கரூர்: கரூர் மாவட்ட காவல் புதிய கண்காணிப்பாளராக சென்னையில் பணியாற்றிய சுந்தரவதனம் நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து நேற்று மாலை (ஜீன்10.) கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அவர் பதவி ஏற்றுக் கொண்டார்.
முன்னதாக மாவட்ட காவல்துறை சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மாவட்ட காவல் அலுவலகத்தில் பணியாற்றும் பல்வேறு துறை சார்ந்த காவல்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுந்தரவதனம், "கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கும், தொழில் நகரமான கரூரில் தொழில் சார்ந்த பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளித்து, குறிப்பாகத் தொழிலாளர்களை வாட்டி வதைக்கும் கந்துவட்டி பிரச்சனை தொடர்பான குற்றங்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நவீன காலத்தில் ஏற்படும் இணைய வழிக் குற்றங்கள் ஆன சைபர் கிரைம் தொடர்பான குற்றங்களைத் தடுக்க பொது மக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அது தொடர்பான புகார்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கரூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைப்பதற்கும் அதிகாரிகளைப் பொதுமக்கள் எவ்வித அச்சமும் இன்றி எளிமையாக சந்திப்பதற்கான வாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும்.
குறிப்பாகப் பள்ளி மாணவர்கள் தொடர்பான பிரச்சனையில் தனிப்பட்ட முறையில் தான் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார். கரூர் மாவட்டத்தில் இதுவரை கண்டுபிடிக்க முடியாத பல வழக்குகள் நிலுவையில் உள்ளது என செய்தியாளர்கள் கேட்டதற்கு, காவல்துறை மூத்த அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து விரைவில் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: லாக்-அப் மரணங்கள்: காவல் துறையை வறுத்தெடுத்த உயர் நீதிமன்றம்!