ETV Bharat / state

Attack: கிறிஸ்தவஅமைப்பினர் வாகனத்தைக் குறிவைத்து இந்து முன்னணியினர் தாக்குதல்!

author img

By

Published : Dec 19, 2021, 3:54 PM IST

இந்து முன்னணியினர் தாக்குதல்
இந்து முன்னணியினர் தாக்குதல்

Attack: கரூரில் கிறிஸ்தவஅமைப்பினர் சென்ற வாகனத்தை வழிமறித்து கார் கண்ணாடியை உடைத்து தாக்குதலில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த நிர்வாகி கந்தசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.

கரூர்: கிறிஸ்துமஸ் பண்டிகையை வருவதையொட்டி, கரூரில் உள்ள சர்வதேச கிதியோன் இன்டர்நேஷனல் என்ற கிறிஸ்தவ அமைப்பின் மூலம் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நீதிபோதனை அடங்கிய புத்தகங்களை இலவசமாக வழங்குவதற்காக ஆனந்தராஜ், மங்கலராஜ், மனோகரன், நிர்மலா, பழனியம்மாள் ஆகிய ஐந்து பேர் நேற்று (டிசம்பர் 18) காரில் சென்றுள்ளனர்.

கரூர்-ஈரோடு சாலையில் உள்ள புன்னம்சத்திரம் பகுதியில் நேற்று மாலை சென்றபோது, அங்குவந்த இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த நிர்வாகி கந்தசாமி மற்றும் சிலர், அவர்கள் சென்ற காரை முற்றுகையிட்டு மதமாற்றம் செய்வதாகக் கூறி தகராறில் ஈடுபட்டதுடன் கார் கண்ணாடியையும் உடைத்துள்ளனர்.

இந்து முன்னணி நிர்வாகி கைது

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அரவக்குறிச்சி டிஎஸ்பி முத்தமிழ்செல்வன் மற்றும் வேலாயுதம்பாளையம் காவல் துறையினர் இரு தரப்பையும் விசாரணைக்காக வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இந்தநிலையில் இன்று(டிச.19) காலை இந்து முன்னணி நிர்வாகி கந்தசாமி கைது செய்யப்பட்டார்.

கந்தசாமி கைது செய்யப்பட்டதை எதிர்த்து இந்து முன்னணியினர் கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புகழூர் தவிட்டுப்பாளையம் சாலையில் அமர்ந்து காவல் துறைக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

தொடர் தாக்குதல்

அகில இந்திய கிறிஸ்தவ முன்னேற்ற சங்கத்தின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் ராஜேந்திரன் இதுகுறித்து கூறுகையில், "கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி மாலை கரூர்-ஈரோடு சாலையில், ஈரோடு நோக்கி சென்ற மதபோதகர் பன்னீர்செல்வம் வாகனத்தை இந்து சேனா என்ற அமைப்பைச் சேர்ந்த சரவணன், பன்னீர் செல்வம் சென்ற வாகனத்தை வழிமறித்து கார் கண்ணாடியை உடைத்து தகராறில் ஈடுபட்டார்.

தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. கிறிஸ்தவஅமைப்பினர் வாகனத்தை குறிவைத்து தாக்குதல் நடந்துள்ளது.

இந்து முன்னணி போன்ற அமைப்பினர் மத மோதல்களை உண்டாக்க முயற்சிக்கின்றனர். மத நல்லிணக்கத்திற்குப் பெயர்போன தமிழ்நாட்டில் இது போன்ற விரும்பத்தகாத செயல்கள் நடைபெறுவதைத் தடுக்க காவல் துறையும், தமிழ்நாடு அரசும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் : ஒரு நபர் ஆணையம் தீவிர விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.