது. இதனால் சில சமயங்களில் நோய் தாக்கும் கால்நடைகளை விவசாயிகள் தொலை தூரம் கொண்டுசெல்வதற்குள் அவை இறந்துவிடும் சூழ்நிலையும் உள்ளது.

இதனால் கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகளுக்குப் பொருளாதார இழப்பு ஏற்பட்டு பெரிதும் சிரமப்பட்டுவருவதால் அப்பகுதி கால்நடை விவசாயிகள் இந்த கால்நடை மருந்தக மையத்தை மருத்துவமனையாகத் தரம் உயர்த்த வேண்டுமென ஒரு சில விவசாயிகள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

இந்த நிலையில் க. பரமத்தி கால்நடை மருந்தக மையத்தில் போதிய மழைநீர் வடிகால் வசதி இல்லை. இதனால் கடந்த ஐந்து ஆண்டுகளாகவே எப்போது லேசான மழை அல்லது கனமழை, காலங்களில் கால்நடை மருந்தகத்திற்குள் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்பது வழக்கமாக உள்ளது. நீண்ட நாள்களாக உள்ள இதற்கான வடிகால் வசதி ஏற்படுத்துவதில்லை.

தேங்கியுள்ள மழைநீர் தானாகவே வற்றும்வரை அப்படியே விடுவதால் சேறும் சகதியுமாக இருப்பதை வாடிக்கையாக உள்ளது. ஆகஸ்ட் 23ஆம் தேதி மதியம் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையின் காரணமாக பரமத்தி கால்நடை மருந்தக மையத்தில் மழைநீர் தேங்கி வெள்ளநீர் போல காட்சியளித்தது.

இதனால் கால்நடைகளுக்கு ஏற்படும் நோயைக் குணப்படுத்த கால்நடை மருத்துவ நிலையத்திற்கு கொண்டுவந்தால் அங்கு மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக இருப்பதால் வேறு ஏதாவது தொற்று, காய்ச்சல் நோய்கள் பரவிவிடுமோ எனக் கால்நடை வளர்ப்போர் அச்சமடைந்துள்ளனர்.

எனவே மழைக் காலங்களில் மழைநீர் தேங்கி தொற்று நோயை உண்டாக்கும் இந்த மருந்தகத்தை கரூர் மாவட்ட அலுவலர்கள் பார்வையிட்டு இதற்கான நிரந்தரத் தீர்வினை ஏற்படுத்த முன்வர வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.